6/29/2024

மற்றும்

விழாமலருக்குப் படைப்புகள் வேண்டிய விளம்பரநறுக்கு, தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கான வாட்சாப்குழுமத்தில் காணக்கிடைத்தது. ஏராளமான பிழைகள் இருந்தன. உடனே அவற்றைச் சுட்டிக் காண்பித்து, மா.நன்னன் அவர்களுடைய கட்டுரைகளில் இருந்து சிலவற்றையும் சான்றாகக் கொடுத்திருந்தோம். காரணம், ’மா.நன்னன் நூற்றாண்டு விழா’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இடம் பெற்ற நாள் மார்ச் மாதம் இரண்டாம் நாள்.

தற்போது 'அருவி' எனும் பெயரில் இதழ் வெளியாகி இருக்கின்றது. படங்களை நீக்கிப் பார்த்தால் ~20 பக்கங்கள் வரலாம். அந்த 20 பக்கங்களில், “மற்றும்” எனும் சொல், 61 முறை இடம் பெற்றிருக்கின்றது. படங்களுக்குள் இருக்கும் “மற்றும்”களைக் கணக்கிலெடுத்தால் இன்னும் கூடுதலாய் வரும். விழாமலரில் எத்தனை முறை அச்சொல் இடம் பெற்றிருக்கப் போகின்றதென்பதைக் காண ஆவலாய் இருக்கின்றேன். இஃகிஃகி.

o0o0o0o0o

‘மற்றும்’ என்னும் சொல் அங்கு தேவையற்றது. ’தேவையற்ற அச்சொல் அங்கு இருப்பதால் அங்கு இருக்க வேண்டிய ஒரு சொல்லுக்கு வாழ்வு போய்விடுகின்றது’ எனக் குறிப்பிட்டிருக்கின்றார் மா.நன்னன். அப்படிப் பறிபோகும் சொற்கள்தாம் எவை?

ஆங்கிலத்திலே, பெயர்களை வரிசையாகச் சொல்லி ’அண்டு’ இட்டுக் குறிப்பதால் அந்த வரிசை அத்தோடு முடிந்ததெனக் கொள்வது மரபு. அதே மரபையொட்டித்தான் இந்த ’மற்றும்’ என்கின்ற பிறமொழிக் கலப்பு தமிழ்மரபையும் சொற்களையும் சிதைக்கின்றது. எப்படி?

மா, பலா, வாழை முதலான பழங்கள் வாங்கி வந்தான் பழமைபேசி. மா, பலா, வாழை உள்ளிட்ட இன்னும் சில(முதலிய) பல பழங்களை வாங்கி வந்தான் எனும் பொருளைக் குறிக்கின்றது இச்சொற்றொடர்.

மா, பலா, வாழை ஆகிய பழங்கள் வாங்கி வந்தான் பழமைபேசி. ’ஆகிய’ எனும் சொல், வரிசைப்பட்டியலை நிறைவு செய்து விடுகின்றது. குறிப்பிடப்பட்டவை மட்டுமே, அதற்கு மேல் எதுவுமில்லை.

மா.நன்னன் அவர்களின் பெயர், அறிவிப்பு நறுக்கில் இடம் பெற்றிருப்பதாலே இதையெல்லாம் நாம் பேச வேண்டியதாயிருக்கின்றது! -பழமைபேசி Dated: March 2, 2024

o0o0o0o0o

"கணக்கு மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடங்களில்‌ அவன்‌ தேறவில்லை".

"திருச்சி மற்றும்‌ தஞசாவூர்‌ மாவட்டங்களில்‌ மழை பெய்திருக்கிறது".

மேற்காணப்பெறும்‌ இரு தொடர்களிலும்‌ பயன்படுத்தப்‌பட்டிருக்கும்‌ 'மற்றும்‌' என்னும்‌ சொல்‌ அங்குத்‌ தேவையற்றது. தேவையற்ற அச்‌சொல்‌ அங்கு இருப்பதால்‌ அங்கு இருக்கவேண்டிய ஒரு சொல்லுக்கு வாழ்வு போய்‌ விடுகிறது. மேலும்‌ தமிழ்‌ மொழியினுடைய ஒரு சிறப்‌பியல்பும்‌ அழிந்து விடுகிறது.

இப்படி எழுதும்‌ வழக்கம்‌ அண்மைக்‌ காலத்தில்‌ தமிழில்‌ மேற்‌கொள்ளப்பட்டு வருவதாகும்‌: இப்‌புதிய வழக்கம்‌ ஏற்பட்டதற்குக்‌ காரணம்‌ நமக்குள்ள ஆங்கிலத்‌ தொடர்புதான்‌. ஆங்கிலத்தில்‌ ’அண்டு’ என்னும்‌ சொல்லைப்‌ பயன்‌படுத்துகிற நாம்‌ அதே முறையில்‌ அச்‌சொல்லை மொழிபெயர்த்து 'மற்றும்‌' என்னும்‌ சொல்லாகத்‌ தமிழில்‌ பயன்படுத்தத்‌ தொடங்கி விட்டோம்‌. இந்த வழக்கம்‌ பண்டைய தமிழ்‌. இலக்கண இலக்கியங்களிலோ, இடைக்‌ கால இலக்கண இலக்கியங்களிலோ, பிற்கால இலக்கண இலக்கியங்களிலோ இல்லை. இக்‌கால இலக்கியங்கள்‌, செய்தித்தாள்கள்‌, இதழ்கள்‌, அலுவலகக்‌ கடிதப்‌ போக்குவரத்துகள்‌ போன்றவற்றில்‌ மட்டுமே இவ்‌வழக்கம்‌ காணப்படுகிறது.

அச்‌சொல்‌ தேவையற்றதாயின்‌ அப்‌பொருளை வேறு எப்படித்‌ தெரிவிக்க முடியுமென்றால்‌, அதற்கு இலக்கிய இலக்கணங்களைத்‌ தேடிப்‌ போக வேண்டியதில்லை. கல்லாத தமிழ்ப்‌ பொது மக்கள்‌ அப்படிப்பட்டவற்றை எப்படிக்‌கூறுகிறார்கள்‌ என்று பார்த்தாலே போதும்‌. சான்றாக அவனும்‌ நானும்‌, நேற்றும்‌ இன்றும்‌, சோறும்‌ குழம்பும்‌ என்பனவற்றைக்‌ காணலாம்‌. மேலும்‌ அவர்கள்‌ 'உம்‌' என்னும்‌ அவ்‌விடைச்‌ சொல்லைப்‌ பயன்‌ படுத்தாமலேயே அத்தகைய தொடர்களின்‌ பொருள்‌ சிறிதும்‌ மாறாமல்‌ வெளிப்படுத்துவதையும்‌ காணலாம்‌.

சான்றாகப்‌ பூரிக்‌ கிழங்கு, இராப்பகல்‌, வம்பு தும்பு போன்றவற்றைக்‌ கூறலாம்‌. இத்‌ தொடர்களில்‌ 'உம்‌' என்னும்‌ இடைச்‌ சொல்‌ இல்லாமலேயே அச்சொல்‌ இருந்தால்‌ அங்கு என்ன பொருள்‌ கிடைக்குமோ அதே பொருளை ஏனைய இரண்டு சொற்களும்‌ சேர்ந்த சேர்க்கைச்‌ சிறப்பால்‌ எளிதாகவும்‌ தெளிவாகவும்‌ ஐயந்‌திரிபறவும்‌ பெற்றுவிட முடிகிறது. ஆகவே "உம்‌: போன்ற இடைச்‌சொற்களைப்‌ பயன்படுத்தியும்‌ அவ்விடைச்‌ சொல்‌ இல்லாமல்‌ வரும்‌ தொடர்களில்‌ தொகை ஆற்றலாலும்‌ பெறப்படும்‌ பொருளை ’மற்றும்‌' என்னும்‌ வேறொரு சொல்லைக்‌ கொண்டு பெற வைக்க முயல்வது தேவைதானா? நல்லதுதானா? என்பதை எல்லோரும்‌ எண்ணிப்‌ பார்க்க வேண்டும்‌. நாம்‌ 'மற்றும்‌” என்னும்‌ சொல்லைத்‌ தொடர்ந்து பயன்படுத்திக்‌ கொண்டிருந்தால்‌ விரைவில்‌, பூரி மற்றும்‌ கிழங்கு, இட்டிலி மற்றும்‌ சட்டினி என்றெல்லாம்‌ கூட பேசவும்‌ எழுதவும்‌ வேண்டி வந்துவிடும்‌. -மா.நன்னன், தவறின்றித் தமிழ் எழுதுவோம், பக்கம் 20.

o0o0o0o0o

We all need people who will give us feedback. That's how we improve. -Bill Gates

-பழமைபேசி.

No comments: