6/28/2024

பேரின்பம்

அது ஒரு காலம். யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். கையில் அவ்வளவாகப் பசை இருக்காது. ஒவ்வொரு டாலரும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் அங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் C/C++ வகுப்பு எடுப்பதன்வழி மாதம் $350 கிடைக்கும். பெரிய பணம் அது. அது போக ஊரிலிருந்து குடிவரவாக வந்திருப்பவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன்வழி அவ்வப்போது வயிறார சாப்பாடுகிடைக்கும். சனிக்கிழமை மாலையானால், மார்க்கம் ரோட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரது வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம்.

அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெளியில் செல்வது போவதென இருப்பர்.

எப்போதாவது ஒருநாள், டாலர் ஸ்டோர்களில் ரெண்டு டாலர், மூன்று டாலருக்கு பையனுக்கு ஏதாவது விளையாட்டுப் பொருள் வாங்கிப் போவேன். அப்படித்தான் ஒருநாள் “கார்” ஒன்று வாங்கிப் போனேன். அவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி.

அடுத்தடுத்த வார ஈறுகள் சென்ற போதெல்லாம் கவனித்தேன். அந்த காரின் பெட்டியை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்பாட்டுக்கு. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”. அடுத்தடுத்த வாரங்கள். அந்தப் பெட்டி அடிவாங்கி, அழுக்காகி, நைந்தே போயிருந்தது. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”.

அடுத்தவாரம். சென்றமுறை சிவப்புவண்ணக்கார். இம்முறை நீலவண்ணம் வாங்கிக்கொள்ளலாமென வாங்கிக் கொண்டோம். பிரித்தெடுத்து, காரை பையில் வைத்துக் கொண்டு, பெட்டியை மட்டும் பிரிக்காதபடிக்கு மீண்டும் ஒட்டி, கொண்டு போய்க் கொடுத்தோம். ஒரே சிரிப்பு. ஓடோடி வந்தான். வாங்கி உள்ளே பார்த்தான். தூக்கிவீசி விட்டு, மீண்டும் பழைய பெட்டியையே ஓட்டலானான்.

நமக்குப் படு ஏமாற்றம். அண்ணன் பார்த்துச் சிரித்தார். நான் பையைத் திறந்து, புதுக்காரை வெளியில் எடுத்துக் கொடுத்தேன். அவன் கண்டுகொள்ளவே இல்லை. பெட்டிக்குள் வைத்து, புதிதாய்க் கொடுப்பது போலக் கொடுத்தும் பார்த்தேன். கண்டுகொள்ளவே இல்லை. அந்த வாரத்தங்கல் பெருந்துக்கமாகப் போய்விட்டது நமக்கு. அண்ணன் சொன்னார், “மணி, எடுத்துட்டுப் போயி ரிட்டர்ன்பண்ணிட்டு, ரெண்டொரு வாரம் கழிச்சி வேற எதனா வாங்கியாங்க, செரி ஆயிருவான்”.

ஒருமாதமே ஆகியிருக்கும். மஞ்சள்வண்ணக்கார், பதினைந்து டாலர்களுக்கு, ரிமோட்டுடன், கனடியன் டைர் எனும் கடைக்குச் சென்று தனிக்கவனத்துடன் வாங்கி வந்தேன். மனசெல்லாம் உலுக்கம். என்ன ஆகுமோ ஏது ஆகுமோவென.

“தம்பி, இங்கபாரு, இந்தவாட்டி என்னானு”. அமைதியாகக் கிட்ட வந்தான். கையில் வாங்கி, எடையைக் கணித்தான். உலுக்கினான். உட்கிடை இருப்பதை உணர்ந்து கொண்டான். இந்தப் பெட்டி, பளபளவென உயர்தரத்தில் இருப்பதைக் கவனித்துக் கொண்டான். சமையலறையில் இருக்கும் அவனது அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சமையலறைக்குள் போனான். வெளியில் வந்தான். பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே, படுக்கையறைக்குள் போனான். “அம்மா, இங்க வாங்க நீங்க”. கொஞ்ச நேரத்தில் முன்னறைக்கு வந்தான், வெறும் பெட்டியோடு. தரையில் ஓட்டுபவன், பக்கவாட்டில் சுவர்களினூடாக ஓட்டினான், ஓட்டினான், ஓட்டிக்கொண்டேவும் இருந்தான். சாப்பிடக் கூப்பிட்டாலும் அவனுக்கு வர விருப்பமில்லாது, ஓயாமல் ஓட்டிக் கொண்டே இருந்தான்.

“தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள பத்திரமா இருக்கு”.

புரியவே இல்லை. “இதென்னுங்ணா இது? புதுக்காரு, இதுக்கும் ரிமோட் காரு, இப்படிப் பண்றானே?”

“அது மணீ, சந்தோசம்ங்றது கார்ல இல்ல. நம்மகிட்டக் கார் இருக்குங்றதுல இருக்கு சந்தோசம். நீங்க வாங்க சாப்ட்லாம்”.

-பழமைபேசி.

2 comments:

வலிதாங்கி said...

'நம்மிடம் இருக்கிறது' என்பதில் உள்ளது மனநிறைவு அதைப் பயன்படுத்துவதில் இல்லை.
நல்ல உளவியல் கதை!

பழமைபேசி said...

நன்றிங்க.