12/23/2022

மாயக்கணக்கும் மெய்க்கணக்கும்

’அடுத்தவர் சாப்பாட்டை நீ எப்படிக் குறை கூறலாம்? அப்படியா, இப்படியா?’யென கொந்தளிப்போடு அணுகினார். புரிந்து விட்டது. ஏதோவொரு மாயக்கணக்கொன்று நம்மைத் துரத்திக் கொண்டு வந்திருக்கின்றதெனப் புரிந்து விட்டது. ஒருவருடைய உடை, உணவு, உருவம் குறித்துக் கருத்துரைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்லயெனும் கருத்துடையவர்களல்லவா நாம்?

சொல்லப்பட்டது இதுதான், “What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!”. இதில் எங்கும் நாம் எந்த உணவு குறித்தும் சொல்லவில்லை. எழுதப்பட்டதற்குத்தான் நாம் பொறுப்பேற்க முடியும்; புரிந்து கொள்ளப்பட்டதற்கெல்லாம் நாம் பொறுப்புடையவர் அல்லர். I am only responsible for What I Say, Not for what you understand.

What you eat, how you are! இன்னமும் இந்தக் கருத்தில் ஊன்றியே இருக்கின்றோம். ஆமாம், நாம் உண்ணும் உணவே நாம் எப்படி இயங்குகின்றோமென்பதைத் தீர்மானிக்கின்றது. எப்படி?

பலதரப்பட்ட சத்துகள் உள்ளடங்கிய உணவை உட்கொள்கின்றோம். உடல் சமநிலை கொண்டு இயங்கத் தலைப்படுகின்றது. ஏதோவொன்று கூடவோ குறையவோ உண்கின்றோம். உடலில் இருக்கின்ற பல்வேறு உறுப்புகளும் பல்வேறு வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. உடல் என்பதே ஒரு வேதிச்சாலைதான். குறிப்பிட்ட வேதிப்பொருள் கூடும் போதோ, குறையும் போதோ ஏதோவொரு உறுப்புக்குப் பணிச்சுமை கூடும் அல்லது அந்த உறுப்பின் செயல் குன்றும். கோளாறு(கள்) தோன்றுகின்றன. அந்தக் கோளாறு மனத்தைக் குலைக்கின்றது. சினம், எரிச்சல், உறுதியின்மை, தொய்வு, சோகை இப்படியான உணர்வுகளில் ஏதோவொன்று தலையெடுக்கின்றது. Now read it again. What you eat, how you are!

இன்று வீட்டில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு.  அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு சிறு நெகிழிக்குமிழி இருக்கக் கண்டேன். “என்ன இது?” “அதா, ஒரே அசிடிட்டி. ஏண்ட்டாசிட் போட்டு ஆஃபிசுக்கு எடுத்திட்டுப் போனன்” “ரொம்பத் தப்பாச்சே?” “எனக்குத் தெரியாதா?”. அக்கப்போர். 

“போனவாரம் பூரா ஒரே சைனசு, தலைவலின்னு மாத்திரைகளப் போட்டன். அது அசிடிட்டிய இழுத்து வுட்ருச்சி”

“அதுக்கு? ஏண்ட்டாசிட் போட்டா, இருக்கிறது நியூட்ரல் ஆகிடும். செரிமானத்துக்குப் பத்தலையேன்னு ஏசிட் மறுக்கா மறுக்கா சுரக்குமே?”

“ஞே ஞே”

“அதுக்குப் பதிலா எச்2 பிளாக்கர் போட்லாம் தேவையின்னா. ஆனா அதுவும் தேவையில்லன்னுதா நினைக்கிறன். துன்ற சாப்பாடு செரியாத் துன்னணும்”

சினமேறி விட்டது தலைக்கு. ஆனாலும் நம் சொற்பொழிவைக் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கின்றது. -3 டிகிரிக் குளிரில் வீட்டை விட்டு வெளியேதான் போக முடியுமா??

காரம் மிகுந்த உணவு, செரிமானத்துக்குக் கடினமான உணவு உண்கின்றோம். செரிமான நீர்கள் கூடுதலாகச் சுரக்கத்தான் வேண்டும். அதுவே தொடர்கதையாகி விடும் போது, உணவுக்குழாயின் மேற்புறமாகச் செரிமான நீர் ஏறிவிடும். விளைவாக, நெஞ்சுக்கரிப்பு தோன்றும். மோர், தயிர், மருந்து, மாத்திரை என சமாளித்து விடுகின்றோம். பொதுவாக இது எல்லாருக்கும் தெரிந்த கணக்கு. பொதுப்புத்திக்கு அவ்வளவாகத் தெரியாதவொன்றும் உள்ளது.

சிறுகுடலிலே ஐநூறு வகையான நுண்ணுயிரிகள் 20 இலட்சத்துக்கும் மேலாக உள்ளன. அவையும் செரிமானச் செயற்பாடுகளுக்கு வித்தாக இருக்கின்றன. சில பல நேரங்களிலே அவற்றால் செரிக்கப்படுகின்ற ஏதோவொரு மாவுப்பொருள் செரிக்கப்படுவதில் தொய்வு. காரணம், அவற்றைச் செரிக்கக் கூடிய நுண்ணுயிரிகள் குறைந்து விட்டன. அவை ஏன் குறைந்தன. அவை விரும்பும் உணவு வெகுநாட்களாக உண்ணப்படவில்லை. ஒரு முப்பது கிராம் மாவுப்பொருளைச் செரிக்க முடியாமல் பத்து லிட்டர் அளவுக்குக் கூட வாயு உருவெடுக்கும். அந்த வாயு கீழாகவும் பிரியலாம். மேலாக வந்து இரைப்பையினூடாகப் பயணித்து உணவுக்குழாய் வழியாக ஊடுருவி தொண்டை(silent reflux), மூச்சுக்குழாயையும் தொடலாம்.

தொண்டையைத் தொடும் போது செருமத் தோன்றும் நமக்கு. வறட்டு இருமல் கூட எழக்கூடும். பேசும்போது அக்கம்பக்கம் இருப்பவர்கள் முகம் சுழிக்கக் கூடும். தொண்டைக்கு மேலே இருக்கின்ற நாசிகளில் புகும்போது, அந்நியப் பொருள் ஏதோ தீண்டுகின்றதேயெனக் கருதி மூக்கில் நீர் வடியும் அவற்றை அலசிக் கழுவிவிட. கூடவே நாசித்துவாரங்களின் உட்புறச் சுவர்கள் வீங்கத் தலைப்படும். கண்களைச் சுற்றியுள்ள காற்றறைகளில் இறுக்கம் ஏற்படும். தலைவலி, சைனசு, சளி எனக் கருதி அவற்றுக்கான மருந்து, மாத்திரைகள் உட்கொள்வோம். செரிமானச் சுரப்பு நீர்கள் கூடுதலாகச் சுரக்கும். மீண்டும் மருந்து, மாத்திரைகள். அதற்கான பக்க விளைவுகள். இஃகிஃகி, read it again. What you eat, how you are! 

என்ன செய்யலாம்? பட்டினி கிடக்கலாம். இரைப்பை, செரிமானமண்டலத்தில் இருக்கின்ற உணவெல்லாம் தீர்ந்து வெளியேறும் வரையிலும் பட்டினி கிடக்கலாம். அவ்வப்போது தேவையான நீர் குடிக்கலாம். படிப்படியாகத் தொல்லைகள் நீங்கியதும், பசியெடுக்கத் தோன்றியதும், காய், கனி, சத்து மிகுந்த சமச்சீர் உணவை உட்கொள்ளலாம். தொடர் தொல்லைகளாக இருக்கும் போது நல்ல மருத்துவரைத்தான் நாட வேண்டும்; நாமாக அள்ளி வீசக் கூடாது வேதிப்பொருட்களை நம் உடலெனும் வேதிச்சாலையில்!

என்ன, எப்போது சாப்பிட்டாரோ தெரியாது. இருமல், தலைவலி வந்திருக்கின்றது. அதற்கான மருந்துகள். அது, செரிமான நீரேற்றம் காற்றேற்றத்தைக் கூட்டி இருக்கின்றது. தற்போது அதற்கான மாத்திரை. இது இன்னமும் நீரேற்றத்தைக் கூடுதலாக்க இடம் கொடுக்கும். இப்படியானவை தொடர்ந்து கொண்டே இருக்குமானால், வேதிசாலையானது முன்கூட்டியேவும் தன் பணியை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு ஆட்படும். எல்லாம் இந்த மாயக்கணக்குகள் செய்யும் வேலை! மாயக்கணக்குகள் செய்யும் வேலை!!

What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!



No comments: