3/06/2013

சேய் ஈன்ற தாய்

விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய்
ஊசலாடிக் கொண்டிருக்க
அடை அண்டிய தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்!
யார் கவனித்தார்கள் அவளை?

இரண்டாம் தூணில் சாய்ந்து
அலுங்கிக் குலுங்கி
கண்ணீர் உகுக்குமந்த
இசுபானிய இளம்பெண்ணை?!

அண்டி அவளைக் கேட்கலாமா?
நூறோடு நூற்றொன்றாய்
நாமும் கடந்து சென்றுவிடலாமா??
மனத்துக்குள் நிகழ்ந்த
சஞ்சலப்புயல் ஓயந்தபின்
ஏங்க, உங்களுக்கு உதவி ஏதும்?
சென்று வினவியதற்கு
உகுத்த கண்ணீர் துடைத்து
அமைதியாய் மறுமொழிந்தாள்
நன்றி! நீங்கள் கவலைப்படாதீர்கள்!!
யாரோ வீசிச்சென்ற இக்குழந்தையை
தத்தெடுத்து வளர்க்கும் என்னை
இன்று
இப்போதுதான்
முதன்முதலாய்
மம்மி மம்மி எனச்சொல்லி
அழைக்கத் துவங்கியிருக்கிறாள்!

ஏதுமறியாப் புன்முறுவலுடன்
எங்களைப் பார்த்துச் சிரித்த
அச்சிறுகுழந்தையின் கண்களில்
தாயொன்றின் பிரசவம்!!


நன்றி: தென்றல் மாத இதழ்

3 comments:

கவியாழி said...

இதுவன்றோ தாய்மையின் தத்துவம்

அம்பாளடியாள் said...

யாரோ வீசிச்சென்ற இக்குழந்தையை
தத்தெடுத்து வளர்க்கும் என்னை
இன்று
இப்போதுதான்
முதன்முதலாய்
மம்மி மம்மி எனச்சொல்லி
அழைக்கத் துவங்கியிருக்கிறாள்!

ஏதுமறியாப் புன்முறுவலுடன்
எங்களைப் பார்த்துச் சிரித்த
அச்சிறுகுழந்தையின் கண்களில்
தாயொன்றின் பிரசவம்!!

மறுவார்த்தைகள் சொல்ல வழியின்றி
தலைவணங்குகின்றேன் சகோதரரே
தாய்மையைப் போற்றும் இன்பக் கவிதை வரிகள் கண்டு !........

HBT said...

அழகியலாய் ஒரு கவிதை