1/01/2013

கண்ணாள் ஓதுகம்


இன்று மனையாளிடமிருந்து இன்னமும் எதுவும் வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லை. இப்படியான நல்லதொரு தருணத்தில், என்றோ அறியப்பெற்ற இலவு காத்த கிளியின் கதைதான் நினைவுக்கு வருகிறது.
காய் பழுத்துக் கனியாகும் தருவாயில் உண்ணலாமெனக் கிளியானது காத்திருக்க, முற்றி வெடித்த காயிலிருந்து தெறித்த வெண்பஞ்சுத் திரள்கள் சிதறி வான் நோக்கிப் பறக்க, காத்திருந்த அக்கிளி ஏமாந்து போனதாம். ஆனால் நான் இங்கு கண்டு கொண்டிருக்கும் காட்சியோ அதனின்றும் மாறாக இருக்கிறது.  இந்த இலவம் பஞ்சுத் திரள்கள் போன்ற இவ்வெண்கீற்றுகள் நளினத்தோடு அசைந்தாடியபடியே கீழ் நோக்கி வந்து புல்வெளியின் மேல் படர்ந்து கொண்டிருக்கின்றன.
”ஒயிட் கிறிஸ்துமஸ் எனச் சொல்வது இதனால்தானோ?” என்று எண்ணியபடியே சாளரத்தினூடாய் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வானிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்த உறைபனிப் பிசிர்களின் நுரைநாட்டியம் எழிலார்ந்த கண்காட்சியாய் இருக்கிறது. இது போன்ற காற்றரவமற்ற பனிப்பொழிவின் போது பறக்கும் சன்னக்கீற்றுகளின் தவழோட்டப் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.
குறிப்பிட்ட உயரத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் இரு வேறு பனிக்கீற்றுகளை ஒரு சேரக் கவனித்து, அவை எப்படியான நளினங்களைக் கையாண்டு தரையிறங்குகின்றன; எது தரையைக் காலத்தாழ்ச்சியுடன் பிந்திச் சென்றடைகிறது என்பதே அவற்றுக்கிடையிலான போட்டியாகும். நாம் ஒன்றைக் கணிக்க, பெரும்பான்மையான நேரங்களில் அதுவே பிந்திச் சென்றடைந்து வெற்றி பெறும். ஆனால்  ஒரு சில கீற்றுகள் காற்றோடு கரைந்து விடும்; அல்லது, பிறிதொரு கீற்றோடு புணர்ந்து மறைந்து விடும். இப்போட்டிக்குச் சுவை கூட்டுவதே அத்தகைய எதிர்பாராதவைதான்.
“காலையில எழுந்ததுமே வேடிக்கைதானா? எந்திரிச்சதே காலையில பத்து மணிக்கு. இதுல இவருக்கு அப்படியென்ன வேடிக்கையோ? ஏங்க, வாங்க இங்க!”
பனிப்பொழிவுடனான இலயிப்பில் இருந்தவனை இடை மறித்ததிலிருந்து துவங்கியது, அன்றைய நாளுக்கான ஓதுகம்.  இதற்கு பொண்டாட்டி அர்ச்சனை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. நத்தார் நாளில் கிடைக்கப் பெறும் அர்ச்சனை என்பதால், அது ‘நத்தார் நாள் ஓதுகம்’ எனும் சிறப்பும் பெறுகிறது.
நத்தார் நாள்! டொரொண்டோ நகரில் வாழும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டதில் இதுவுமொன்று. போர்ச்சுக்கீசியர் ஆண்ட நாடான இலங்கையில், கிறிஸ்துமசைக் குறிக்கும் போர்ச்சுக்கீசியச் சொல்லான ’நாட்டல்’ எனும் சொல்லில் இருந்து பிறந்ததான் இந்த நத்தார் எனும் தமிழ்ச் சொல்.
அது கிடக்கட்டும். நத்தார் நாள் என்பதால் நமக்கான அர்ச்சனைகள் ஓய்ந்து விடுமா? அவை ஓய்ந்து விட்டால்,  நம்மால்தான் இயல்பாய் இருந்துவிட முடியுமா என்ன??
“என்ன நாஞ்சொல்றது காதில விழுதா, இல்லியா??”
“விழுகுது, விழுகுது! காபி போட்டுட்டே சொல்லலாம்ல?!”
“அதெல்லாம் போட்டுத்தான் வெச்சிருக்கு. உங்களுக்குதா நான் சொல்றது காதுலயே விழுகுறதில்ல! என்னங்க, எனக்கு ஒரு பொட்டுத் தூக்கங்கூட இல்ல தெரியுமா?”
“அட! ஏன், என்னாச்சி?”
“ஆமாங்க. திகழ் நல்லா தூங்கிட்டா. கமழ் கொஞ்சங்கூடத் தூங்கவே இல்ல. நாலஞ்சி வாட்டி வயித்துல போயிடிச்சி. ஒரே அனத்தல். ஆளே, கிரங்கிப் போயிட்டாளுங்க. ஒரு எட்டு எமர்ஜென்சிக்குப் போயிட்டு வந்திருங்க. கிறிஸ்துமஸ் நாளன்னிக்கு வேற யாரும் தெறந்திருக்க மாட்டாங்க!”
“ப்ச்! என்னை எழுப்பி இருக்கலாமே? இதா, நான் ஒடனே கிளம்புறேன்!!”
பாவம் பிள்ளை. சுருண்டு படுத்திருக்கிறாள். என்னைப் பார்த்ததும் கைகளை நீட்டுகிறாள்.
“இரு தங்கம்! அப்பா முகங்கழுவி, உடுப்பு மாத்திட்டு வந்து உன்னை எடுத்துக்கிறேன்!” ஒரு முத்தத்தோடு விடைபெற்று, குளியலறைக்குப் போய் ஆயத்தமாகினேன்.
”ஏங்க, அதுக்குள்ள எங்க போனீங்க? ஒன்னு சொன்னா, அதைக் கிரமமா செய்ய மாட்டீங்களா?? அதுக்குள்ள இன்ட்டர்நெட்டுல என்ன வேண்டிக் கிடக்கு?”
“நான் கீழ போயி, வண்டிய ஸ்டார்ட்ல நிறுத்திட்டு வந்தேன். அப்பத்தான கொஞ்சமாச்சும் வெதுவெதுப்பேறி இருக்கும்?!”
“அதுக்கு இவ்வளவு நேரமா? இன்சூரன்சு கார்டு எடுத்து வெச்சிகிட்டீங்களா?? கையில இந்த பிஸ்கெட் பாக்கெட்டும், தண்ணியும் வெச்சிகிங்க. வயித்துல போறதால நான் பால் எதுவும் குடுக்கலை. சரியா?”
“சரி!”
“என்ன சரி? கொழந்தைக்குக் குளிராதா?? இருங்க, ஸ்வெட்டர் போட்டு, தலைக்கும் குல்லா போட்டு வுடுறேன்!!”
குழந்தை என்னருகில் வந்து சொல்கிறாள், ”அப்பா, நான் நல்லாத்தான் இருக்கன்பா. கூட அம்மா வரலையா? அப்ப, நான் வரலப்பா!”
”அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுடா செல்லம்; போனவுடனே வந்திடலாம் செரியா?”
வீட்டில் மற்ற பிள்ளைகள் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரவு படம் பார்த்த பின்னர் ஊரிலிருக்கும் தாத்தா, பாட்டி, பெரியப்பா வீட்டு அண்ணன், தங்கைகளுடன் பேசிவிட்டுப் படுக்கைக்குப் போக வெகு நேரமாகிவிட்டிருந்ததும், பனிபொழிவின் போதான சூழலின் இதமும்தான் அவர்களுக்கான இன்பத்துயிலைக் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் அகத்தாளின் தங்குதடையில்லா ஓதுகமும் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டு இருக்கிறது.
அவசரகால மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் ஆறு மைல்கள்தான். ஆனாலும் அரை மணி நேரம் பிடித்தது. தெருவெங்கும் பனிப்பொழிவு. வேகமாகச் சென்றால் வண்டி ஒருபக்கமாக இழுத்துவிடும் என்கிற அச்சம். மிகக் கவனமாகவும் மெதுவாகவும் உருட்டினேன்.
“அப்பா, சாந்தாகிளாஸ் எப்பப்பா நம்ம வீட்டுக்கு வந்தாரு? டோரா பொம்மையெல்லாம் எப்பிடிப்பா நம்ம வீட்டுக்கு வந்திச்சி??”, வழியெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா புராணமே பாடினாள் கமழ். திடீரெனத் திசைமாறிக் கேட்டாளே ஒரு கேள்வி?! வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒன்றுக்கு நான்கு முறை மூச்சிழுத்துக் கொண்டேன்!! எப்படி, இந்தக் குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதோ??
“சொல்லுங்ப்பா. சாமிகிட்டப் போன குழந்தைகளோட வீட்டுக்கும் சாந்தா போயிருப்பாராப்பா? அவங்களுக்குக் குடுத்த கிஃப்ட் எல்லாத்தையும் அவங்க அப்பா, அம்மா என்ன செய்வாங்க??”, அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாய் எழும் இக்கேள்விகளால் எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தும் அதை அவளுக்குக் காண்பித்து விடாமல் உரையாடலைச் சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் நானிருக்கிறேன்.
”இத பாரு கண்ணா! இது எமர்ஜென்சி டாக்டரைப் பாக்குற இடம்; கொஞ்ச நேரமாகும். அம்மாவைக் கேட்டு அழக்கூடாது. போனதும் டயாப்பரை மாத்திகிடணும். சரியா?”
சொல்லி முடிக்கவில்லை; அழைப்பு மணி ஒலித்தது. ஓதுகம் என்றால், ஓயாமல் ஓதப்பட வேண்டும்தானே? அல்லாவிடில் அதற்கான இலக்கணக் கூறுகள் பாழ்பட்டு விடுமல்லவா?! சரி, தயாராகுவோம் ஓதுகத்துக்குச் செவிமடுக்க!!
”சொல்டா!”
“போயிச் சேர்ந்ததும் கூப்பிட்டு சொல்ல மாட்டீங்களா? ரோட்டுல பார்த்துக் கவனமாப் போய்ச் சேர்ந்தீங்களா, இல்லையா??”
“இப்பதான் வந்து வண்டிய நிறுத்துறேன். நீ கூப்பிடுற!”
“இங்கிட்டு இருக்கிற ஆஸ்பிடலுக்கு எதுக்கு இவ்ளோ நேரம்?”
“வழியெல்லாம் இன்னும் பனி விழுந்திட்டு இருக்கு. அதான் மெதுவா ஓட்டிட்டு வர வேண்டியதாப் போச்சி!”
“சரீ..! சரீ… எதுக்கும் ஒரு பதில், ஒரு விளக்கம், தயாரா வெச்சிருப்பீங்களே?! உள்ள போனதும் முதல் வேலையா டயாப்பரை மாத்திடுங்க. பையைக் கார்லயே வெச்சிட்டு போயிடாதீங்க; சரியா?”
“இம், சரி! சொல்லியனுப்பினது ஞாவகம் இருக்கு. அப்ப நான் வெச்சிடவா?”, உடனே சரியெனச் சொல்வார்கள் என எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.
“இல்ல. இன்னொன்னு சொல்லணும் உங்களுக்கு. இன்னிக்குக் கிறிஸ்துமஸ்ங்றதால கொஞ்சம் முன்னபின்ன ஆகும். குழந்தைய பத்திரமாப் பார்த்துகுங்க. உள்ள, போன் வேலை செய்யாது. அப்பப்ப ரூமை விட்டு வெளியில வந்து எனக்குப் பேச முயற்சி செய்யணும். செரியா?”
”டே, வெளியில வந்து பேசறதெல்லாம் நடக்குற காரியமா? அதும் குழந்தைய விட்டுட்டு??”
“முயற்சி செய்யுங்கன்னுதான் சொன்னேன். புரியுதா? செரி, நான் வெச்சிடுறேன். பார்த்து டாக்டர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு வாங்க!!”
“ரொம்ப நல்லாவே!”, ஓய்ந்ததடா சாமி! மனத்துள் சிரிப்பு எக்காளமிட்டுக் கொண்டது.
மருத்துவ மனையிலிருக்கும் கழிவறைக்குச் சென்று குழந்தைக்கு இடப்பட்டிருந்த அரைக்கச்சையை மாற்றி, துடைத்து விட்டுப் பின்னர் புதியதொன்று அணிவிக்கப்பட்டது. வரவேற்பு பணிப்பெண் எங்களைக் கவனித்து உள்ளே அனுப்பினாள். அமெரிக்க மருத்துவ எமர்ஜென்சிப் பிரிவு எனும் அவசர கால சிகிச்சைப் பிரிவில் இது ஒரு வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும். நான்கைந்து பேர்தான் அங்கு குழுமி இருந்தார்கள். விடுப்புக்காலங்களில் குறைந்தது ஐம்பது, அறுபது பேராவது இருப்பார்கள். ஆனால் இன்று பெரிதாகக் கூட்டமெதுவும் இல்லை. பெருத்த மகிழ்ச்சி.
சென்றமர்ந்த பத்துமணித் துளிகளுக்கெல்லாம் உள்ளே அழைத்துச் சென்று எங்களுக்கான அறையில் அமர வைத்து விட்டார்கள். இவ்வணுகுமுறையானது அமெரிக்காவுக்கே உரிய ஒரு சிறப்பாகும். மருத்துவமனை, குடிபுகல் மற்றும் குடியுரிமை அலுவலகம் முதலான இடங்களில் இம்முறை கையாளப்படுகிறது. உலகுக்கே உயரிய தலைவர் என நம்பப்படுகிற அமெரிக்க குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலும் கூட இம்முறையே கையாளப்படுகிறது.
வருகையாளருக்கான நேர்முக நேரம் ஒதுக்கப்பட்டு அவருக்கான தனியறையும் ஒதுக்கப்பட்டு விடும். குறிப்பிட்ட நேரத்தில் குடியரசுத் தலைவரே அவ்வறைக்கு வந்து, வந்திருக்கும் வருகையாளரைச் சந்திப்பதுதான் அம்முறையாகும். இதன் மூலம், குடியரசுத் தலைவரின் நேர ஆளுமை கட்டுக்குள் வருகிறது; தேவையற்ற காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. அல்லாவிடில், அவருடைய அறைக்குள் வருகையாளர் வருதல், இருக்கையில் இருத்துதல், வழியனுப்புதல் எனப் பலவாறாக குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க நேரம் வீணாகும். இது போன்றே மருத்துவரின் நேரக்கட்டுப்பாடும் கையாளப்படுகிறது.
தன் கையில் இருக்கும் கரடி பொம்மையுடன் பேசிக் கொண்டு இருந்தாள் கமழ்.  நத்தார் நாளில் வேலை செய்ய நேர்ந்த வருத்தமெதுவுமின்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர் அறைக்கு வெளியே இருந்த மருத்துவமனைப் பணியாளர்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவர் நீட்றா கதவைத் தட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
உங்களை இந்த நன்னாளில் இங்கு வரச் செய்தது என்னவோ என வாஞ்சையாகக் கேட்டறிந்து கொண்டார் மருத்துவர் நீட்றா. கன்னத்தில் குழிவிழ, ”ஐ காட் கிஃப்ட் ஃப்ரம் சான்ட்டா” என்று சொல்லிச் சிரித்தாள் கமழ். அந்த அயர்விலும் அவள் அழகாய்க் காட்சியளித்தாள். உங்க குழந்தை மிகவும் அழகு எனச் சொல்லிக் கொண்டே அவளது காது, கண்கள் முதலானவற்றைப் பரிசோதித்துக் கொண்டார் நீட்றா.
”வயிற்றில் ஏதாவது வைரஸ் இருக்கக் கூடும். உடம்பு சுடவில்லையாதலால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறிக்கொண்டே மருந்துக்கான சீட்டெழுதிக் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொண்டார் அவர்.
குழந்தைக்குச் சட்டை, ஸ்வெட்டர் முதலானவற்றை அணிவித்து வெளியே அழைத்து வந்தேன். மருத்துவரைப் பார்த்ததற்கான உடன்தொகை(copay) செலுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தேன். என்னதான் மருத்துவக் காப்பீடு வைத்திருந்தாலும், உடன்தொகையாக சொச்சப் பணத்தை நாம்தான் கட்ட வேண்டுமென்பது அமெரிக்கக் காப்பீட்டு நடைமுறையாகும்.
“சார், கேன் யூ ஹெல்ப் மீ சார்?” என்றாள் அந்த வெள்ளைக்காரி. எனக்கு மனம் சஞ்சலமாக இருந்தது. விட்டேற்றியாக ஏதாவது சொல்லியிருக்கலாம். ஆனால் உதவி கேட்டு நிற்பவர்களை நத்தார் நாளதுவுமாக எப்படி உதறித்தள்ளுவது? கமழ் வேறு உடனிருக்கிறாள். அந்தம்மாவைப் பார்க்கவும் பாவமாய் இருக்கிறது.  எந்த நேரத்திலும் அழலாம் என்கிற தொனியில் இருக்கிறது அவள் முகம். அவளுக்கென்ன துன்பமோ??
அவளுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என வந்திருக்கிறாள். கிறிஸ்துமசுக்காக இருந்த காசெல்லாம் செலவாகி, பற்று அட்டைகளிலும் இனி கடன் வாங்கப் பெறுமானம் இல்லையாம். மகளுக்கு மருந்து வாங்கச் செலுத்த வேண்டிய உடன்தொகைக்கு இருபது டாலர் வேண்டுமெனக் கேட்கிறாள். மனம் கனக்கிறது. அவளது குழந்தையின் முகமும் பெருஞ்சோகமாய் இருக்கிறது.
”என்னிடம் பணமாக இல்லை. வேண்டுமானால் இருபத்தி நான்கு மணி நேர வால்கிரீன்சு மருந்தகத்திற்கு வாருங்கள்; உடன்தொகையை நானே செலுத்தி விடுகிறேன்!” எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.
இந்த அமெரிக்காவில் இப்படியான ஏழைச்சோகம் நிறைய. காசு இருக்கும் வரையிலும் தாம்தூமென்று பொருட்களாய் வாங்கிச் செலவளிப்பது ஒரு பக்கம். தாய்மார்களின் இப்படிப்பட்ட அவலமும் அல்லலும் மறுபக்கம். கிட்டத்தட்ட முப்பது விழுக்காடு அளவிலான அமெரிக்கக் குழந்தைகளுக்கு அம்மாவின் ஆதரவு மட்டுந்தானாம். தனித்தாயா(single mom)க இருப்பாளோ இவளும்? மனம் பதைபதைத்தது. என்றுதான் இவர்கள் சேமிக்கக் கற்றுக் கொள்வார்களோ??
உப்பும் புளியும் இருக்கும் மொடாவில், அரைக்காசு, முக்கால்க்காசு எனச் சிறுகச் சிறுகச் சேமிக்கும் என் அம்மாவின் நினைவுதான் எனக்கு வருகிறது. அஞ்சறைப் பெட்டியில் காசில்லையென்றால் அம்மாவுக்கு தலையே வெடித்துவிடும். அதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்குத் தெரிவதே இல்லை. எதுவும் கிடைக்காத நேரத்தில் சாணி தட்டிக் காய வைத்த வறட்டிகளை விற்றாவது காசாக்கி விடுவாள் அம்மா.
விடுப்பு நாளான இந்நாளில் திறந்திருக்கும் ஒரே ஒரு மருந்தகம், இந்த வால்கிரீன்சு மருந்தகம்தான். நான் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் அந்த வெள்ளைக்காரியும் வந்து விட்டாள். எனது கையிலிருந்த மருந்துச் சீட்டினைக் கொடுத்தேன். அவளும் அவளது குழந்தைக்கானதைக் கொடுத்திருக்கிறாள். இன்னும் இருபது மணித்துளிகள் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள்.
“என்ன, நானே வெளியில வந்ததும் கூப்பிடச் சொன்னனே? கூப்பிட மாட்டீங்களா??”
“சாரி! நான் இப்பதான்…”
“எதுக்கும் ஒரு சாரி. அதெப்படிங்க உங்களால முடியுது? சரி, டாக்டர் என்ன சொன்னாரு?”
“ஸ்டொமக் வைரஸா இருக்கும்னு சொல்லி மருந்து எழுதிக் குடுத்திருக்காரு!”
“சரியப்ப, வீட்டுக்கு வாங்க. நான் வாங்கிக்கிறன்!!”
“இல்ல. நான் வால்கிரீன்சு பார்மசியில குடுத்து இருக்கன்!”
அவ்வளவுதான். சாமியாடி விட்டாள். “எங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கணும். நான் ட்வெண்டிப் பெர்சண்ட் கூப்பன் வெச்சிருக்கன். அது போக, கிரிடிட் கார்டுல பே பண்ணக் கூடாது. ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் அக்கவுண்ட்ல பே பண்ணனும். உங்களை வெச்சிட்டு எனக்குப் பெரிய்ய்ய அக்கப்போரு!!”
“இல்லடா. நான் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் கார்டு எடுத்திட்டு வந்திருக்கேன்!”, ஒருவழியாய்த் தப்பித்தாயிற்று. நல்ல வேளையாக, நான் மருத்துவச் செலவுக்கான வருமானவரிக் கழிவு தரும் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் பற்று அட்டையைக் கொண்டு வந்திருந்தேன். அல்லாவிடில், அதற்கும் சேர்த்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
மீண்டும் அந்த வெள்ளைக்காரி என்னைப் பார்த்து ஒருவிதப் பணிவோடு சிரித்துப் பேச முயன்றாள். நான் மகளைக் கவனிக்கும் பாங்கில் தவிர்த்து விட்டேன். பேச்சுக் கொடுத்தால், சொந்தக்கதை சோகக்கதையைச் சொல்வார்கள். நமக்கெதுக்கு வம்பு?
முறை வந்ததும், வெள்ளைக்காரியின் மருந்துக்கும் எங்களது மருந்துக்கும் நானே உடன்தொகை செலுத்து விடுகிறேன் எனச் சொன்னேன். அங்கிருந்த வேலையாள் என்னை ஒரு மாதிரி வித்தியாசமாய்ப் பார்க்கிறாள்.
மருந்தைப் பெற்றுக் கொண்டவள் என்னைப் பார்த்து மீண்டும் நன்றி சொன்னாள். அடுத்த மாதம் காசோலை அனுப்புவதாகச் சொல்லி, அனுப்புவதற்கு ஏதுவாக என் வீட்டு முகவரியைக் கேட்டாள். பணிவுடன் மறுத்து விட்டேன். அலைபேசி எண்ணாவது கொடுங்கள் என வேண்டினாள். நத்தார் நாளில் உதவக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றியெனச் சொல்லி அலைபேசி எண் பகிர்வதையும் தவிர்த்து விட்டேன்.
கண்களில் நீர் மல்க அவளும், வீட்டிற்குப் போக வேண்டிய அவசரத்திலிருந்த நாங்களும் விடை பெற்றுக் கொண்டோம். கண்ணிலிருந்து மறையும் வரையிலும், அவர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே வந்தாள் கமழ்.
”அட, நீங்க இவ்வளவு சுருக்கமா வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லங்க!”
“இன்னும் முன்னாடியே வந்திருப்போம். ஆனா அந்த இன்னொரு குடும்பத்துக்கும், அதான் அந்த வெள்ளைக்காரிக்கும் சேர்த்து பில் பே பண்றதுல கொஞ்சம் நேரம் செலவாயிடிச்சி!”
“இன்னொரு குடும்பமா? என்ன உளர்றீங்க?? யாரது?? எழவு, உங்களை அனுப்புனதே தப்பாப் போச்சி!!”
அவ்வளவுதான்! நத்தார் நாள் ஓதகம் பெருவேகம் கொண்டு சீற்றத்துடன் பொழியத் துவங்கியது.
“நீ கொழந்தையப் பாரு. எனக்கு செமயாப் பசிக்குது! சிறுகுடல் பெருங்குடலைத் தின்றும் போல இருக்கு. போயிக் குளிச்சிட்டு வந்து சோறுங்கணும் முதல்ல!”, நடந்ததை முழுமையாகச் சொல்லாமல் வேகமாய்ச் சென்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டேன். மெய்யாலுமே பசிக் கிரக்கமாயிருக்கிறது எனக்கு.
வீட்டு முகவரி, அலைபேசி எண் முதலான தனிப்பட்ட தகவலெதையும் பகிராமல் உதவி செய்து வந்த செருக்குடன் கூடிய மகிழ்ச்சியோடு, வெதுவெதுப்பான சுடுநீர்ச் சாறல்க்குளியலில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் நான்.  “யாரோ வெள்ளைக்காரியாம். யாரது? அவளை எப்படி இந்தாள் சந்திச்சாரு? இந்தாள் எதுக்கு அவளுக்குப் பணம் கட்டணும்??” இப்படியான பல குடைச்சல்களுடன் கூடிய கடுமையான தலைவலியோடு கிடைகொள்ளாமல் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருக்கிறாள் என் கண்ணாள்.
நன்றி: வல்லமை

2 comments:

Jansi said...

அருமை, ஆமாம் உங்க வீட்டிலுமா:):) நீங்க எழுதிய நடை மிக அருமை!!!

பழமைபேசி said...

:) அட, உங்க வீட்டிலுமா. அப்பாட, நான் தனியாள் அல்ல. மகிழ்ச்சி!!