6/29/2011

மக்கா... எல்லாரும் வந்திடுங்க!!

இன்னைக்குக் காலையில இருந்தே... ஒரு மார்க்கமாவே இருக்கு.... பசிக்குது... ஆனா, சரியாச் சாப்பிட முடியலை.... வேலையிடத்துல, என்ன பேசிக்கிறாங்கன்னு ஒன்னுமே பிரியலை...

என்னதான் காரணமின்னு ஒருதடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சுப் பார்த்தேன்... இஃகிஃகி... ஒரே குதூகலம், மனசுல ஒரே குதூகலம்... இன்னைக்கு இரவைக்கு நித்திரை கொள்ளமுடியுமா தெரியலை. எனக்கு சின்ன வயசுல பள்ளிக்கூடம் தொறக்குற நாள்தான் ஞாவகத்துக்கு வருது.

ஆண்டு ஒன்னுக்கு, மூனு வெள்ளைச் சட்டை, ரெண்டு காக்கிச் சல்லடம் வாங்கிக் குடுப்பாங்க ஊட்ல. அதுவும் துணி எடுத்து, உடுமலைப் பேட்டை தையக்காரர் P.V.சண்முகம்கிட்டத் தைக்கக் குடுப்பாங்க. வளர்ற பையன், இருக்குற துணி பூராத்துக்கும் தெச்சிப் போடுன்னு வேற சொல்லிக் குடுப்பாங்க.

அதை அப்படியே வாங்கிட்டு வந்து மடிப்புக் கலையாம, ஊட்டுல ஒரே பொட்டி, அந்த பொட்டியில வெச்சிடுவாங்க ஊட்ல. ஒரு மணி நேரத்துக்கு ஒருவாட்டி, ஊட்டுக்கு ஓடி வந்து பொட்டியத் தெறந்து பாக்குறதும், பள்ளிக்கூடம் தெறந்து முதல்நாள் அதைப் போட்டுட்டுப் போற காட்சிய நெனைச்சிப் பாக்குறதும்... ஒரே குதூகலமா இருக்கும். இராத்திரியில திடீல்னு முழிப்பு வரும். தூங்குறவிக எங்க பார்த்திடுவாங்களோன்னு, மெதுவா எழுந்து போயிப் பொட்டியத் தெறந்து பாக்குறதும் உண்டு.

அந்த நினைவுகள்தாங்க வருது. எப்படா வெள்ளிக் கிழமை வரும்? சார்ல்சுடன் போறது எப்பன்னு இருக்கு?? எங்க ஆசான் கொழந்தைவேல் இராமசாமி அய்யா வேற, இலக்கிய விநாடி வினாவுக்குப் படிக்கச் சொல்றாரு. இந்த மனநிலையில எப்படிப் படிக்க முடியும்? அவர் வாயை அடைக்கிறது எப்படின்னு யோசிச்சப்பதான் ஒரு யோசனை வந்துச்சு.

விடுவமா நாங்க? ஒரே போடு! ஆள் அப்படியே அமைதி ஆயிட்டாரு. இஃகி இஃகி. அப்படி என்ன நடந்துச்சுன்னுதான கேட்குறீங்க??

“அய்யா, தொலைக்காட்சின்னு எதோ சொன்னீங்களே? அதைத் தமிழ்ல வேற என்ன சொல்வீங்க??”

“சின்னத்திரை சொல்வம்!”

“தமிழ்ல எப்படி எழுதுவீங்க? சொல்லிக் காண்பியுங்க!!”

“சி..ன்..ன...த்..தி..ரை”

“இக்கும்... இதுகூடத் தெரியலை ஆசானுக்கு. சின்னத்திரைன்னு சொல்றீங்களே, அது என்ன உதயசூரியன், இரட்டை இலைன்னு சின்னங்கள் போட்டிருக்கிற சின்னத்திரையா என்ன? அது அளவுல சிறுசா இருக்குற சின்ன திரை. பெரிய திரைன்னு சொல்லும் போது நடுவுல ’த்’தன்னா போடுறீங்களா? அப்புறம் ஏன் சின்ன திரைக்கு மட்டும் ‘த்’தன்னா போடுறீங்க??”

நாம யாரு? கழகங்கள்கிட்ட பாடம் படிச்ச ஆள் அல்லவா?? இந்த களேபரத்துல நீ என்ன பாடம் படிச்சன்னு ஒரு சொல் கூடக் கேட்கலையே அவரு??

இப்படிப் போய்ட்டு இருக்கு நம்ம பொழுது. மக்களே, வெள்ளிக்கிழமை இரவே, தென்கரோலைனா மாகாணம், சார்ல்சுடன் நகருக்கு வந்து சேர்ந்திடுங்க. நம் உறவுகள் அனைவரையும் சந்திக்கலாம். நட்பு பாராட்டலாம்.

எட்ட இருக்குறவங்களுக்கு ஒரு செய்தி. வலைப்பக்கத்துல நான் எழுதுறது எப்பவும் போல எழுதுவேன். கூடவே, இணைய ஒளிபரப்பும் இடம் பெறும். கண்டு களியுங்க. நாம இந்த ஆண்டு, எட்ட அமர்ந்து வேடிக்கை பார்க்கலாமுன்னுதான் இருந்தோம். கூட, மனைவி மக்கள் எல்லாம் வரப் போறாங்க. ஆனாலும், ஏத்தி வுட்டுட்டாய்ங்க.

ஆமாங்க, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம் எனும் தலைப்புல இடம் பெறப் போற கவியரங்கத்துல கவிதை வாசிக்கப் போறேன். அப்புறம், இலக்கிய விநாடி வினாவுல வழமை போல இடம் பெறுவேன்.

இந்த ஆண்டு முக்கியமா குறிப்பிட வேண்டியது, என்னோட மகளைப் பற்றிதாங்க. திருக்குறள் போட்டி, கட்டுரைப் போட்டின்னு ஒரு சிலதுல பங்களிப்புச் செய்ய இருக்கிறா. நெம்ப முக்கியமான ஒன்னு, இந்த வயசுலயே அப்பனுக்கு ஆப்படிக்கணும்னு களமிறங்குறா. நாந்தான், என்னோட அணியிலயே இருடான்னு சொல்லி, இலக்கிய விநாடி வினாவுக்கு என்னோட அணியிலயே இருக்குற மாதிரி வழிவகை செய்திட்டு இருக்கேன். எங்க போய் முடியுதோ, பார்ப்போம்!!

பதிவர் சந்திப்பு நடக்க இருக்கு. மக்களே, விழா அரங்குக்கு வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்க. பனைநிலம் தமிழ்ச்சங்கமானது, தமிழ்ப்பண்பாட்டோட மிகவும் அணுக்கமா இருக்குற ஒரு தமிழ்ச்சங்கம். அவங்க ஊர்த்திருவிழா இது. எப்படி எல்லாம் கலக்கப் போறாங்களோ தெரியலை! அவங்களுக்கு நிகர் அவங்களேதாங்க. எதைச் செய்தாலும், வெகு செம்மையா செய்யக் கூடிய ஆட்கள் அவங்க.

விருந்தினர்கள், அப்துல ஜப்பார் அய்யா அவங்களோட பேசினேன். முனைவர் மு.இளங்கோவன் அவர்களோட பேசினேன். நெருங்கிய நண்பரொருவர் வீட்லதான், தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் இருக்காங்க. நான் வலையேற்றின அவருடைய பாடல்க் காணொலி கேட்டு வியப்புற்றதாகவும் தெரிய வந்தது. மிக்க மகிழ்ச்சி!

டொராண்டோவில இருந்து, என் வகுப்புத் தோழர்கள் வர இருக்காங்க. அவர்களைச் சந்திப்பதுலயும் வெகு ஆர்வமா இருக்கேன். ஒவ்வொரு ஆண்டுத் திருவிழாவிலயும் நான் மேடையில சொல்ற வாசகங்கள் இரண்டுங்க.

முதலாவது, ”எப்பேர்ப்பட்ட வனத்துல வந்து மேஞ்சாலும், கடைசியில இனத்தோடதான் வந்தடையணும்!”

இரண்டாவது, “வந்திருக்கும் உறவுகள் இருக்கும் நண்பர்களோடு மட்டுமே அளவளாவிக் கொண்டிராமல், புதியதாக ஒரு பத்துப் பேருடனாவது நட்புக் கொள்ளுங்கள். கட்டமைப்பு வலுக்கும்!!

ஊருக்குச் சொல்லிட்டு, நாம அதைச் செய்யாம இருந்தா சரிவருமா? நானும் புதிய நட்பினரை அடையக் காத்திருக்கிறேன். நீங்களும் வாங்க. பழகுங்க. தமிழ்க்கட்டமைப்பு விரியட்டும்.

விழா குறித்த கூடுதல் தகவல்களுக்கு இங்க சுட்டுங்க! www.fetna.org

வரும் வெள்ளி முதல் திங்கள் வரை, நான்கு நாட்கள் எழிலார்ந்த கடற்கரையோரம், தமிழ்ப் பேச்சோட இனிமை நுகர்தலை எதிர்நோக்கி இருக்கேன். அதுக்கப்புறம், நியூசெர்சி பயணம் ஒரு வார காலம். சந்திப்போம்!!

தமிழால் இணைவோம்!!

3 comments:

எம்.எம்.அப்துல்லா said...

சென்ற ஆண்டு நிகழ்சிகள் நினைவுக்கு வருது. இரவு அறையில் நீங்களும்,நானும்,வழிப்போக்கன் யோகேஷூம் விடிய விடிய சிரித்தோமே..நினைவிருக்க?
:)

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

really nice

அரசூரான் said...

வணக்கம்... தூக்கச் சோதனை... ஒன்று... இரண்டு... மூன்று.

அண்ணே... தூக்கம் வரமா இன்னும் விழா பணிகள் நடந்துகொண்டிருக்கிறது... எங்க உங்களை காணும்? அவ்வ்வ்வ்வ்வ்....