3/11/2010

டேய் மனோகரா...

நண்பகலுணவு உண்ட மயக்கம்! இருக்கும் வேலையைச் செய்வதா, அல்லது, சிறுக நித்திரை கொண்டு எழுவதா என இழுபறியாய் மனம் இழுத்துக் கொண்டிருந்த தருணமது. அந்த நேரம் பார்த்துச் சிணுங்கிய அலைபேசிச் சிணுங்கலுக்கு, மனதின் இழுபறி சலனமற்றுப் போனது.

“அகோ, யாருங்க?”

“மனோகரா, நான் மார்க் பேசுறேன்!”

“யே மார்க், என்ன?! சொல்லு!”

“ஒன்னும் இல்லை!”

“சரியப்ப.., வெச்சிடவா?”

“யே இருப்பா.., சொல்றதுக்குள்ள டபாய்க்குறியே?”

“அப்ப வெடுக்குனு சொல்லு!”

“நாளைக்கு நம்ம அலுவலகத்துல வேலைக்கு விண்ணப்பம் செய்தவங்களுக்கான நேர்காணல் இருக்கு!”

“சரி!”

“அதுல, விண்ணப்பதாரங்களோட தொழில்நுட்ப அனுபவத்தை ஆய்வு செய்யுறதுக்கு நீ உடனே கிளம்பி, போஸ்டன் வரணும்!”

“என்ன மார்க்? அங்க இருக்குறவங்கள்ல யாரையாவது வெச்சி முடிக்க வேண்டியதுதானே? சார்லட்ல இருந்து ஒரு ஆள் இதுக்கு வரணுமா??”

“புரியுது மனோகரா! ஆனா, நீதான் அந்த வேலையச் செய்யணும்னு நான்சி சொல்றாங்க!!”

“சரியப்ப, இன்னைக்கு சாயுங்காலம் ஆறு மணி விமானத்துக்கு வந்துடுறேன்!”

“சரி, காலையில 8 மணிக்கு பார்க்கலாம்!”

போஸ்டன்! இது ஒரு துறைமுக நகரம். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களுள் ஒன்றான மாசச்சூசட்ஸின் தலைநகர். பிரித்தானியாவில் இருந்து வந்த குடியேறிகளில், ப்யூரிட்டன் எனும் பிரிவினர்களால், கி.பி 1630ம் ஆண்டு வாக்கில் உண்டாக்கப்பட்டதுதான் இந்நகரம். தலைசிறந்த பல்கலைக் கழகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த போஸ்டன்.

போஸ்டனுக்குச் சென்று, வழமையாகத் தங்கும் மேரியாட் விடுதியிலேயே தங்கி, விடிந்ததும் எழுந்து அலுவலகத்துக்குச் சென்று, அலுவலில் மூழ்கிப் போகவே, மதிய உணவு இடைவேளையின் போதுதான் அவனுக்கு அவனுடைய அலைபேசி நினைவே வந்தது.

அலைபேசியை எடுத்துப் பார்த்ததில் மின்னஞ்சல் வந்திருப்பதற்கான சமிக்கை! தனது வலைப்பூவுக்கு வந்த, பட்டினத்துப்பிள்ளை எனும் வலைஞரின் மறுமொழி பற்றிய மின்னஞ்சல்தான் அது!!

கடுகதியில், மறுமொழியாளரின் விபரப்பட்டையில் இருக்கும் மின்னஞ்சலைத் தெரிந்து, பின்னதற்கு மின்னஞ்சலும் அனுப்பினான் மனோகரன்; மறுமொழியாளரை தனது அலைபேசிக்கு அழைக்கச் சொல்லி!

நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது அவனுக்கு.

“அகோ, நான் மனோகரன் பேசுறேங்க? நல்லா இருக்கீங்களா??”

“நல்லா இருக்கேன்! உங்க வலைப்பதிவுல நேத்துப் பின்னேரம் நீங்க இட்ட இடுகையில, போஸ்டன் வந்திருக்கிறதாச் சொல்லி இருக்கீங்களே? இன்னும் இங்கதான் இருக்கீங்களா??”

“ஆமாங்க! இன்னைக்கு சாயுங்காலம் ஆறு மணிக்குத்தான் விமானம்!!”

“ஓ அப்படிங்களா?”

“ஆமா, நீங்க எங்க இருக்கீங்க இப்ப?”

“நான் போஸ்டனுக்குப் பக்கத்துல கேம்பிரிட்ஜ்னு ஒரு இடம், அங்க இருக்கேன்!”

“அட அப்படியா? நானும் அங்கதான் இருக்கேன்!”

“நீங்க எந்த இடத்துல?”

“மேரியாட் விடுதி வளாகமுங்க; அதையொட்டித்தான் எங்க அலுவலகம்!”

“அட, அதுல இருந்து ரெண்டு கட்டடம் தள்ளித்தான் நான் இருக்கேன்!”

“ஆகா, ரொம்ப நல்லதாப் போச்சி! நான் நாலுமணிக்கு வேலை முடிஞ்சி வந்து உங்களைப் பார்க்கட்டுமா?”

”சரிங்க, என்னோட தொலைபேசிக்கு ஒரு அழைப்பு அழைச்சிட்டு அப்புறமா வந்து, மேரியாட் வளாகத்துல நில்லுங்க, வந்திடுறேன்!”

சரியாக, மாலை நான்கு மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறினான் மனோகரன். தமிழனும், தமிழனும் தமிழால் குலவப் போகிறார்கள் என நினைத்து நெகிழ்ந்தாள் வானமகள். மகிழ்ச்சிப் பிரளயத்தில் பன்னீர்த் துளிகளாய்ச் சொரியவும் செய்தாள் அவள்; அதிற்ப் பரவசமாய் நனைந்தபடியே போனான் மனோகரனும்!

யாரென்று தெரியாது? இருந்தாலும் ஆவலுடன் காணச் சென்றான். சென்று பார்க்கின், வலப்புறமாய் யாரோ ஒரு இந்தியச் சாயல் கொண்ட இளைஞன் அலைபேசியினூடாக மும்முரகதியில்; இவனுக்குத் தெரிந்துவிட்டது அந்த நபர் அல்லவென்று!

எதேச்சையாய் இடப்புறம் திரும்ப, மகிழ்ச்சி ததும்ப, பொன்முகமாய் ஒரு முகம். பார்த்த அந்த கணத்திலேயே, நெடுநாட்களாகப் பார்த்துப் பழகியது போன்றதொரு உணர்வு. ஒருவருக்கொருவர், பெரிதாய் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனாலும் நட்புக் கயிறு இறுகியது.

“நீங்க எப்ப ஊருக்குப் போயிருந்தீங்க?”

“நான் போன ஆண்டு போயிருந்தேன்!”

“நான் இப்பதான், சமீபத்துல போயிட்டு வந்தேன்!”

“தெரியும், தெரியும்! அதான் எல்லாம் படிச்சனே? ஆனா, வீட்ல ஏப்ரல் அல்லது மே மாசத்துல போனாப் போவாங்க!”

“அப்படிங்களா? அப்பறம் நீங்க அவசியம் பேரவை விழாவுக்கு, அதாங்க நம்ம FeTNA விழாவுக்கு வந்திடுங்க!”

“முயற்சி செய்யுறேனுங்க!”

“கண்டிப்பா வர்றீங்க!”

“இஃகிஃகி!”

நேரம் நெருக்கிக் கொண்டே இருந்தது. விட்டுப் பிரிய மனம் இல்லை! விமானம் மனோகரனுக்காகக் காத்திருக்குமா என்ன? ஆனாலும் பட்டினத்துப்பிள்ளை விடுவாரா?

“நானே உங்களைக் கொண்டு வந்து விமான நிலையத்துல விடுறேங்க?!”

“பரவாயில்ல; நான் வாடகை வாகனத்துல போயிடுறேங்க!”

“வேணாம்! நாம பேசிட்டே போலாம், அதுக்குத்தான் சொல்றேன்!”

“சரியப்ப, வண்டிய எடுத்துட்டு வாங்க; இன்னும் அரைமணி நேரத்துல விமான நிலையத்துல இருக்கணும்!!”

எப்படித்தான் காலதேவன் அந்த அரைமணி நேரத்தையும் அவர்களிடம் இருந்து அவ்வளவு கதியில் பறித்தான் எனத் தெரியவில்லை. அவர்களது வாகனம் விமான நிலையத்தில்!

“சரிங்க, நான் கிளம்புறேன்! நீங்க அவசியம் FeTNA விழாவுக்கு வந்திடுங்க!”

“சரிங்க, மிக்க மகிழ்ச்சி!”

வழமையான சம்பிரதாயங்களுக்குப் பிறகு, விமானம் ஓடுபாதையில் சீறியது. போஸ்டன் நகரம், சிறுத்துக் கொண்டே பின்னோக்கிச் சென்று, சாளரத்தில் இருந்த அவனது கண்களுக்குக் காணாமலே போய்விட்டது.


ப்ராவிடன்ஸ், நியூயார்க், ஜெர்ஸி நகரம், வாசிங்டன் நகரம், ரிச்மண்டு, ராலே, சேப்பல்ஹில், க்ரீன்ஸ்பரோ எனப் பல ஊர்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தின் கன்ணாடிச் சாளரத்தினூடாகக் கீழே பார்த்த மனோகரனுக்கு, மன ஊற்றில் உவகைப் பிரவாகம் பீறிட்டு, முகத்தில் பொன்னொளியாய்ச் சிந்தியது.

விமானம் கடந்து செல்லும் ஒவ்வொரு ஊரிலும், பட்டினத்துப்பிள்ளை போன்ற மகேசுகளும், இரமேசுகளும் நின்று புன்னகையோடு இவனுக்குக் கையசைத்துப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் கொண்டவனிடத்தே அசரீரி ஒன்று ஓங்கி அறைந்தது, “டேய் மனோகரா, உனக்கு ஊரெல்லாம் உறவுகடா!”


தமிழால் இணைந்தோம்!
தமிழராகவே இருந்திடுவோம்!!

16 comments:

பெருசு said...

//தமிழால் இணைந்தோம்!
தமிழராகவே இருந்திடுவோம்!!//

நல்லாச்சொன்னீங்க பழம....

Unknown said...

நல்லாச் சொன்னீங்கண்ணே..


எப்பயாச்சும் இந்த(ராச்செஸ்டர்)ப் பக்கம் வந்தா சொல்லுங்க.. நானும் சார்லெட் பக்கமா வந்தாச் சொல்லுதேன்.. சந்திக்கலாம்.

vasu balaji said...

/டேய் மனோகரா, உனக்கு ஊரெல்லாம் உறவுகடா!” //

ஆமாங்க. சரியாச் சொன்னீங்க. இந்த பங்காளிங்கறது கூட உறவுலதானுங்க வருது:))

Unknown said...

அதெப்டிங்கண்ணா எங்க போனாலும் ஒராள புடிச்சிர்றீங்க. ஆமா சும்மா பேசிக்கிடுத்தா இருந்தீங்களாக்கும்.

☼ வெயிலான் said...

ஊரெல்லாம் இல்ல. உலகமெல்லாம் :)

Unknown said...

வலைஞர்களுக்கு ஊரெல்லாம் உறவுகள்தான்

க.பாலாசி said...

பதிவர் சந்திப்புல இந்தமாதிரி ஒரு உறவுக்கத சொன்னீங்கள்ல....

பழமைபேசி said...

@@பெருசு

நன்றிங்க!

@@முகிலன்

ஆமாங்க முகிலன்!

பழமைபேசி said...

//@@வானம்பாடிகள்
இந்த பங்காளிங்கறது கூட உறவுலதானுங்க வருது:))//

இஃகிஃகி; நிகழ்காலத்தில் சிவா வாங்க!!

@@தாமோதர் சந்துரு

ஆமாங்க!

//வெயிலான் said...
ஊரெல்லாம் இல்ல. உலகமெல்லாம் :)

March 12, 2010 2:10 AM//

வெயிலான் = நேர்த்தி!எப்படிங்க??

உங்களையும், திருப்பூரையும் பார்த்துப் பேசலைன்னுதான் வருத்தம்! அடுத்த முறை கண்டிப்பா வருவேன்!!

//@@சுல்தான் said...
வலைஞர்களுக்கு ஊரெல்லாம் உறவுகள்தான்

March 12, 2010 2:42 AM//

வணக்கம் அண்ணா! நல்லா இருக்கீங்களா? அதேதானுங்க!!

//க.பாலாசி said...
பதிவர் சந்திப்புல இந்தமாதிரி ஒரு உறவுக்கத சொன்னீங்கள்//

ஆமாங்கோ பழம்!

ஈரோடு கதிர் said...

ஆஹா...

அருமையான அனுபவம் போங்க

நம்மை இணைத்ததும் இந்த தமிழ்தானே

தாராபுரத்தான் said...

என்னையும் உங்களுக்கு அடையாளம் காட்டியது கொங்கு தமிழ் தானே.

முகுந்த்; Amma said...

அய்யா நீங்களும் சார்லோட் காரர் ஆ. நானும் அங்க தாங்க இருக்கேன்.

பழமைபேசி said...

//முகுந்த் அம்மா said...
அய்யா நீங்களும் சார்லோட் காரர் ஆ. நானும் அங்க தாங்க இருக்கேன்//

ஆகா, ஆகா.... தேன்மழையில குளிக்கிற மாதிரியே இருக்குங்க....

மக்களே, பார்த்துகுங்க.... எங்க ஃசார்லட்ல தமிழ்வலைப்பதிவர் சங்கம் வலுப்பெற்றுட்டே இருக்கு.... தமிழ் வாழ்க!

இராகவன் நைஜிரியா said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.

வலை உலகம் நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்து இருக்கின்றதுங்க..

இராகவன் நைஜிரியா said...

// நண்பகலுணவு உண்ட மயக்கம்! //

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு... அப்ப தலைவர் உங்களுக்கு இல்லாம இருக்குங்களா?

Thamira said...

முத்தாய்ப்பான இறுதிவரிகள் மகிழ்வைத்தந்தன. உண்மைதான்.!