7/26/2025

அன்பே தருக

அன்பே தருக

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, மிகவும் விரும்பிப் போற்றப்படுகின்ற நூல். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, முப்பத்தி ஐந்து வெள்ளிகள் கொடுத்து வாங்கி அவ்வப்போது வாசித்துப் பயனடைந்து வருகின்றேன். சிறப்பு யாதெனில், ஏதோவொரு பக்கத்தினைத் திறந்து அங்கிருந்தேவும் வாசிக்கலாம். வரிசைத் தொடரின்றி, தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதில் ஓர் இன்பம். இஃகிஃகி.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பேவும் சுட்டியிருக்கின்றேன். ”தமிழ்மறை” என்பது ஒரு சொல். பிரித்து எழுதத்தலைப்படும் போது, பொருட்சிதைவுக்கும் மரபுச்சிதைவுக்கும் வழி வகுக்கின்றது. எடுத்துக்காட்டாக, தமிழ் மறையக் கூடிய எனும் பொருளில் ஒருவர் பொருள் கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவுப் புலங்களெல்லாம் தானியக்கத்திற்குப் பயன்படுத்தும் காலம் வந்தாகிவிட்டது. அவற்றுக்கெல்லாம் நாம் கொண்டு கூட்டி விளக்கமளித்துக் கொண்டிருக்க முடியாது.

”தமிழின எதிர்கால வழிகாட்டி”, தமிழினத்தின் எதிர்காலத்துக்கான வழிகாட்டி, தமிழினம் கொடுக்கும் எதிர்காலத்துக்கான வழிகாட்டி, தமிழினம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டி எனப் பலவாக்கில் பொருட்சிதைவுக்கு இட்டுச் செல்கின்றது. மாறாக, “தமிழினத் தொலைநோக்கு வழிகாட்டி” எனும் போது பொருட்சிதைவு மட்டுப்படுகின்றது.

ஆயிரத்து எழுநூற்று முப்பத்தி மூன்றாம் பக்கத்தில், “தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பு” எனும் தலைப்பில், அவசியமானதொரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்ப்புலமைக்கும், புத்தாக்கப் படைப்புகளுக்குமான அக்கப்போர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்ற இவ்வேளையிலே, அதற்கானதொரு மருந்தாக இடம் பெற்றிருக்கின்ற படைப்பாகத்தான் நான் இதைப் பார்க்கின்றேன். ’தமிழ்க்காவலர்கள்’ எனும் தோற்றப்பாடுக்கும் ’புதுமைப் புரட்சியாளர்கள்’ எனும் தோற்றப்பாடுக்கும் இடையில்தான் மேன்மை என்பதன் அவசியத்தை விளக்குகின்ற படைப்பு. அருமை. ’மொழியின் வளத்தைக் காக்கும் பொறுப்பு நமக்குளது’ என வலியுறுத்தும் படைப்பிலேயே சிதைவுகளும் பிழைகளும் இருக்கக் கூடாதன்றோ?!

அன்புடன் பொறுத்தருள்க. மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதாலேயே, “துரோகி, முதுகில் குத்துபவன்” போன்ற சொற்களைப் பயன்படுத்தும் அவலம் நமக்குள் நீங்க வேண்டும். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது!

(அண்மையில், நடப்புப் பதிப்பினை அன்பளிப்பாகக் கொடுத்த இளவலுக்கு நன்றி)

-பழமைபேசி.



 

7/24/2025

தூங்கற்க தூங்காது செய்யும் வினை

 தூங்கற்க தூங்காது செய்யும் வினை

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை [பொறுமையாக செய்ய வேண்டிய செயல்களை காலம் கடந்தும் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய செயல்களுக்குக் காலத்தாழ்ச்சி கூடாது]

திரைப்பட விழா, நட்சத்திர இரவு முடிந்து தாவளம் திரும்பும் போது மணி இரவு பத்தரை இருக்கும். பிள்ளைகள் எல்லாம் உறங்க வேண்டுமென விரைவுபடுத்திக் கொண்டிருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஏதோ சொன்னது போல இருந்தது. சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை.

அறைக்குச் சென்றதும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தில் கலியபெருமாள் அண்ணாச்சி அறைக்குத் தாகசாந்திக்காகச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறு கதைகள் பலவும் பேசிக் கொண்டிருந்தோம். திடுமென நினைவுக்கு வந்தது. ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியொன்று இருந்தது. அனுப்பி வைத்தேன். நன்றிங்கண்ணா என உடனே மறுமொழி வந்ததும், அழைக்கத் தலைப்பட்டேன். அப்போதுதான் சொன்னார், நினைவுக்கு வந்தது. “உதவி தேவை, தன்னார்வலர்களுடன் வாருங்கள்?” என்றார். மணி, நடுநிசி 12.30. July 4, 2025.

பற்றியம் இதுதான். மணி பத்துக்கு மேல் பணியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். விழா வளாகத்தில், 1000 இருக்கைகள் வெள்ளுறையுடன் இருக்கின்றன. மேசைகளின் மேல் விரிப்பு போர்த்தப்பட்டு இருக்கின்றது. அவை யாவற்றையும் பிரித்தெடுத்து விடவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, மாநாட்டுக்கூடத்தினர் மறுநாள் காலைக்கான அரங்க அமைப்புக்கான நாற்காலிகள் 2850 போடுவர். அதற்கான காலக்கெடு 12 மணி. தற்போது 12.30. அவ்வ்வ்...

செந்தில் அண்ணாச்சி, வெற்றிவேல் பெரியய்யா, ஷான் குத்தாலிங்கம், இன்னும் இருவர்(sorry, forgot), நான் என ஆறு பேர் மாநாட்டு வளாகம் சென்று சேர்ந்தோம். வாயிற்கதவுகள் அடைபட்டுக் கிடக்கின்றன. காத்திருந்து, அரங்கம் சென்று சேரும் போது மணி 1.

இஃகிஃகி. கார்த்திப் பெருமாள், ஒருங்கிணைப்பாளரின் இணையர் முருகேசன், பாரதி பாண்டி முதலானோர் ஏற்கனவே உள்ளுறைகளை உரித்துப் போட்டு உரித்துப் போட்டு ஓய்ந்திருந்தனர். கார்த்திக் அவர்கள் சொன்னது, “குனிஞ்சு குனிஞ்சு இடுப்பே முறிஞ்சு போச்சுப்பா”. இஃகிஃகி.

பிறகு நாங்களெல்லாம் சேர்ந்து முசுப்பாத்தியுடன் கதைத்துக் கதைத்து எஞ்சி இருந்தனவற்றையெல்லாம் உரித்துப் போட்டு, அவற்றையெல்லாம் வளாகத்தின் ஓரத்திற்குக் கடத்தியென ஒருவழியாக வேலை முடிவுக்கு வந்தது. மணி ஒன்றே முக்கால்.

காலை 8 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்குவதெப்படி?? எண்ணிப்பாருங்கள் தோழர்களே, ஒருங்கிணைப்பாளர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கக்கூடும்? 2 மணிக்கும் மேலென்றால் அவர்களும் போய்விடுவர்.

தொப்பலாக நனைந்துவிட்டோம். மீண்டும் அறைக்கு வந்து, குளித்து, காலையில் 6.45க்கு வளாகம் வந்துவிட்டேன்! யாரையும் உள்ளே விட மறுக்கின்றார்கள், ஒப்பந்தப்படி காலை 7.30 மணிக்குத்தானாம். எனக்கு மட்டும் பணியாளர் அட்டை இருந்தபடியால் உள்ளே விட்டுவிட்டனர்!!

இக்கட்டான சூழலில் களமிறங்கிய நண்பர்கள் வாழ்க வாழ்க! ! இஃகிஃகி!!


7/21/2025

தூரிகைப் போராளி டிராட்ஸ்கி மருது

தூரிகைப் போராளி டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருது, அணுக்கமானோர் இடையில் மருது அண்ணன்  என அறியப்படும் மருதப்பன் மருது அவர்களுக்கு, இயங்குபடக் கலைஞர், திரைப்பட சிறப்புத் தோற்ற இயக்குநர், கோட்டோவியக் கலைஞர், கணிப்பொறி வரைகலைஞர், காண்பியல்தள அறிஞர், முற்போக்கு சிந்தனையாளர், இப்படியான அறிமுகங்களை நாம் எங்கும் காணலாம்.

சார்லட் நகரில், எங்கள் வீட்டில் இடம் பெற்ற கலந்துரையாடலின் வழி(7/20/2025) நாங்கள் அறிந்து கொண்டது யாதெனில், பல்நோக்குச் சிந்தனையாளர் (Lateral Thinker) என்பதுதான். அடுக்கடுக்கான நுட்பங்களை விவரிக்கிறார். அவற்றை வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகும் போது, நல்லதொரு கதையாடலாக, சொற்பொழிவாக அது உருவெடுக்கும்.

அண்ணன் மருது அவர்கள் அப்படியான ஒரு பாங்கினைக் கொண்டிருக்கவில்லை. இந்தக் காலத்தில், இந்தக் கோட்டையானது இப்படி அமைந்திருக்கின்றது; அது ஒரு கல்கோட்டை. அதன் அமைப்பு இப்படியிப்படி எனச் சொல்கின்றார். மனம் இறும்பூது கொள்கின்றது. அங்குதான் திருப்பம். அந்த வேகத்திலேயே, அப்படி அமைந்திருக்காமல், இப்படி இப்படியெல்லாம் அமைந்திருக்கலாம்(what are the other options). அவற்றுக்கிடையே இது இப்படி அமைந்திருக்கின்றது. அதன் நுட்பம் இதுவாக இருக்கலாமென அவர் சொல்கின்ற பாங்கில், தனித்துவமாக மிளிர்கின்றார். நமக்குள் அந்த இடத்தில் ஒரு புது உலகம் காணக்கிடைக்கின்றது. நுட்பத்தின் அடி ஆழத்துக்கே அழைத்துச் செல்கின்றார்.

எடுத்துக்காட்டாக, குதிரை ஓடுகின்றது. அந்த ஓட்ட இயங்குதலில் பல்வேறு விதங்கள் உள்ளன. விரைவாக நேர்கோட்டில் ஓடுவது, வளைந்து வளைந்து பாதையின் அமைப்புக்கொப்ப ஓடுவது, கொண்டாட்ட மனநிலையில் சவாரி மனப்பான்மையில் ஓடுவதென நிறைய. ஒவ்வொன்றின் தன்மையும் இயற்பியலுக்கொப்ப மாறுகின்றது. அந்த இயற்பியலைப் புரிந்து கொண்டால்தான், காண்பியலும் நிறைவுகொள்ளும்; இயற்கையை வெளிக்காட்ட வல்லதாக அமையும். இந்த நுட்பத்தை விவரிக்கின்றார்.

ஏராளமான கலைஞர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழ்ந்த சுவைமிகு சம்பவங்களையும் குறிப்பிடும்போது, அந்தக் கலைஞனின் தனித்துவத்தைத் தன்பார்வையில் சொல்லும் போது, அந்தத் தனித்துவத்தின் சிறப்பு புலப்படுகின்றது.

கலைப்பார்வையிலிருந்து விலகி, அதே சம்பவத்தை சமூகப்பார்வையிலும் விவரிக்கத் தலைப்படுகின்றார். பொதுவாக ஆதிக்கசக்திகளை நாம் விமர்சிக்கின்றோம், வெறிகொண்டு திட்டித் தீர்க்கின்றோம். ஆனால், இவரோ, அது ஏன் ஆதிக்கசக்தியாக நிலைபெற்றதென்பதைச் சொல்கின்றார். காரணங்களை நாம் புரிந்து கொள்கின்றபோது நாம் நம்மைத் திருத்திக் கொள்வதற்கும் சூழலின் தன்மையில் இருக்கும் புலப்படாப் பொருளை புரிந்து கொள்வதற்குமான அகவெளி நமக்கு அமைகின்றது.

பிரிய மனமில்லைதாம். ஓவியர் மருது என்பவர் யாரென்று கேள்விப்படாதவர்கள்தாம், பிரியமனமின்றி விடைபெற்றுச் சென்றனர்.


-பழமைபேசி, pazamaipesi@gmail.com


 

7/08/2025

பேரவை விழா 2025


வணக்கம். இப்பதிவினை நான் தனிமனிதன் எனும் இடத்தில் இருந்து எழுதுகின்றேன். எவ்விதப் பொறுப்பின்சார்பாகவும் எழுதவில்லை.

2025 விழா துவக்கப்பணிகளேவும், எதிர்மறை எண்ணங்கள் நிரம்பிய சூழலில்தான் துவக்கப்பட்டன. உள்ளூரிலும் சரி, பேரவை சார்ந்தவர்களும் சரி, வதந்திகளை, அவதூறுகளை நீக்கமற எங்கும் பரப்பிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில்தான் துவக்கவிழா(kickoff meeting) இடம் பெற்றது. நானும் அதில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது, be optimistic, convention will be sold out.

மாமதுரைத் தொழில்முனைவோர் மாநாடு வந்தது. அங்கிருந்த நண்பர்கள் சொன்னார்கள். நடுத்தர, விளிம்புநிலை மக்களுக்கானதாக இருத்தலே, உங்களின் இலக்காக இருக்க வேண்டுமெனச் சொன்னார்கள். அப்படியேவும் நடந்தது. சகலதரப்பும் அடங்கிய பொதுநிகழ்வாக இருக்கவும் ஆசைப்பட்டோம். அவ்வண்ணமே விருந்திநர்களும் அழைக்கப்பட்டனர். தம் தரப்பு மட்டுமே இடம் பெற வேண்டுமென நினைப்பது, இலாபநோக்கற்ற பொது அமைப்புக்கு என்றுமே உகந்ததன்று. மாநாடு பெருவெற்றி கொண்டது. துணை அரங்கும் நிரம்பியது. அதுகண்டாவது அமைதி கொண்டிருந்திருக்கலாம்.

அவதூறுகள், வதந்திகள், கொடைதடுப்புப் பணிகள் மேலும் வீறு கொண்டன. தகவல் தொடர்புப் பணிகள் சீராகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்து வந்தன. சகல தரப்பும் உள்ளே வரும் போது, எல்லாமும் ஈடேறும் என்பதில் பெரும் நம்பிக்கை நமக்கு உண்டு. இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் குறியாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினோம். வாய்த்த பொருளாளரும் அதில் வல்லவர். இருந்தாலும், விருந்திநர் எண்ணிக்கையைக் கூட்டியதில் எனக்குப் பெரும் ஏமாற்றமே! 2009 - 2017ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை முன்வைத்துப் பேசினேன்.

வட அமெரிக்க வாகை சூடிப் போட்டிகளை வடிவமைத்தேன். பிற்பாடு, அதற்கான ஒருங்கிணைப்பாளரிடம் பொறுப்புகள் கையளிக்கப்பட்டு, பல்வேறு போட்டிகளின் தலைவர்களும் இனம் கண்டறியப்பட்டு, பன்மைத்துவம் போற்றப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள் மனவுறுதியோடு இருந்தனர். எவ்விதக் காரணத்துக்கும், நட்டமே ஆனாலும் சரி, விலையில்லா அனுமதியைத் தரக்கூடாது என்பதில். மிகச்சரியான முடிவு.

முதன்மை அரங்க நிகழ்ச்சிகள், இணையமர்வுகள், போட்டிகளில் பங்கேற்பது, விருந்திநராக வருவது போன்றவற்றுக்கு பலத்த போட்டி நிலவியது. காரணம், ஏற்படுத்தப்பட்ட நம்பகமும் தரமும்!

விழாவில் குறைகளே இல்லையா என்றால், இருக்கின்றனதான். அவையெல்லாம் பொருட்படுத்தக் கூடியன அல்ல. உள்ளூர் தன்னார்வலர்கள் குறைவு, ஆட்களை வேலைக்கமர்த்தித்தான் சாப்பாடு போட வேண்டுமென்றார் நண்பர். நான் சொன்னேன், அன்போடு அழைத்தால், ஊரே வருமென்றேன். அப்படித்தான் நடந்தது. பரிமாறுவதற்கும் போட்டா போட்டி.

அன்பை விதைத்தால் அன்பே விளையும்! 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பேரவை கண்டிருக்கின்றது Sold Out , that too twice, Madurai, Now in Raleigh!!

-பழமைபேசி.


 

5/28/2025

கொசுவர்த்தி 🌀

கொசுவர்த்தி 🌀

ஏசுவடியான்ங்ற பெயர்ல ஒரு நண்பர், அந்தப்பக்கமா குடியிருந்தாரு. இணையத்துல ரவுசு செய்துகிட்டு செம பம்பலா இருப்பாரு. “அண்ணே, தம்பியண்ணன் போஸ்டன் வந்துருவாரு, அதுக்கப்புறம்...”னு இழுத்தன். ஒன்னியும் பிரச்சினையில்ல நாம் பார்த்துக்கிறன்னு சொல்லிட்டாரு. அப்படி அப்படி, ஒரு இருவது இருவத்தி அஞ்சி பேரு கூடிட்டாங்க. தம்பி அண்ணன் என்கின்ற, நாமஉ புதுகை அப்துல்லாவும் வந்து சேர்ந்திட்டாரு. யாரும் நகர்றமாரி இல்லை. என்னோட அறையிலயே, தரையில விரிச்சுப் படுத்துகிட்டாங்க. அப்துல்லா அண்ணனும் தரையிலயே படுத்துகிட்டு ஒவ்வொன்னா கொளுத்திப் போட்டுகினு இருந்தாரு. வெடிச்சிரிப்புதான். பேசறாங்க பேசறாங்க... பேசிகிட்டே இருக்காங்க. நான் காலையில ஒரு நாலு மணி வாக்குல, நான் அறியாமலே தூங்கிட்டன். மத்தவங்கள்ல நிறையப் பேர் தூங்கவே இல்லையாம். இப்படித்தான் 2010 பேரவை விழாவுல எங்க பொழுது போச்சு.

சென்ற ஆண்டும் கிட்டத்தட்ட அதே போலத்தான். ஒரு சிறு அறை. நாங்கள்லாம் தரையில ஒக்காந்துட்டம், ஒரு நேரத்துல கிட்டத்தட்ட 40 பேரு. ஏசியெல்லாம் வேலைக்கே ஆவலை. பால்கனி கதவு திறந்து விட்டாலும், ரூமுக்குள்ள வெக்கையோ வெக்க. காலையில மூணு, நாலுனு ரெண்டு நாளும். மூனாவது நாள் காய்ச்சலே வந்து போட்டுது. அன்பாலும் அக்கறையாலும் கழிந்த பொழுதுகள்.

இஃகிஃகி, இதோ வந்துவிட்டது அடுத்த ஆண்டு. ஜீன் 27ஆம் நாளே பொறப்புட்ருங்க. மிச்சிகன், கனடா, எங்கிருந்தாலும் சரி, மெதுவா வண்டிய உருட்டிகினு வந்தீங்கன்னா, சனிக்கிழமை, 28ஆம் நாள் சாய்ங்காலம் வந்து சேர்ந்திடலாம். நேரா, வில்மிங்ட்டன் பீச்சுக்கு வுட்ருங்க வண்டிய. அங்கனக்குள்ள ஏர்பிஎன்பியில ஒரு வீட்டப் புடிச்சி கும்பலா இருக்கலாம். சமச்சி சாப்டுகிட்டு, கடற்கரையில விளாடிகிட்டு, தாகசாந்தியும் பார்த்துகிட்டு, அங்கிருந்தேவும் பொட்டிதட்டிகினு நாலு நாள் இருந்தம்னா, புதங்கிழம வந்திரும். விடிஞ்சா விழா. பீச்சுக்கும் விழா வளாகத்துக்கும் ஒரு ரெண்டு மணி நேரம்தான். கூட்டிகழிச்சிப் பாருங்க. எல்லா செரி வரும்.

இந்தவாட்டி எல்லாமே உள்ளாரத்தான். தடுக்கி விழுந்தா தங்குமடத்துலதா தடுக்கி வுழோணும். சோத்துப் பந்திகளும் உள்ளாரயேதான். அந்தப் பக்கம் இருக்குற ஒரு நண்பர் வித்தியாசமானவர். அதாவது, வாழ்க்கய வாழ்றவரு. வெள்ளிக்கிழம சாய்ங்காலம் பொறப்பட்டு, பாண்ட் பார்க் குளத்துக்குப் போனவரு, திங்கக்கிழம காலையிலதான் வீட்டுக்கு வந்தாரு. என்னங்க இதூனு கேட்டன். ஆமா பழம, குளக்கரையிலயே கூரயக் கட்டி, தனிமையில ரெண்டு நாள் இருந்து போட்டு வந்தன்னு சொன்னாரு. அடிக்கொருக்கா, நடுநிசிப் படங்கள வேற டுவிட்டர்ல போட்டுகினு இருந்தாரு. அம்மணக்குளியல்னு அதிகால ரெண்டு மணிக்கு போட்டா வேற போட்டாரு. டுவிட்டரே அல்லோகலம் ஆகிடிச்சி. எதுக்கு சொல்றன்னா, அங்கனக்குள்ள அந்தமாரி குளங்கள், குளக்கரையில் தாவள வசதிகளும் இருக்கு.

இந்த ஒரு வாரப் போக்க வெச்சிப் பார்த்தா, சோல்ட் அவுட் ஆவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. டக்கு புக்குனு ஏற்பாடுகளைச் செய்து போடுங்க. தமிழாலயும் எணையுலா, கூடவே தண்ணியாலவும் எணையலாம், நான் கொளம், பீச்ச சொன்னனுங்க. வந்துருங்க அல்லாரும். வர்ட்டுமா!!

-பழமைபேசி.

4/06/2025

பேரவை விழாக்களும் நானும்

பேரவை விழாக்களால் மிகவும் பயனடைந்தவன் நான் என்பதில் எப்போதும் எனக்கு ஒரு பெருமை உண்டு. எத்தனையோ காரணங்கள் இருப்பினும் இதனை இன்று முன்னிறுத்த விரும்புகின்றேன்.

பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் ஓர் உந்துசக்தியாகப் பேரவை எங்களுக்கு அமைந்தது. நான் கலந்து கொண்ட முதல் விழாவின் போது, முதலாம் மகருக்கு வயது 5. தொடர்ந்து பேரவை விழாக்களில் பங்கு கொண்டு, முதன்மை மேடையில் வைத்துப் பல பரிசுகள் பெற்றார். Tamil Jeopardy போட்டியில் வாகை சூடினார். தமிழ் சேம்பியன் பரிசும் பெற்றார்.

நான் கலந்து கொண்டதில் மூன்றாம் விழா, சார்ல்சுடன் நகரில் இடம் பெற்றது. நிறைய, அறிவியல் துறையில் பணியாற்றும் முனைவர் நண்பர்கள் கிடைத்தனர். பொதுவாக, ஐடி துறையில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களுக்கு, கல்வித்துறையில் ஒரு மண்ணும் தெரியாது. ஆனால், அறிவியல்துறைசார் பெற்றோரின் பிள்ளைகள் மேம்பட்டதான போக்கில் இருப்பர். பேரவையினால் கிடைத்த முனைவர் உதயசூரியன் பொன்னுசாமி, முனைவர் கண்ணன் குஞ்சிதபாதம் ஆகியோர் எங்கள் பிள்ளைகளுக்கான வழிகாட்டிகளாக ஆகிப் போயினர்.

இடைநிலைப் பள்ளியிலிருந்தேவும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது, ஆய்வுப்பணிகள் செய்வது முதலானவற்றில் இவர்கள் உதவி வந்தனர். மூன்று பிள்ளைகளும், பள்ளியில் இருக்கும் போதேவும் பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு, மாகாண அளவிலான போட்டிகளில், மாகாண செனட்டர், காங்கிரசுமேன் போன்றோர் நடத்தும் அறிவியல் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கின்றனர். பரிசில்கள் பெற்றிருக்கின்றனர். அத்தனைக்கும் வித்து இவர்கள்தாம்.

4/5 ஆண்டுகளுக்கு முன்பு மாகாண அளவிலான போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற போதுதான், தேடி வந்து அறிமுகம் செய்து கொண்டார் முனைவர் பாரதி பாண்டி அவர்கள். அவர் நடுவர் என்பதால், போட்டி முடிந்த பின்பு, ஆய்வுப்பணிகள் இன்னும் மேம்பட என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதற்கான வழிகாட்டுத்தாள் ஒன்றினைக் கொடுத்தார். 

பிள்ளைகள், இன்றைக்கு, பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவர், இளம் ஆய்வாளர்கள் பள்ளியில் மாணவர்கள் என்றெல்லாம் ஆகிப் போயிருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தாம், அறிவியல்தேனீ களத்தினைக் காண்கின்றேன். முனைவர்கள் சுவாமி, மனோகரன் முதலானோரைக் கொண்டு அமைந்திருக்கின்ற நல்லதொரு முன்னெடுப்பு. ஐ.டி துறை பெற்றோர்களுக்கான அடுத்தகட்ட வழிகாட்டிகளாகத்தான் நான் அவர்களைப் பார்க்கின்றேன். அறிமுகப்படுத்திய நண்பர் செளந்தர் ஜெயபால் அவர்களுக்குச் சிறப்பு நன்றிகள்.

நமக்காக நம்மால் நடத்தப்படுவதுதான் நம் பேரவை. பங்களிப்புச் செய்தலும் பயனடைதலும் நம் வசமே இருக்கின்றன.


3/06/2025

எளியமுறை யாப்பிலக்கணம்

எளியமுறை யாப்பிலக்கணம்

பிற்பகல் நேரம்.  பதிவில் இல்லாத எண்ணில் இருந்து ஒரு வாட்சாப் தகவல் வந்து விழுந்தது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழுவின் அறிவிப்பு ஒன்றைக் குறிப்பிட்டு, இது பிழையன்றோயென வினவி இருந்தார். என்னுள் பல வினாக்கள் கிளர்ந்தன.

முதலில் இவர் யார்? இலக்கியக்குழுவின் அறிவிப்பைச் சுட்டி என்னிடம் ஏன் விடுக்க வேண்டும் வினாவை?? இருந்தும், அவற்றை ஒதுக்கி வைத்து விட்டுச் சொன்னேன், ’பிழைதிருத்தத்துக்கு ஆட்பட்டு மட்டுறுத்தலுக்கு ஆட்பட்டிருக்கும் அறிவிப்பு அது’. தற்போதைய அறிவிப்பில் பிழை களையப்பட்டிருக்கின்றதெனச் சொன்னேன். நாம் ஏற்கனவே பேசியிருக்கின்றோம், ”உங்கள் வலைப்பதிவில் இருக்கும் வாசகம்” என அவர் கூறியதும்தான் மெலிதாக நினைவுக்கு வந்து நிழலாடியாது. 2009/2010 காலகட்டத்தில் நிகழ்ந்த உரையாடல்கள் நினைவுக்கு வந்தன.

தொடர்ந்து அளவளாவியதில், நான் அவர் வீட்டு முகவரியைக் கேட்டேன். மறுமொழியாக அவரும் என் வீட்டு முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார். பல பணிகள். மறந்து போய்விட்டேன். இதற்கிடையில் மேலுமொரு நிகழ்வு.

வட அமெரிக்க வாகை சூடி போட்டிகள் குழுவினருடன் பேசிக் கொண்டிருக்கையில், படைப்புத் தேனீ குழுவைச் சார்ந்த கார்த்திக் காவேரிச்செல்வன் எனும் நண்பர் சொன்னார், ’எல்லாமும் பட்டியல் இட்டிருக்கின்றீர்கள்; மரபுச்செய்யுள் எனும் பிரிவு இல்லையே?’ என வினவினார். நாங்கள் எல்லாம் சிரித்துக் கொண்டோம். அவர் சொன்னார், “அதற்கான பதிவு நிகழ்கின்றதோ இல்லையோ, ஆனால் பட்டியலில் இடம் பெறச் செய்வதே தமிழுக்கான அணியாக இருக்கும். அல்லாவிடில் அது பிழை; வேண்டுமானால் நாம் பயிற்சியும் அளிக்கலாம்” என்றார். சரியாகப்பட்டது. உடனே அப்பிரிவும் சேர்க்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், “நின்று வென்ற தமிழ்” எனும் தலைப்பிலும் உரையாடி இருந்தோம். தமிழ் எப்படியாக நிலைபெற்று வென்றதென்பதன் பின்னணியாக, ஓரிரு பற்றியங்களைக் குறிப்பிட்டிருந்தோம்.

இன்று(03/06/2025) பிற்பகல். நூலஞ்சலில் சில நூல்கள். அவரும் சொல்லியிருக்கவில்லை, இப்படியிப்படியாக நூல்கள் எழுதியிருப்பதாக. வியப்பாக இருந்தது. “எளிமையாய்ப் பாக்கள் எழுதலாம்” எனும் நூலைக் கண்டதும் கூடுதலான வியப்பு மேலோங்கியது. வட அமெரிக்க வாகை சூடி குழுவினரிடம் கேட்டறிந்து கொண்டேன்.  மரபுச்செய்யுள் எழுதும் போட்டியில் இதுவரையிலும் எத்தனை பதிவுகள் ஆகியிருக்கின்றன? 11 பதிவுகள் ஆகியிருக்கின்றனவாம்! நின்று வென்ற தமிழ்!!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், வாழ்க தமிழ்!