9/16/2023

வானமே எல்லை, இல்லை, வானத்துக்கு அப்பாலும்


சிதிலமுற்ற கூட்டில் ஒரே ஒரு முட்டை இருப்பதைக் கண்டார் உழவர். சுற்றுமுற்றிலும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய மட்டிலும் பறவைகளைக் காணோம். குஞ்சுகுளுவான்களைக் காணோம். முட்டையைத் தொட்டுப் பார்த்தார். வெதுவெதுப்பாய் இருந்தது. ஆக நாட்பட்ட முட்டையும் அன்று. கையிலெடுத்துக் கொண்டு போய், பண்ணையில் இருக்கும் அடைக்கோழியின் முட்டைகளுள் முட்டையாய் வைத்து விட்டார்.

அடைக்கோழியும் அடை காத்துவர, குஞ்சுகள் பொரிந்தன. இந்தக் குஞ்சுவும் அவற்றுள் ஒன்றாய் தாய்க்கோழியின் பின்னால் திரிந்து, கொத்தித் தின்னப்பழகியது. நடைபோடப் பழகியது. ஓடிச்செல்லப் பழகியது. ஒருபோதும் வானத்தைப் பார்க்கவில்லை. நினைத்தால் வானத்தை அதனால் தொட்டவிடக் கூடிய கழுகுக்குஞ்சுதான் அது. ஆனால் சக கோழிகளைப் போன்றே வாழ்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள், வானத்தைப் பார்த்தது. கழுகொன்று சாய்ந்து சாய்ந்து சாகசம் செய்து கொண்டிருந்தது. இது நினைத்துக் கொண்டது, “நானும் கழுகாகப் பிறந்திருந்தால்”.

நாம் எல்லாருமே அப்படித்தான். நாமும் ஒரு கழுகாய், புலியாய், சிங்கமாய்த்தான் பிறந்திருக்கின்றோம். ஆனால் நாம் யார் என்பதே அறிந்திராமல் மனத்தடையுடன் வாழ்கின்றோம். அடுத்தவரைப் பார்த்துப் பார்த்து வாழ்கின்றோம். நாம் யார்? நாம் நாமாக வாழ்வதில்லை. 

வானத்துக் கழுகைப் பார்த்துக் கொண்டேவும் இது மெல்ல தன் இறக்கைகளை அடித்துப் பார்த்தது. என்ன அதிசயம்? தம்மாலும் மேல்நோக்கிச் செல்ல முடிந்தது. ஆனால் களைப்பு மேலிடவே தாழவந்து தரையிறங்கிக் கொண்டது. வயோதிகம் காரணம். காலங்கடந்த அறிதல். இளமையிலேயே இது தெரிய வந்திருந்தால்? ஆகவே, இளமையிலேயே உங்கள் ஆற்றலை உணர்ந்து செயற்படுங்கள் என்பதாக மாணவர்களுக்கான எழுச்சி உரைகள் மேற்கொள்ளப்படுவதை எங்கும் காணலாம்.

சரிதான். ஆனால் வானமென்ன, வானத்துக்கு அப்பால் செல்லவும் வயது ஒரு தடை அல்லவே அல்ல. 90 வயது முதியவர் ஒருவர், தன்னந்தனியாக ஓர் அறையில் வாழ்ந்து வருபவர். தட்டுத்தடுமாறி, ஓரிரு சொற்றொடர்களாகத் தம் வாழ்க்கையில் கொண்ட பட்டறிவுகளைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வர பெருங்கூட்டமே அவரைப் பின்தொடரத் துவங்குகின்றது. பின்னாளில், பல்கலைக்கழகங்களுக்குப் பகுதிநேர ஆசிரியராக அழைக்கப்படலானார். தம் 90ஆவது வயதில், Joyce DeFauw என்பார், வடபகுதி இல்லினாய் பல்கலைக்கழகத்தில் படித்து தம் பட்டத்தைப் பெறுகின்றார். தம் 96ஆவது வயதில், Nola Ochs (née Hill) என்பார் கன்சாசு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று, கின்னசு சாதனையையும் தமக்கானதாக ஆக்கி,  105 வயது வரை வாழ்ந்து  2016ஆம் ஆண்டில் தம் பயணத்திலிருந்து விடைபெற்றுக் கொள்கின்றார். இவர்களெல்லாம் பட்டம் பெற்றதனால் என்ன பயனென வினவலாம். ’வானமேகிட வயது தடையேயல்ல’ என்பதனை நிறுவி இருக்கின்றார்கள்தானே?

“I don't dwell on my age. It might limit what I can do. As long as I have my mind and health, it's just a number.” -Nola Ochs

No comments: