8/28/2023

சங்கம்

இந்த வார ஈறு ஓர் அக்கப்போரில் கழிந்தது. என்னவெனில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் நிகழ்ந்தது. பிள்ளைகளுக்கு வயலின் வகுப்பு இருந்ததால், நண்பரின் அழைப்புக்குப் பணிய முடியவில்லை. அதன் பதிவு பிறகு கிட்டியது. கேட்டதுமே எனக்குக் கடும் சினம்தான் மேலெழுந்தது. அப்படி என்ன இடம் பெற்றது?

முன்னாள்தலைவர், உறுப்பினர் சேர்க்கையைப் பற்றி வினா விடுக்கின்றார். அதற்குரிய குழுத்தலைவர் அவர் தரப்புக் கருத்துகளைச் சொல்கின்றார். இடையில், அக்குழுவின் துணைத்தலைவர் (அமைப்பின் துணைத்தலைவரும் கூட) குறுக்கிட்டு, அவர் கருத்தைச் சொல்கின்றார்.
“எனக்கு குழுவுல என்ன நடக்குதுன்னே தெரியலை. எந்த இன்பர்மேசனும் ஷேர் செய்யுறதில்லை. டிரான்ஸ்பேரன்சியே இல்லை”
கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற செயலாளர் குறுக்கிட்டு, ”எனக்குச் சில கேள்விகள் இருக்கின்றது. கேட்கலாமா?”
“ம்.. கேளுங்க”
“உங்களுக்கு நாலஞ்சி சங்கங்களோட வேலை செய்யச் சொல்லி பிரிச்சிக் குடுத்தாங்ளா?”
“ஆமா. நாலஞ்சி சங்கங்களோட வேலை செய்யச் சொல்லி, எனக்குப் பிரிச்சுக் கொடுத்தது உண்மைதான்”
சொல்லிக் கொண்டிருக்கும் போதேவும், “கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க, கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க”
பதற்றம் பற்றிக் கொள்கின்றது. அதற்குப் பின் ஒரே சீர்கேடான சூழல்தான்.
0o0o0o0o0o
செயலரின் செயல் அநாகரிகமானது. குழுத்தலைவரின் செயல் அதைக்காட்டிலும் தரம் தாழ்ந்தது. ஏனென்றால் இது காணொலிக் கூட்டம். வீட்டில் பெரிய பெரிய திரைகளில் குடும்பத்தினர் பார்க்க நிகழ்ச்சியைப் பார்ப்போர் உண்டு. பொறுப்பில் இருப்பவர்களே பண்பாடற்ற முறையில் நடந்து கொள்வது ஒப்புக் கொள்ள முடியாதவொன்று. கழிசடைத்தனத்தைக் கழிசடைத்தனம் என்றாவது ஒப்புக் கொள்ள வேண்டுமென ஒரு குழுவில் பதிவிட்டேன். அவ்வளவுதான். நிர்வாகக் குழுவைச் சார்ந்த 5 அல்லது 6 பேர், EST - PST, அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருப்பவர்கள், ஒரே நேரத்தில், ஆளுக்காள் ஒரு திசையில் இழுத்துக் கொண்டிருந்தனர். நான் நிதானமாகவே இருந்தேன். குழுவிலும் அவர்கள் செயற்பட்டவிதம் காடைத்தனமாகவே இருந்தது. அதற்கிடையே எழுதியதுதான் இது. இருந்தும் பயனளிக்காமல் போகவே கடைசியில் நாமும் இறங்கி அடிக்க வேண்டி ஆயிற்று என்பது தனிக்கதை.
0o0o0o0o0o
எதுவொன்றையும் நாம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். குழுவில் அண்மையில் நடந்த ஒரு அலை(flare-up) பார்த்தோம். இந்நிகழ்வையும் நாம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். எப்படி?
கதையில் நல்லகதை கெட்டகதை என்பதே இல்லை. ஒருகதையில் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதென்பதைக் கற்றுக் கொள்கின்றோம். இன்னொரு கதையில் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமெனக் கற்றுக் கொள்கின்றோம். இதுவும் அப்படித்தான். ஒரு பாடம் பயில்வதற்கான ஒன்று, case study.
ஏதோவொரு நிறுவனம். ஒரு பொருளை விற்கின்றது. சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை அல்லது கருத்து. அது நிறுவனத்தின் வணிகத்திற்கு உகந்ததாக இல்லை. என்ன செய்வர்? social media situation management’க்கு தன்னியக்கமாக இருக்கின்ற ஒரு செயலியில் இருந்து அறிவுறுத்தல் செல்லும். உடனே மக்கள் தொடர்புத் துறை களத்தில் இறங்கும்.
அங்கீகரிக்கப்பட்டவர் உடனே அந்தக் கருத்தாளர், பயனரைத் தொடர்பு கொண்டு நயமாகப் பேசி, கருத்துக்கு நன்றி சொல்வார். நேரம் ஒதுக்கிக் கருத்துச் சொன்னமைக்காக கூப்பன், அல்லது பரிசுப் பொருள், இலவசசேவை என ஏதாகிலும் ஒன்றைக் கொடுப்பர். மேலும் அந்தக் கருத்து ஏன் எழுந்தது, அதில் மேம்பாட்டுக்கான பற்றியம் ஏதாகிலும் உள்ளதா முதலானவற்றை உள்வாங்கிக் கொள்வர். சந்தடி சாக்கில், நல்ல கருத்து, ஆனால் அந்தச் சொல், அந்தவரியை நீங்கள் சீரமைத்தால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் அந்த வாய்ப்பை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வர். இது நிறுவனத்தின் பார்வையில்.
பயனரின் பார்வையில், அவர் அந்தக் கருத்தை நீக்கி விட வாய்ப்புகள் அதிகம். கூடவே அவர் அந்தப் பொருளைப் பற்றி நல்லவிதமாகப் பேசவும் விழைவார்.
2008/2009 வாக்கில் பேரவைப் பக்கமே எவரும் வர மாட்டார்கள். பயங்கரவாத அமைப்பு என்றெல்லாம் பேச்சாகி, வர அச்சம். இணையத்தில் நாங்களெல்லாம் அப்படிச் சொல்பவர்களைச் சாடுவதில்லை. மாறாகத் தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவோம்.
அப்போதெல்லாம் இப்போது போலத் தொலைக்காட்சிகள் இல்லை. யுடியூப்கள் இல்லை. சன், ஜெயா, ராஜ், மக்கள் தொலைக்காட்சி மட்டுமே. மக்கள் தொலைக்காட்சியில் மட்டும், விழாவுக்கு வந்து சென்றோர் பலர் பேரவை குறித்துப் பேசியதை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் அதற்குப் பயனர்கள் குறைவு. எனக்குத் தெரிந்து, ஜெயா தொலைக்காட்சியில் பேரவை குறித்துத் தனிநிகழ்ச்சியாக அமைந்தது நான் கொடுத்த நிகழ்ச்சிதான். அதற்குப் பிறகு தமிழ்மணம் வாயிலாகப் பலர் பேரவையின்பால் நாட்டம் கொண்டனர்.
என்னைக் காட்டிலும் பலர் பேரவைக்காக இந்த சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நான் கற்றுக் கொண்டவை நிறைய. ஒருநாளும் இப்படிக் குழுவாகப் போய் கருத்தாளர்களைக் கையாண்டதில்லை.
-பழமைபேசி.

No comments: