5/07/2023

சித்ரா பெளர்ணமி

தாய்த்தமிழ்நாட்டில் மாலைநேரம். பெளர்ணமி வழிபட மக்கள் ஆங்காங்கே கோயில்களில் குழுமி இருக்கின்றனர். அமெரிக்காவில் காலை மணி ஒன்பது. அடுத்தடுத்து அலுவலகக் கூட்டங்கள். ஊரிலிருந்து வாட்சாப் வழி ஓர் அழைப்பு. கூட்டத்தின் நடுவே அதற்குப் பணிய முடியவில்லை.

கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்குமான இடைவெளியில் அந்த வகுப்புத் தோழருக்கு அழைப்பு விடுத்தேன். வீடியோ காலில் வந்தார்.

நான் வாழ்ந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு வேறொரு ஊரின் கோயிலடியில் நின்று கொண்டு அழைத்திருக்கிறார். “உங்க ஊர்லதான் இருக்கன். இந்தா, இந்தக் கோயில் என்னனு சொல்லு பார்க்கலாம்”. எனக்குப் பிடிபடவே இல்லை. முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

நண்பர் அருகிலிருந்தவர்களை அழைத்து என் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கச் சொன்னார். அப்போதுதான் அறிய நேரிட்டது, அது நான் வாழ்ந்த ஊரல்ல. வேறொரு ஊர். ஆனால் அந்த ஊரையும் நான் நன்கறிவேன். அவருக்கு அருகில் இருந்தவர்களும் பரிச்சியமானவர்களே.

அருகில் இருந்த எல்லாருக்குமே மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. திடீரென அங்கே கோயிற்திடலில் இருந்த ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் வயதையொத்த சிறுவனிடம் என்னைக் காண்பித்து, இது யார் தெரியுமாவெனக் கேட்டனர். “இது, பழமைபேசிதானே?” என்றார் அந்த இளம்பிள்ளை.

அடுத்த கூட்டத்துக்கு நேரமாகிவிடுமேயென எண்ணி அழைப்பை முடித்துக் கொண்டேன். ஆனால் என்னால் அடுத்த அழைப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. மனம் சமநிலையில் இருந்திருக்கவில்லை. கூட்டத்தை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைக்க வேண்டினேன்.

நான் பார்த்திராத ஒரு சிறுவன். என் பேச்சுகள், எழுத்துகள்வழி அறிமுகமாகி இருந்திருக்க வேண்டும். எவ்விதத்திலும் என் பேச்சும் எழுத்தும் நடவடிக்கைகளும் அப்படியானவர்களைப் பாதித்து விடக் கூடாதுதானே? யோசிக்கலானேன். அறிஞர் ஆல்பர் ஐன்ஸ்டினின் கூற்று நினைவுக்கு வந்தது. வெற்றி கொள்வதில் இல்லை வாழ்வு, மதிப்புக் கொள்வதில் இருக்கின்றது.  “Try not to become a man of success, but rather try to become a man of value” ― Albert Einstein


No comments: