4/25/2023

எப்படியாக உயிர் வாழணும்?

எதுக்காக உயிர் வாழணும்?’ என்பது குறித்து இருவேறு குழுக்களில் பேசத் தலைப்பட்டேன்.  பெரிதாக ஆதரவு கிட்டவில்லை. எனினும் நாம் நினைத்தவற்றைப் பதிவாக எழுதி வெளியிட்டோம். அன்பு காசி அண்ணன் அவர்கள் தம் காலவரிசையில் பகிர்ந்திருப்பதாய்த் தெரிவித்தார். மகிழ்வாக இருந்தது. 

அதற்குக் கிட்டிய மறுமொழியையும் தெரியப்படுத்தி இருந்தார். இனி அது குறித்துப் பார்ப்போம்.

1.”அந்த பயோ தான் கொஞ்சம் நெருடல்.”

வலைப்பதிவு துவங்கிய காலத்தில், முகப்பு மொழியாக, “எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!” எனும் சொலவடையைப் பகிர்ந்து, அது இன்னமும் அப்படியே இருக்கின்றது. இதே சொலவடையை இப்படியும் சொல்வார்கள், “இனம் இனத்தோட, வெள்ளாடு தன்னோட”.

இனம் என்பதைச் சாதி, ரேசிசம் எனப்படுகின்ற இனவாதம், மொழிவாதம் முதலானவற்றின்பேரில் வியந்தோதப்படுவதாகக் கருதும் போது நெருடல் கொடுக்கக் கூடியதுதான். ஆகவே அப்படியான மறுமொழிக்கு முகாந்திரம் உண்டு. அதே வேளையில், முகப்புமொழி இடம்பெற்ற வரலாறு, இடம், பொருள், ஏவலைக் கொண்டும் கொஞ்சம் மொழிப்புலமை கொண்டும் பார்க்கின் அந்நெருடலுக்கு வாய்ப்பிராது. எப்படி?

இணையம், வலைப்பதிவுகள் தோன்றிய காலம். திறன்பேசிகளோ(smart phone), மேம்பட்ட அலைக்கற்றைகளோ இல்லாததொரு காலம். 2006ஆம் ஆண்டு. தாய்த்தமிழ் நாட்டிலிருந்து பத்தாண்டுகளாகப் பெயர்ந்து  பூமிப்பந்தின் மறுகோடியில் வாழும் ஊரகத்தான் ஒருவன், சகதமிழரோடு புழங்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். சக தமிழர் என்பதையுங்கடந்து, மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஒவ்வாமை கொள்ளாமல் இயைந்து உரையாடக் கூடிய அளவில் ஒரு கூட்டத்தோடு சேருகின்றாமெனும் நினைப்பில் முகப்பு மொழி சிறப்புச் சேர்க்கின்றது. அமெரிக்காவில் இருந்தாலும், தனக்கான ஒரு கூட்டம் என்பது தேவையாக இருக்கின்றது. திருக்குறளும் அதையேதான் சொல்கின்றது.


இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

சுற்றம், கூட்டம், சமூகம், குழுமம், திரள் ஆகிய பொருட்களில்தாம் ‘இனம்’ எனும் சொல் திருக்குறளில் எடுத்தாளப்பட்டு இருக்கின்றது.  இனம் எனும் சொல்லின் வேர், ‘இன்’ என்பது. அதாவது ”இந்த” காலம், இடம், பொருள் என்பதுதான் வேர். இந்தக் காலத்தில், அதாவது நடப்பில் அண்டி இருக்கும் மக்கட்கூட்டம் இனம். சொலவடையின் பிறப்பிடமும் அதுவே. அண்ணன் அவர்கள் மிக அருமையாகச் சொல்லி இருக்கின்றார். “ஆடு மாடுகள் பல நிலப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக சென்று வந்தாலும் இரவில் அவை தனக்கான கொட்டிலில் தன் தோழமைகளோடு அடைந்து கொள்வது என்பதைக் கண்ட ஊர்ப்புறத்தார் சொல்லாடல் இது. இனம் என்பதற்கு இறுக்கமான பொருள் கொள்ளத் தேவையில்லை. ”

2.IMO, 4th point is is very weak. First three are good enough. YMMV.

இந்த மறுமொழியும் பொருளார்ந்த மறுமொழிதான்.  ஏன் வாழ வேண்டும் என்பது தலைப்பாக இருந்தாலும், சுருங்கச் சொல்லும் போது, ஏன், எதற்கு, எப்படி என்பனவற்றையும் உட்கொண்டாக வேண்டுமென்பதே அது இடம் பெற்றதற்கான காரணம்.  தம் மறைவுகாலத்துக்குப் பிறகு வருபவருக்கும் தீங்காய் இல்லாதபடிக்குச் சுவடுகள் இருக்கும்படியாக வாழ்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு வாழ்தல் இனிது.

https://maniyinpakkam.blogspot.com/2023/04/blog-post_25.html


No comments: