3/28/2023

தன்னெரிமம்

ஆங்கிலமொழியில் Autophagy;இது ஆங்கிலமேதானா என்றால், இல்லை. ஜப்பானிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சொல். Phagy என்றால் எரிமமெனப் பொருள். தனக்காகத் தாமாக எரித்துக் கொள்வதால் Autophagy என்றாளப்படுகின்றது. (aw-TAH-fuh-jee) A process by which a cell breaks down and destroys old, damaged, or abnormal proteins and other substances. The breakdown products are then recycled for important cell functions, especially during periods of stress or starvation.

நம் உடல் என்பது ஆகப்பெரிய வேதிச்சாலை. இப்பேரண்டத்தில்(universe) நிகழ்கின்ற எல்லாமும் ஒரு மனித உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆக நம் உடலும் ஓர் அண்டம்தான். நம் உடலுக்குள் இல்லாத தொழில்நுட்பம் இல்லை, வேதிநுட்பம் இல்லை.

ஐம்பொன் போன்ற சத்துக்கற்களால், கோடானு கோடிக் கற்களால் (அணுக்களால்) கட்டப்பட்டிருக்கின்றது நம் உடல். இயக்கத்திற்குப் போதுமான தனிச்சத்துகள், உணவாக உட்கொள்ளப்படாத போது, இப்படியான கற்களில் சிலவற்றைச் சிதைத்து அதிலிருந்து கிடைக்கும் சத்துகளைக் கொண்டேவும் இயங்கத் தலைப்படும். 

ஒருவர் உண்ணாநிலை மேற்கொள்கின்றார். இயக்கத்திற்காக குருதியிலும் உடலிலும் இருக்கும் எரிபொருள் எரிக்கப்படும். ஏறக்குறைய எட்டுமணி நேரத்துக்குப் பின் கல்லீரலின் தற்காலிகச் சேமிப்பில் இருப்பதை எரிபொருளாகப் பயன்படுத்தும். அடுத்த எட்டுமணி நேரத்தில், அது தீர்ந்து போனதும், உடலின் கட்டுமானத்தில் இருக்கும் அரைகுறை, ஒவ்வா, உபரி அணுக்கள் எல்லாவற்றையும் சிதைத்து அதன்வழி கிடைக்கும் சத்துகளை அதனதன் வேலைகளுக்காகப் பயன்படுத்தும். இதுதான் தன்னெரிமம் எனப்படுகின்றது. இப்படியான தன்னெரிப்புப் பணி முடிந்ததும், உடலில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு, எரிபொருளாக மாற்றப்பட்டு இயக்க ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படும். நிற்க!

தன்னெரிமத்தால், அரைகுறை, ஒவ்வா, உபரி அணுக்கள் சிதைக்கப்பட்டு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவதால் உடல் பொலிவுறுகின்றது. புற்று, வீக்கம், வீண் அணுக்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன.  ஆக, ஆயுள் நீடிக்க வழிவகுக்கும் தன்னெரிமச் செயற்பாட்டுக்கு, 48 மணி நேரம் வரையிலான உண்ணாநிலை சிறந்தது; 16 மணி நேர உண்ணாநிலைக்குப் பிற்பாடு தன்னெரிமம் துவங்கும். 

இத்தகவலை விழுமுதலாகக் கொண்டு, தேடலையும் நாடலையும் மேற்கொள்கின்றோம். தன்னெரிமம் குறித்தான கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. மெய்யெனும் வேதிச்சாலையில் பல்வேறு உறுப்புகள் பல்வேறு பணிகளைச் செய்கின்றன. அவற்றுக்கு உள்ளீடு பல்வேறு சத்துகள். சில சத்துகள் சேமிப்புக்குள்ளாகின்றன. சில சத்துகள் அன்றாடமும் நாம் உட்கொண்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக, சில உயிர்ச்சத்துகள்(vitamins) நீரில் கரையக் கூடியன. பயன்பாட்டுக்கு உரியது போக எஞ்சியது கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். இப்படியான தனிச்சத்துகளில் எதற்குப் போதாமை ஏற்படும் போதும், மெய்யெனும் வேதிசாலையானது எங்காவது எதையாவது மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியுமாயெனப் பார்த்து, அதனைச் சிதைத்து, அதிலிருந்து கிடைக்கும் சத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளும். இப்படியும் தன்னெரிமம் நிகழ்கின்றது. ஆக, தன்னெரிமத்துக்குப் பதினாறு மணி நேரம் உண்ணாநிலை மேற்கொண்டேயாக வேண்டுமென்பதில்லை என்றுமாகின்றது.

மேற்கூறிய கூற்றுகளில் எது சரி? இரண்டுமே சரிதான். எப்படி? தொடர்ந்து மூன்று வேளை உணவு, கூடுதலாக அவ்வப்போது சிறுதீன்கள், பழங்கள், காய்கள், குடிநீர்களென எதையாவது உட்செலுத்திக் கொண்டே இருப்பவருக்குச் சத்துப் போதாமை என்பதே கிடையாது. மாறாக செரிமானப்பளுவும் சேமிப்புச்சுமையுமென ஆகிவிடுகின்றது. அப்படியான ஒருவர் நீடித்த உண்ணாநிலை மேற்கொள்ளும் போது தன்னெரிமம் வாய்க்கின்றது.

உடற்பயிற்சியோ அல்லது உடலுழைப்போ கொண்டு உணவுக்கட்டுப்பாடும் தரித்திருக்கும் ஒருவர், உண்ணுவதில் சற்றுக் காலம் தாழ்த்தும் போதேவும் அவருக்குத் தன்னெரிமம் வாய்த்து விடுகின்றது. இப்படியானவர், நீண்ட ஆயுளுக்கும் பொலிவுக்குமென நீடித்த உண்ணாநிலைக்கு ஆட்படத் தேவையில்லை.

தேடலும் நாடலுமற்ற உடலுழைப்புக் கொண்ட ஒருவர், ஏதோவொரு காணொலியோ கட்டுரையையோ அடிப்படையாகக் கொண்டு நீடித்த உண்ணாநிலை மேற்கொண்டால் என்னவாகும்?  மறுசுழற்சிக்கான  ஒவ்வா, அரைகுறை, புற்று, உபரி அணுக்கள் இல்லாத போது, தன்னெரிமச் செயற்பாடென்பது திடமாய் இருக்கும் தசைநார்கள், இன்னபிற கட்டுமானத்தையும் எரிக்கத் துவங்கும். இது தேவைதானா? சொந்த செலவில் சூனியமல்லவா?? உடல்நலம் எனக்கருதிக் கொண்டு பித்துப்பிடித்து அலைபவர்கள், சொல்வதைத் தின்று கேட்பதைச் செய்து மனநோய்க்கு ஆட்பட்டு விடுகின்றனர். 

தேடலும் நாடலும் உடையவர் ஆழ்நிலைக் கற்றலுக்கு ஆட்படுவார். மற்றவர் மேல்நிலைப் பரப்புரைகளுக்குச் சோரம் போவார்!!



No comments: