3/12/2023

எண்ணங்கள்

“தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊர்க்காரனான தம்பி மாரி செல்வராஜ் அருகில் வந்தான். ‘என்ன ஸார்! கூட்டமே இல்ல?’ என்றான். தோழரின் ஆதங்கத்தை ஒத்திருந்தது மாரியின் குரல். மாரி செல்வராஜ் கேட்டது வாஸ்தவம்தான். அஞ்சலிக் கூட்டத்தில் இருப்பவர்களையும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களையும் சேர்த்து மொத்தமாக அந்த இடத்தில் நூறு பேர் இருந்திருப்பார்கள். ‘இதென்ன கேரளாவாடே! தமிள்நாடுல்லா!’ என்றேன்.” இதை எழுதியவர், சுகா என்னும் சுரேஷ் கண்ணன், திரைப்பட இணை இயக்குநரும் எழுத்தாளரும் நெல்லை கண்ணன் அவர்களின் மூத்த மகனும் ஆவார். 

தற்போது இதைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? நண்பர் அழைத்திருந்தார். ”கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கின்றாய். என்ன பயன்? எதிர்மனோநிலைக்காரன் எனும் அருவருப்பு(stigma)தானே ஏற்படும்?”. “இருக்கலாம். அதற்காகத் தன் தரப்புக் கருத்துகளை மாற்றிச் சொல்வதும், சொல்லாமலே இருப்பதும் ஏமாற்றிக் கொள்தல்(தன்னைத்தானே) அல்லவா?” என்றேன். மறுமுனையில் ஆழ்ந்த அமைதி. எண்ணிக்கையில் இல்லை வெற்றி. தரத்தில் இருக்கின்றது வெற்றி. It's quality that matters over quantity. நூறு பேராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்துலகில் கோலோச்சிய ஜெயகாந்தன் என்பது அல்லாமற்போய் விடுமாயென்ன?

இது அமெரிக்கா. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். முழுமையான தன்னுமைக்கு(லிபர்ட்டி) உரித்தானவர்கள். அழகானதும் அருமையானதுமான வாழ்வுக்கு ஆட்பட்டவர்கள். பொய், புரட்டு, திரிபு, முலாம்பூசப்பட்ட பேச்சுகள் போன்றவற்றுக்குச் சோரம் போகத் தேவையில்லை. சமூகத்தில் பொதுமைப்படுத்தல்களின்வழி உழைப்புச் சுரண்டல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ”ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்”, “ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்”, ”one bad apple ruining the entire bunch” என்பனவெல்லாம் அமெரிக்காவுக்கு, அமெரிக்கப் பண்பாட்டுக்கு எதிரான தேய்வழக்குகள். ஏனென்றால், இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையான தனித்துவ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடு. குழந்தைகள் எதிர்க்கேள்வி கேட்பார்கள். அல்லது, குடிவரவாக வந்திறங்கிய பெற்றோரின் ஆதிக்கத்துக்குப் பணிந்து அகநகைப்போடு கடந்து செல்பவர்களாக இருப்பர்.

அந்த ஒரு துளிதான், அந்த ஒரு பானைதான், அந்த ஒரு கூடைதான்! அதனை வைத்து எல்லாமுமே அப்படித்தானென்பதான போக்கில், நல்லது, தீயது எனப் பேசுவதை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிறைய மகளிர்நாள் கூட்டங்களை, தமிழ்ச்சூழலில் கேட்க முடிந்தது. விழிப்புணர்வுமிக்க நல்ல பல தகவல்கள். மகிழ்ச்சி. ஆனால் அவற்றினூடே, போகின்ற போக்கில், பொதுமைப்படுத்தல்களையும் பார்க்க முடிந்தது. ’அமாவாசையில் பிறந்தவன் திருடன்’ என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏதோவொரு திருடன் அமாவாசையில் பிறந்திருக்கலாம். அதற்காக? 


No comments: