5/30/2022

FeTNA:கொண்டாடப்பட வேண்டிய தருணம்

தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. தலைவர் பொறுப்புக்கும் சேர்த்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே இதனை முழுமையான தேர்தலெனக் கருதி, நாமனைவரும் கொண்டாடக்கூடிய தருணம். அமைப்பில் எதிரும் புதிருமான கொள்கைகள், திட்டமுன்மொழிவுகள், தொலைநோக்குப் பார்வைகள், சாதனைகள், நிர்வாகப்பிழைகள், செயற்பாடுகளை முன்வைத்து வாதவிவாதங்கள் இடம்பெற்று, அதன் அடிப்படையில் தேர்தல் நிகழுமேயானால் இன்னும் சிறப்பாகக் கொண்டாடலாம் நாம்.

தனிமனிதத் தாக்குதல்கள்! என் கட்டுரைகளையே முழுமையாக வாங்காமல் ஒரு நண்பர், ஆபாசம், இழிவு என்றெல்லாம் வசைபாடி, என் இருப்பிடம் முதற்கொண்டு என்னென்னவோ சொல்லித் திறந்தமடல் என்கின்றே பெயரில் எதையோ எழுதி இருந்தார். ஒரு வருத்தமுமில்லை. அன்பாகத்தான் கேட்டிருக்கின்றேன். ஏதாகிலும் அப்படி எழுதியிருந்தால், அந்த வரிகளைச் சுட்டுங்களென்று. இதுவரையிலும் பதில்கிடைக்கவில்லை. நான் 20 ஆண்டுகாலமாக எழுதி வருகின்றேன். ’அறம்சார்ந்த எளிய எழுத்தாளன்’ என்கின்ற இடத்தை இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அடைந்து விட மாட்டோமாயென்கின்ற மனநிலையில் முயன்று கொண்டிருப்பவன் நான். அப்படியானவற்றைச் சுட்டிக்காட்டினால் மகிழ்ந்து, அவற்றைக் களைய முற்படுவேன்.

தனிமனிதத் தாக்குதல்கள் என்றால் என்ன? எழுதுவதன் நோக்கம், ஏதொவொரு தனிமனிதரைக் குறிவைத்துச் சுட்டும் பொருட்டு மட்டுமே இருந்தால், சொற்கள் நாகரிகமாகவே இருந்தாலும் கூட, அது தனிமனிதத்தாக்குதல் என்றே பொருள். பேசுபொருள் செயலைக் குறித்ததாக இருக்கும் நிலையில், அது தனிமனிதத்தாக்குதல் ஆகா.

விளம்பரப்பிரியர்கள், விளம்பரப்போலிகள் நிறைந்து விட்டார்கள் என்கின்றோம். யாதொரு தனிமனிதன் பெயரும் சுட்டப்படவில்லை. பன்மையில் இருக்கின்றது. ஆகவே அது, எதனைக் குறிக்கின்றது? பணிகளுக்கு முக்கியத்துவம் கொடாமல், விளம்பரத்திற்கு, அதுவும் உண்மைக்குப் புறம்பான விளம்பரத்துக்கு மிகையான நேரம் செலவிடப்படும் பொறுப்பாளர்கள் மிகுந்துவிட்டனர் என்று பொருள். ஒரு செயலைச் சுட்டி, பேரவையில் ஏகாதிபத்தியம் மிகுந்து விட்டது என்கின்றோம். நோக்கம் செயலைச் சுட்டுவதுதானேயன்றி, தனிமனிதன் குறித்தானது அல்ல. தனிமனிதர்கள் பெயரை நாம் குறிப்பிடுவதேயில்லை.

பேரவை என்பது பேராறு. அது ஓடிக்கொண்டே இருக்கும். இடையில் மக்கள் வருவார்கள், போவார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிலபல செயல்கள் இடம் பெறும். காலத்தின் போக்கில், அப்போதைய தேவைகளுக்கொப்ப ஏதோவொரு கருத்தை நாம் வெளிப்படுத்துவோம். இந்தக் கருத்தில் உடன்பட்டிருப்போம். பிறிதொரு கருத்தில் உடன்படாதிருப்போம். மீண்டும் வேறொரு கருத்தில் கரம்கோக்கும் சூழல் வரக்கூடும். ’அன்று நீங்கள் ஒன்றாக இருந்தீர்கள்; இன்று பிரிந்திருக்கின்றீர்கள்!  அன்று எதிரும்புதிருமாய் இருந்தீர்கள், இன்று ஒன்றாய் இருக்கின்றீர்கள்!!’ என்பதெல்லாம் மனத்தின் மேல்நிலைப் பிரதிபலிப்புகள். ஆழ்ந்த சிந்தனை கொண்டோர் அப்படியான வாதங்களை முன்வைக்கத் துணியமாட்டார்கள்.

எழுத்தாளரை முதன்முதலில் பேரவைக்கு அறிமுகப்படுத்தியது நான்தான், 2010. அருவி இதழுக்குக் கட்டுரை தாருங்கள் எனக் கேட்டேன். அவரும் கொடுத்து உதவினார். பின்னர் விழாவுக்கு அழைக்க முடியுமாவென கேட்டுப்பார்த்தேன். அடியேனுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினாலே அப்படியே விட்டுவிட்டேன். காற்றடிக்கும் போது மாவுவிற்கப் போன கதையாக, ஒவ்வாத காலத்தில் அழைப்பு நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் நடந்தது ஊரறிந்த கதை. எதிர்த்தவர்கள் இரு அணிகளிலும் உண்டு. அதேபோல ஆதரித்தவர்களும் இரு அணிகளிலும் உண்டு. எனக்குப் பொய் பேச வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் வளர்ப்பதைக் காட்டிலும், சரியானதும் முறையானதுமான அமெரிக்கக் குடியாக இருப்பது முதன்மையெனக் கருதுபவன் நான். ஆகவே, ஒரு அணியை மட்டும் அந்த வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பெனக் காட்டுவதுதான் பெரும்பிழை, அநீதி.

‘பேரவை காப்போம்’ அணிக்கு வருவோம். அணி வேட்பாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தேன். இயன்றவரையிலும், ’அறம் செய விரும்பு’ என்பதற்கொப்பவே அறிவுரைகளைப் பரிமாறிக் கொண்டோம். திறந்த மடல்களையும், திறந்த வெளிப்படையான கூட்டங்களையும் நடத்தினோம். ஒளிவு மறைவு இல்லை. உடனக்குடனே தரவுகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தோம். எங்கள் நோக்கம், எங்கள் பேசுபொருள், பேரவையின் மேம்பாடு மட்டுமே. ஆகவே எந்தத் தரவையும் கொடுப்பதிலே தயக்கம் இல்லை. இணையதளத்தில் இடுவதிலே தயக்கம் இல்லை. இதுதான் அமைப்பின் வளர்ச்சியாக இருக்குமென நம்புகின்றோம். உடன்படுவீர்களேயானால், உங்கள் வாக்குகளை, ‘பேரவை காப்போம்’ அணிக்கு அள்ளித்தாருங்கள். அணியினர் பணியாற்றுவார்கள். தவறினால், அவர்களையும் கேள்விக்குள்ளாக்குவோம் காலாண்டுக் கூட்டங்களின் வாயிலாக! அதுதான் ஜனநாயகம்!!


No comments: