8/06/2020

தலைசிலிர்த்தல்

எந்த சமூகம், பொதுவெளியில் பேசவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதிக்காது அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொள்கின்றதோ, அந்த சமூகம் அதிகார வர்க்கத்தின் உச்சபட்ச வெறியில் இருக்கின்றதென்பதே பொருள். தன் மீது வீசப்படுகின்ற எத்தகைய கருத்துகளையும் தனக்கான விழுமுதல் ஆக்கிச் செம்மையுறுகின்றதோ அந்தச் சமூகம் தழைக்கும். அப்படியான அரசியல் சாசனத்தைத்தான் அமெரிக்க முன்னோர் வடித்தெடுத்து இருக்கின்றனர். கருத்துரிமை, பேச்சுரிமையின் மீது கட்டியெழுப்பப்பட்ட நாடு அமெரிக்கா.

பொதுவாழ்க்கையென வந்துவிட்டால், கேள்விக்கணைகளுக்கும் கருத்துப்பொழிவுகளுக்கும் இடையில் நீந்திப் போய்தான் கரை சேர்ந்தாக வேண்டும். 'எதிரி வருகிறான், புயல் வருகின்றது' எல்லாமும் உண்மையாகவே இருந்தாலும், முதலில் கவனம் செலுத்தப்பட வேண்டியது, தன் வசம் இருப்பவை, "ஓடக்கூடிய குதிரையா? நொண்டிக்குதிரையா?? கரை சேர்க்கக்கூடிய தோணியா? ஓட்டைத்தோணியா??" போன்றவைதாம். 

குதிரை நொண்டி, ஓட்டைத்தோணி எனச் சுட்டிக்காட்டுகின்ற மாத்திரத்திலேயே சினம் கொண்டெழுந்தால், வெள்ளாமை வீடு வந்து சேரவே சேராது. சமூகம் வெகுவாகப் பின்தங்கியே போகும்.

குடியரசுத்தலைவர், செனட்டர், காங்கிரசுமேன் போன்றோரையே எள்ளிநகையாடி, வசைபாடி கருத்தாடுகின்றனரே ஏன், எப்படி??

தனிமனிதனைக் காட்டிலும், பொதுவாழ்க்கை என வந்து விட்டால், அவர்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டு எல்லாவிதமான கருத்துகளாலும் சூழப்பட்டுப் போய்விடும் அளவுக்கு நேர்மையாகவும், ஊழல் அற்றவர்களாகவும், பண்புடையவர்களாகவும் இருக்க வேண்டுமென்பதே அதன் அடிப்படை.

எப்படிக் கருத்துரிமை நிலைநாட்டப்படுகின்றது?

முதலாவதாகக் கருத்து என்பது வேறு, கூற்று என்பது வேறு. 'அவன் திருடியிருக்கலாமென நான் நினைக்கின்றேன்' என்பது கருத்து. 'அவன் திருடிவிட்டான்', கூற்று. முதலாவது ஒருவனின் பிறப்புரிமை. இரண்டாவது, சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்பட்டது. ஆனாலும், அதிலும் ஒரு ஆணியைச் செருகி வைத்தனர் பெரியோர். எப்படி? 'அவன் திருடிவிட்டான்' எனச் சொன்ன மாத்திரத்திலேயே சொன்னவன் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது. அந்த 'அவன்' என்பவர் எவரோ, அவர் தான் திருடியிருக்கவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி நிறுவியாக வேண்டும். இங்கேதான் இன்னும் சுவையைக் கூட்டினர் பெரியோர். எப்படி?? தன் கூற்றினை மெய்ப்படுத்த வெளிக்கிடப் போய், சொன்ன கூற்று உண்மை எனத் தெரிந்து விட்டால், பொதுவாழ்க்கைக்கு உரியவரின் கதி அதோகதியாகிப் போய்விடும். இப்படியெல்லாம்தான், கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் தன்னாட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா.

The First Amendment protects false statements of fact (although it does allow for people who make false statements of fact that damage others’ reputations to be sued for defamation). Thanks to: https://www.freedomforuminstitute.org/first-amendment-center/primers/free-expression-on-social-media/

ஃபேக்நிவீசு எவ்வளவு கொடியதோ, அதனினும் கொடியது பேச்சுகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பது. அதனால்தான், பொய்ச்செய்தி எனும் கொடியவன் இருந்தாலும், பேச்சுரிமை எனும் மானுடனைக் கொண்டு வென்றெடுப்போம் மாந்தம் என்கின்றது அமெரிக்கா.

நோக்கம் நல்ல நோக்கமாக இருக்க வேண்டும். அது இருக்கும்வரையிலும் பேசிக் கொண்டேயிருப்போம்!! உழைப்பைச் சுரண்டும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் பேசுவதைக் காட்டிலும் தலையாய பொதுப்பணி வேறெதுவுமில்லை.

"If the freedom of speech is taken away then dumb and silent we may be led, like sheep to the slaughter." -George Washington. தலைசிலிர்த்தல் ஆட்டின் உரிமை.

பழமைபேசி.

No comments: