7/20/2020

தேர்தல்


அந்த மலையை ஏறினால், மறுபடியும் சிறிதும் பெரிதுமாக இரு மலைத்தொடர்கள் வரும். அவற்றைக் கடந்த பின் சமநிலத்தில் நான்குகாத தொலைவு சென்றால் போதும், அத்தைமகள் தனலட்சுமியைப் பார்த்து விடலாம். நேரடியாகச் சொல்லிவிட்டால் நம் கவுரதை என்ன ஆவது?

"அம்மா, மாமன் வந்து எவ்ளோ நாளாச்சு? குளுரு காலம்னா எளப்பு வந்துரும்னு சொல்லுவியே? அதுல கிதுல??", பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, உருமாலைக்கட்டுத் துணியைத் தலையிலிருந்து பிடுங்கி தாழ்வாய்க் கட்டைக்கு முட்டுக் கொடுத்து வாயைப் பொத்திக் கொண்டான் தங்கவேலு.

ஒன்னுகாளியாத்தாவுக்கு பொசுக்கெனக் கப்பிக்கொண்டது மனம்.

காளியம்மாவின் அம்மாவுக்கு வெகுநாட்கள் குழந்தை பிறக்கவேயில்லை. சூரைப்பழக் காளியம்மன் கோயிலுக்கு பூவோடு எடுப்பதாய்ச் சபதம் மேற்கொண்டதன் விளைவாய் அடுத்தடுத்து ஐந்து பெண்குழந்தைகளே பிறந்தன. ஐந்து குழந்தைகளுக்கும் காளியாம்மாள் என்றே பெயர் சூட்டினாள் தாய்க்காரி. அப்படியாக அவர்களின் பெயர்களெல்லாம், ஒன்னுகாளியாத்தா, ரெண்டுகாளியாத்தா, மூனுகாளியாத்தா, நாலுகாளியாத்தா, அஞ்சுகாளியாத்தா என்பதாக நிலைத்து விட்டது பொன்னாலம்மன்சோலைக் காட்டுக்குள்ளே.

ஆண்மகவு இல்லையே என்கின்ற ஏக்கத்தில் ஆறாவதாய் வந்து பிறந்தவன்தான் ஆறுக்குட்டி. ஆறுக்குட்டியை ஈன்றவள், ஈன்றெடுத்த சகடநதியோரக் கரையோரத்திலேயே குருதிப்பெருக்கின் நிமித்தம் போய்ச் சேர்ந்துவிட்டாள். இப்படித்தான் ஆறுக்குட்டிக்கும் தங்கவேலுவின் அம்மாவே,  அக்காள்க்காரியே அம்மாக்காரியாகவும் ஆகிப்போனது வரலாறு.

பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவன் ஆறுக்குட்டி. 'கண்ணு, வேசகாலம் பொறந்துருச்சு. ஆடுகளை நான் ஓட்டிக்கிறன். போய், ஒருவிசுக்காப் பாத்துப் போட்டு வாடே என் தங்கம்!", இறைஞ்சிக் கொண்டாள் ஒன்னுகாளியாத்தா.

ஆறாம்மேட்டுப் பேய் என்றால் யாருக்குமே 'கருக்' என்றுதான் இருக்கும். பேயின் வேலைதான் இது, காத்திரமாக நம்பினான் தங்கவேலு. விசயம் வேறொன்றுமில்லை. கட்டுச்சோத்து மூட்டைக்குப் பொத்தல் விழுந்து புளிச்சோற்றுப் பருக்கைகள் சில பல, பொலபொலவென உதிரத் தொடங்கின. தன் சட்டையைக் கழற்றி சட்டையின் முதுகுப்பக்கப் பரப்புக்கு மேலே கட்டுச்சோற்றை உட்கிடத்தி, 'லபக்'கெனக் காவி எடுத்துக் கொண்டு போனான்.

சேனக்காரச்சிங்காரிமலை உச்சிக்குக் கொஞ்ச தூரத்தில் நடந்து கொண்டிருந்த போதுதான் கவனித்தான். சட்டையிலும் பொத்தல். "இந்தப் பேயோட இரவுசு பெரிய்ய இரவுசாட்ட இருக்கூ?", வேட்டியைக் கிடத்தி, அதனுள் வைத்துச் சுருட்டிக் கட்டி, கைக்கோலை முடிச்சுக்குள் விட்டுருவி எடுத்துக் கொண்டு போனான். இன்னும் இரு மலைகள் கடந்தாக வேண்டும். அம்மா கொடுத்த கட்டுச்சோற்றுப் பண்டங்களை மாமனுக்குக் கொடுக்கின்றோமோ இல்லையோ, தனலட்சுமிக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்பதில் குறியாய் இருந்தான் தங்கவேலு.

இப்படியாக அடுத்தடுத்து எல்லா உடுப்புகளையும் கட்டுச்சோத்துப் பொத்தலுக்கு நேர்ந்து விட்டிருந்த நிலை; ஆமாம்; கட்டிய கோவணத்தையும் உருவிப் பத்துப் போட்ட பிறகான சூழ்நிலையில்தான் யோசித்தான். 'தக்காளி, இந்தக் கட்டுச் சோத்துக்குள்ளயே பேய் பூந்துருச்சோ? உள்ள இருந்துட்டேவும் நம்மிய இமுசி பண்ணுதோ??'.

பரபரபரவென ஒவ்வொன்றாகப் பிரிக்கலானான். உண்டு கொழுத்த அது, சாவகாசமாய்க் கண்களை உருட்டி உருட்டி அண்ணாந்து ஒசரப் பார்த்தது. அம்மணமாய், வெறிபிடித்து விறுவிறுவென ஓடினான் ஓடினான் மலையுச்சியை நோக்கி ஓடினான் தங்கவேலு. ஏனென்றால் அந்த எலி ஒசரப்பார்த்தது இவன் முகத்தை அல்ல; குஞ்சாமணியை!!

‍-பழமைபேசி.

No comments: