6/21/2019

எங்கோ ஒரு பெண்


எங்கோ ஒரு பெண்,
குடத்தை எடுத்து வருகையில்
கால் இடறிக் கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
குழாயடியில் வேசிப்பட்டம் சுமந்தபடி
குடத்தைத் தூக்கித் தலையில்
வைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
பனிக்குடம் உடைந்து நீரொழுக நீரொழுக
குடம் தண்ணீரைச் சுமந்தபடியே
வந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்
முறைவிட்டுக் கொடுக்காததில்
படுத்தெழுந்ததாய்ப் பட்டங்கள் சூட்டப்பட்டு
மகனின் முகம் பார்க்கவியலாமல்
குமைந்து குறுகிக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
மணிக்கணக்கில் குடம் தூக்கியபடி இருக்க
ஊட்டமின்றிச் சுருண்டு
கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
மூச்சடக்கி மூச்சடக்கிச் சுமந்ததில்
நெஞ்சுதூர்ந்து செத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீரெனக் கடன் ஒத்திப்போட்டத்தில்
நஞ்சேறிப் பிணியேறிச் செத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
உறக்கமின்றி எழுந்தெழுந்து எதிர்நோக்கி
குழாயும் கண்ணுமாய்ச் செத்துத் செத்து
பிழைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
சிந்திய நீரில் கால்வழுக்கி
குடத்தோடு விழுந்ததில்
விலா எலும்பை முறித்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ப் பணியால்
கல்வி சறுக்கிக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ச் சிந்தையினால்
வேலையிடத்தில் கவனமிழந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஊட்டமும் சத்துமின்றி
தண்ணீர் சுமந்து
தண்ணீர் சுமந்து கொண்டிருந்ததில்
பார்வையைத் துறந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர் வருமெனச் சொல்லி
உறவுக்காரர் கடைசிமுகம்
பார்க்காமற் தவித்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஒரு வண்டித் தண்ணீரைக்காட்டி
அத்துமீறும் ஆடவனிடத்தில்
தன் மகளையே இழந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஊர்வம்பு இழுத்துட்டு வராம இருக்கமாட்டியாவென
யாருக்கு வேண்டுமெனச் சுமந்தாளோ அவனிடமே
அறைபட்டு அழுத கொண்டிருக்கக்கூடும்!

அந்தப் பெண்
உன் வீட்டவளாகவும் இருக்கலாம்!!

-பழமைபேசி, 06.19.2019.

[For women, the water crisis is personal. They are responsible for finding a resource their families need to survive - for drinking, cooking, sanitation and hygiene. வீணாக்கப்படுகின்ற ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும், அம்மா, மனைவி, உடன்பிறந்தவள், மகள் என யாரோ ஒரு பெண்ணின் சுகதுக்கங்களின் மீதான கொலைவெறித் தாக்குதல் என்றே கொள்க. நீரைச் சிக்கனமாய்ப் புழங்கு!]

No comments: