11/26/2011

செல்லி

ஊர் முழுதும் காலை நேரத்துப் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. ஊர்வாசலில் இருந்த பாலக்காட்டு ஜோசப்பின் டீக்கடையில் வழக்கம் போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. நரிக்கல் காட்டுக்குக்கு கல்லெடுக்கச் செல்பவர்கள் இட்லிகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். நாளிதழின் இருபக்க விளிம்புகளையும் விரித்துப்பிடித்து, படித்துக் கொண்டு இருந்தார் ஒருவர். அவருக்குப் பின்னால் சிலர் நின்று படிக்க, முன்பக்கங்களை எதிர்ப்பக்கத்தில் இருந்து சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்கூட்டத்தில் இருந்து தினத்தந்தி படிப்பதென்பது தனக்கு இயலாத காரியமென்பதை உணர்ந்த சிறுவன் வேலு, தன் வீடு நோக்கிப் புறப்பட்டான்.

ஊர்வாசலில் இருந்து கிளம்பி மேல்வளவுக்குள் நுழைந்தான். அவிநாசியப்பன் ஊட்டு அக்காவும், ஆட்டுக்கார மாரியப்பன் பொண்டாட்டி சுமதியும் சொல்லம்புகளை ஆள்மாற்றி ஆள் சரமாரியாக எறிந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள்ளான சொல்லாடலை ஆங்காங்கே நின்று இரசித்துக் கொண்டிருந்தனர் சிலர்.

“கட்டீத்தின்னி... என்ன மயித்துக்குடீ அச்சக்காரம் வாங்குன நீயி. எட்டு ரூவாக்கூலின்னு சொல்லித்தான, கைக்களை எடுக்க வாறன்னு சொல்லி மூணு நாளைக்குமா சேந்து அச்சக்காரம் இரவது ரூவா குடுத்தேன். இப்ப வர்லீங்றயேடி? அடுத்தவிங்ககிட்ட முந்தானை விரிக்குற நீசத்தனம், அச்சக்காரம் வாங்குறதுக்கு முன்னாடி இருந்திருக்கோணும்!”

“இதபாருங்க. ஊரெல்லாம் பத்து ரூபாக் கூலிக்குப் போறாங்க. அந்த வெவரத்தை மூடிமறைச்சு என்ற வவுத்துல அடிக்கப் பாத்தது நீங்க. சோளக்காட்டுல தொண்டூழியம் பார்த்தது ஆருன்னு ஊருக்கே தெரியும், உங்க அச்சக்காரத்தை அவிங்கப்பன் வந்ததுமே குடுக்கச் சொல்லீர்றன்”

“அடித்தேவிடியா முண்டை”, அவிநாசியண்ணன் ஊட்டு அக்காவின் வசவு சரியாகக் கூட காதில் விழவில்லை. ‘பட்’டென்று யாரோ பின்னந்தலையில் அடித்தார்கள். என்னதான் எட்டு வயதுச் சிறுவன் என்றாலும், பின்னந்தலையில் அடித்தால் யாருக்கும் சினம் சிலிர்த்தெழத்தானே செய்யும். கோபத்தோடு திரும்பிப் பார்த்தவன் அமைதியாகிப் போனான்.

“இங்கென்றா பண்ற? இந்த ஊத்தை நாயத்தை எல்லாம் உங்கம்மா இருந்து கேட்ட்டு வரச் சொன்னாளா? ஊட்டுல போயி பொட்டாட்ட இரு போ”, அதட்டி அனுப்பினார் பெரியப்பிச்சி சின்னைய கவுண்டர்.

அச்சூழலில் இருந்து விடுபட்ட வேலுவை, அவனது வீட்டில் இருக்கும் செல்லியின் நினைவு ஆட்கொண்டது. தன் மாமா ஆறுக்குட்டி அவரது துள்ளுந்தை முடுக்கி ஓடவிடும் காட்சியைத் தன் மனத்துள் இருத்தினான் வேலு.

தன் அரைக்காற்சட்டைப் பையினுள் இருந்த சாவி கொண்டு தன் துள்ளுந்திற்குச் சமிஞ்ஞை அளித்து, வலது காலால் கற்பனைத் துள்ளுந்தின் இயக்கி மேல் ஓர் உதைவிட்டான். ‘ப்புர், ப்புர்’ என ஒலிக்கத் துவங்கியது வாய். கைகள் இரண்டும் காற்றோடு கரைந்திருக்கும் கைப்பிடிகளை இறுகத் திருப்பி முடுக்கியது. அடுத்த விநாடிக்கெல்லாம், ‘ப்புர், ப்புர்’ ஒலியானது ‘ட்டுர்ர்ர்’ரென மாறிப் பெருவேகம் கொண்டு தன் துள்ளுந்தில் வீடு சென்றான் வேலு.

“கண்ணூ வேலூ. எங்கடா இராசா சொல்லாமக் கொள்ளாமப் போன? நம்ம செல்லியப் போய்ப் பாரு, போ”, சொல்லிக் கொண்டே வாசலில் இருந்து அடுக்களைக்குள் நுழைந்தாள் அம்மா.

“அய்...”, துள்ளிக்குதித்து புறக்கொல்லைக்குப் போனான். வலது மூலையில் தரையெல்லாம் வைக்கோலிட்டு, மேற்புறத்தில் பருத்தியைப் பொதியாக்கப் பாவிக்கும் கிழிந்த மலகு ஒன்று மடித்து விரிக்கப்பட்டிருந்தது. அதன்மேல் செல்லி படுத்திருந்தாள். “அட செல்லீ” வாஞ்சையோடு குரல் கொடுத்துக் கொண்டே சென்றான் வேலு. பாலூட்டும் தினவிலிருந்த செல்லி, ஒருக்களித்த தலையின் மேற்புறக்கண் இமையை மாத்திரம் திறந்து பார்த்தாள். வேலுவைக் கண்டதும் தலையை உயர்த்தி பெருமிதத்தோடு மென்குரலில் குழைந்தாள்.

செல்லியின் கண்களில் இருந்து, தன் பார்வையை மெல்ல அவளது அடிவயிற்றுக்கு நகர்த்திக் கொண்டு போனான் வேலு. முட்டிமுட்டிப் பால் குடித்துக் கொண்டிருந்தன அத்தனையும். கொழுகொழுவெனப் பார்ப்பதற்குப் பரவசமூட்டின அவை. ஒன்றன் மீது ஒன்று ஏறுவதும், முலைக்காம்பினைக் கவ்விப் பிடிப்பதில் போட்டி போட்டுக் கொள்வதும், பிஞ்சுக்கால்களால் மற்றதைத் தள்ள முற்படுவதுமாய் மூசிக்கிடந்தன அவை. முலையொலிகள் ஒரு அற்புதமான இசையைத் தருவித்துக் கொண்டிருந்தது. குட்டிகளின் சிலும்பல்கள் மென்மையிடம் தோற்பதும் ஒரு அழகுதான். இவை எல்லாமே சிறுவன் வேலுவுக்கு கிடைத்திராத அனுபவம். அதில் மூழ்கி ஆழ்ந்து மெய்மறந்து நின்றவன், அருகில் இருந்த ஆட்டாங்கல்லின் மீது வாகாய் அமர்ந்து கொண்டான்.

எத்தனை குட்டிகள் என எண்ண முற்பட்டவன், பலமுறை முயன்றும் தோற்றுப் போனான். ஒன்றனடியில் ஒன்றாகப் புதையுண்டு பாலுண்ணும் அழகில் தன்னைப் பறிகொடுத்து, எண்ணுதலில் தோற்றான் வேலு.

”எத்தனாவது நாளுக்கா இது?”, உரையாடிக் கொண்டே அம்மாவும் மாகாளியாத்தா கோயில் சம்பங்கி அக்காவும் அவனிருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.

“இன்னையோட மூணு நாளாச்சு சம்பங்கி”

“அதான், கண்ணுத்தொறக்க ஆரமிச்சிருச்சுக. எத்தனை குட்டிகக்கா மொத்தம்?”

“கடுவங்குட்டி ஆறும் பொட்டைக்குட்டி மூணும், மொத்தம் ஒன்பது குட்டீக ஈனி இருக்குறா செல்லி”

"செரிக்கா, அப்ப நான் இப்பவே ஒன்னை எடுத்துட்டுப் போறேன்”

“செரி சம்பங்கி. அப்படியே போற வழியில ’சின்னக்கண்ணா’வுக்கும் ஒன்னைக் குடுத்துட்டுப் போயிரு. முன்னாடியே ஒரு குட்டிக்குச் சொல்லி இருந்துச்சு”

சாளையில் இருந்த சிறு பொட்டிக்கூடையை எடுத்த சம்பங்கி அக்கா நேராக செல்லியிடம் போனாள். “செல்லி, எந்திரிச்சு அந்தப் பொறம் போ” என சம்பங்கி சொல்ல, அடுக்களைக்குச் சென்று வந்த அம்மா தூக்குப் போசியில் இருந்த சாமைக்கூளை அங்கிருந்த செல்லியின் வட்டலில் ஊற்றினாள். அதனருகே சென்ற செல்லி, “ப்ளக், ப்ளக்” என்று தன் நாவை நீட்டி நீட்டி அள்ளிப் பருகினாள் தன் குட்டிகள் புதுவீட்டு எசமானர்கள் ஆகிக்கொண்டிருப்பது அறியாமல்.

முலைப்பாலுண்டு திளைத்திருந்த குட்டிகளில் இரண்டை எடுத்து பொட்டிக் கூடைக்குள் வைத்தாள் செம்பங்கி அக்கா. கண்ணிமைப் புருவங்கள் கறுத்திருந்தன. வாய் அவ்வளவு சிறியதாகவும் வடிவாகவும் இருந்தன. வால்மயிர்கள் செவலை நிறத்தில் பட்டுப் போல படர்ந்திருந்தது. நாட்டு நாய்க்குட்டிகளின் அழகே தனிதான். வீட்டிற்குச் சென்றதும், கழுத்தில் மணியொன்றைக் கட்டிவிட வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள் செம்பங்கி அக்கா. கூடையில் படுத்திருந்த குட்டியொன்று எழுந்து நின்று அச்சிறுகுறியின் நுண்துளையினூடாகச் சிறுநீரைப் பீய்ச்சியது.

“கூடைக்குள்ளயே ஒன்னுக்கு ஊத்தீருச்சு. இஃகிஃகி.. கூடைக்குள்ளயே ஒன்னுக்கு ஊத்திருச்சு”, சிரிப்பில் அதிர்ந்து வெகுளியாய்க் கத்தினான் வேலு.

“சம்பங்கியக்காவுக்கு யோகம்டா வேலு. இந்தவாட்டி ஏக்கராவுக்கு ஏழுபொதி பருத்தியாச்சும் பாக்காம உடமாட்டா பாரு”, அம்மாவும் நெகிழ்ந்து மகிழ்ந்து கொண்டாள்.

காலை ஏழு மணிக்குத் துவங்கிய நாய்க்கொடை அடுத்தடுத்து வந்த உற்றார் உறவினரின் வருகையால் எட்டரை மணிக்கெல்லாம் ஓய்ந்தது. வேலுவுக்கு மனத்துள் ஏமாற்றமும் இறுக்கமும் கப்பி இருந்தது. புறக்கொல்லையில் செல்லியுடன் அவனும் இருந்தான், செல்லியும் அதன் பொட்டைக் குட்டிகளுமாக! இருந்த கடுவன்கள் எல்லாம் நாலாபுறமும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

தோட்டத்திற்குச் சென்றிருந்த அப்பா வீடு வந்து சேர்ந்திருந்தார். வந்தவர், அம்மாவை விரட்டலானார். “என்ன பண்ற நீயி? மணி எட்டரை ஆகுதல்லோ?? எந்த நேரத்துலயும் சொசைட்டி வண்டி வந்துரும். வேணுங்ற பாலெடுத்துட்டு பால்போசியக் குடு; போயி ஊத்தீட்டு வந்துடுறேன்!”

“இதென்னுங்... வேணுங்றதை எடுத்துட்டு, மிச்சத்தை அளந்து வெச்சிருக்கேன். இந்தப் பொட்டைக்குட்டிக மூணத்தையும் வெச்சிட்டு என்ன பண்றது? அந்த வேன்க்காரங்ககிட்டக் கொடுத்து, மொகானூர் வாய்க்கால்ல வீசீறச் சொல்லுங்க”

”அம்மா நம்முளுக்கு?” வேலன் சொல்வதறியாது இக்கட்டில் தவித்தான். “இருக்குற பொட்டை நாயி ஒன்னு பத்தாதாக்கும்?” எரிந்து விழுந்தாள் அம்மா.

அம்மாவின் பின்னால் தகித்துப் போய் கையறு நிலையில் வாலை ஆட்டிக் கொண்டு நிற்கிறாள் செல்லி. அப்பா, பால்ப்போசியை ஒரு கையிலும் கூடையை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு வீதியில் இறங்கிவிட்டார். அவரைப் பின்தொடர்வதற்காய் வீதியில் இறங்கினாள் செல்லியும்.

“வேலா, நீ எங்கடா போற?”

“போங்மா. எங்கோடப் பேசாதீங்க”, வேலனும் செல்லியோடு போனான். பால்வளக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆளுயரத் திண்ணையில் கூடையை வைத்துவிட்டு பால் ஊற்றுவதற்காக அப்பா உள்ளே சென்றார். செல்லி உயர உயரக் குதிக்க முற்பட்டது. சிதைந்து போன தக்காளிக் கூடை ஒன்றுக்குள் இருந்த அந்த பொட்டைக்குட்டிகள் ‘க்ம்ம்.. க்ம்ம்” என மெல்லொலி எழுப்பிக் கொண்டிருந்தன.

சுல்தான்பேட்டைப் பால்வள வங்கியின் ஊர்தியொன்று, எமன் வருவது போலப் பூதாகரமாய் வந்து நின்றது.

“லேட்டாய்ட்டு இருக்கு. சீக்கிரம் கேன் ரெண்டையும் உருட்டுங்க, உருட்டுங்க”, விரட்டினார் ஊர்திக்காரர்.

“தம்பி, இந்தப் பொட்டைக் குட்டிகளை மொகானூர் வாய்க்கால்ல வீசீறுங்க தம்பி”.

“செரி கொண்டாங்க”, கூடை கைமாறியது. செல்லி கத்தித் தன் இயலாமையை வெளிப்படுத்தினாள். வேகமாய்ச் சென்ற பால்வண்டிக்குப் பின்னர் சற்று தூரம் சென்று திரும்பியது. வீடே, இழவு வீடாய்க் காட்சியளித்தது வேலனுக்கு.

சரியாகப் பசிக்கவில்லை. ஒழுங்காகச் சாப்பிடவுமில்லை. குளிக்கவில்லை. எதுவுமே செய்யப் பிடிக்கவில்லை வேலனுக்கு. ஆழ்ந்த யோசனைகள் பலவாறு வந்து போயின. “வாய்க்கால்ல வீசி இருப்பாங்களோ? வாய்க்கால்ல தண்ணி போகாம இருந்துச்சுன்னா, பொழைச்சிக்கும் இல்ல?? வேற ஆறாச்சும், அதுகளை எடுத்து அவிங்க வீட்ல வெச்சுகுவாங்களோ, நம்மூட்ல செல்லி இருக்குறதைப் போல??”

யோசனையில் ஆழ்ந்தவன், திண்ணையில் இருந்த கயிற்றுக் கட்டிலின்மீதே உறங்கிப் போனான். திடுமென எழுந்தவன், கூட்டுறவுச்சங்கம் நோக்கி ஓடினான்.

“மணீன்னா, காலையில வந்த கிளீனரேதான் சாய்ங்கால வண்டீலயுமு வருவாங்களாண்ணா?”. கூட்டுறவுச் சங்கத்தில் பாலடிக்கும் பணியாளர் மணியை வினவினான். “தெரியலை வேலு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதர இருக்கும். ஏன், உங்கம்மா மருந்து எதனா வாங்கியாறச் சொல்லி இருக்காங்களா?”

“இல்லீங்ணா”, பணியாளர் மணியின் மறுமொழியில் நிறைவற்று பதிலளித்தான் வேலு.

மாலை மணி ஏழு எப்போது ஆகுமெனத் தவம் இருந்தான். ஊர்வாசலுக்குச் செல்வதும், கூட்டுறவுச் சங்கத்தின் வாசலுக்குச் செல்வதும், தனித்து இருக்கும் செல்லியைப் பார்ப்பதுவுமாகத் தவித்துக்கிடந்தான். தனக்கிருக்கும் அன்றாட வேலைப்பளுவில், வேலுவின் துயரத்தைக் கவனிக்க அவனது அம்மாவுக்கு வாய்ப்பில்லை.

மாலை ஆறு மணிக்கெல்லாம், கூட்டுறவுச்சங்கத்தின் முன்பிருக்கும் அண்ணாச்சி கடைத் திண்ணையில் வந்தமர்ந்து கொண்டான். யாருடனும் விளையாடச் செல்லவில்லை. ஒருவழியாக, பால்வண்டி வரும் ஒலி கேட்கத் துவங்கியது. “கடவுளே, அதே அண்ணன் வரோணும்; அதே அண்ணன் வரோணும்”, இறைஞ்சலின் அதிர்வு கூடிக்கொண்டே போனது.

”என்றா தம்பி?”, அதே பணியாளர்தான்.

கண்கள் குளமாகிய நிலையில், பணிந்த குரல், “அண்ணா, அந்த பொட்டை நாய்க்குட்டிக மூணையும் வீசிட்டீங்ளாணா?”

“இல்றா தம்பி. சுல்தான்பேட்டை மேட்டுக்கடையில குடுத்து யாராவது கேட்டாக் குடுக்கச் சொல்லிட்டோம்”.

வீட்டை நோக்கி தலைதெறிக்க ஓடினான். எதிரில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆட்டுமந்தைகள் வந்து கொண்டிருந்தன. களையெடுக்கச் சென்ற காரிகையர் வந்து கொண்டிருந்தனர். ஊர்க்கிணற்றில் குடிநீர் எடுக்கச் சென்றவர்கள், சும்மாட்டுத்தலையில் ஒரு குடமும் வளையிடுப்பில் ஒரு குடமுமாக வந்து கொண்டிருந்தனர். இவன் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இறக்கை கட்டிப் பறந்து சென்றவன், கீழிருந்த கல் ஒன்றின் மேல் தன் காலடி மோதக் குப்புற விழுந்தான்.

“ஏன் வேலு, மாலநேரம் பார்த்துப் போகப்படாதாடா?? இந்தா, மண்ணுக் கொழிச்சுத் தாறேன். காயத்து மேல போடு!”, தன் வலக்கையால் மண்ணைக் கொழித்து அவன் சிராய்ப்புக் காயத்தின் மேல் பூசிவிட்டாள் எதிர்ப்பட்ட தெய்வாத்தக்கா. இரத்தம் வழிவது நின்றது.

மீண்டும் தன்வீடு நோக்கிப் பாய்ந்தான் வேலு. வாசலில் அம்மா கோழிகளை அடைத்துக் கொண்டிருந்தாள். இவன் பாய்ந்த பாய்ச்சலில், கோழிக்குஞ்சுகள் நாலாபுறமும் சிதறின. “நாசமத்துப் போனவன் எப்பிடிக் கலைச்சு உடுறாம்பாரு”, அம்மா அரட்டினாள்.

“செல்லீ.. செல்லீ.. உன்ற குட்டிக சாகுலடா. சுல்தான் பேட்டைக் கடையில வெச்சி, வந்து போறவிக எடுத்துட்டுப் போயிட்டாங்களாமா...”

புறக்கொல்லையில் நின்று, செல்லியைத் தேடின வேலனின் கண்கள். பிறகு பார்வையைக் குறுக்கிக் கீழே பார்த்தான்; வலது முழங்காலில் அப்பிய மண்ணையும் மீறி வடிந்து கொண்டிருந்த இரத்தத்தைத் தன் நாவால் நக்கித் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தது செல்லி!!

8 comments:

naanjil said...

// ”என்றா தம்பி?”, அதே பணியாளர்தான்.

கண்கள் குளமாகிய நிலையில், பணிந்த குரல், “அண்ணா, அந்த பொட்டை நாய்க்குட்டிக மூணையும் வீசிட்டீங்ளாணா?”

“இல்றா தம்பி. சுல்தான்பேட்டை மேட்டுக்கடையில குடுத்து ஆராச்சிங் கேட்டாக் குடுக்கச் சொல்லீட்டோம்”.//

மிக்க நன்றி தம்பி மணி வாசகம். அருமையான படைப்பு. வேலுவின் கண்கள் மட்டும் குளமாகவில்லை. படித்தவர்களின் கண்களும் குளமானது, மனித நேயத்தின் ஒரு வெளிப்பாடு இந்தப் புதினம். பற்றுப் பாசம் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை; மிருகங்களுக்கும் பொருந்தும். ஆண் ஆதிக்கத்தை நமது சமுதாயத்தில் உண்டாக்கியவர்கள் அதை அப்படியே....

அன்புடன் அண்ணன்
நாஞ்சில் இ. பீற்றர்.

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

அருமையான சிறுகதை நண்பா. வாழ்த்துக்கள்.

சாமக்கோடங்கி said...

கண்கள் குளமாகிப் படித்தேன்.. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாய் பூனைக்குட்டிகளின் மேல் அளவு கடந்த பாசம் உண்டு..

தன்னைப் போலவே மற்ற உயிர்களையும் நேசிக்கும் அனைவரின் கண்களிலும், உங்களின் இந்தச் சிறுகதை கண்ணீரை வரவழைக்கும்..

கிராமத்து வாசனையை உங்கள் கதையில் நுகரும் பாக்கியம் பெற்றேன்.. பல வார்த்தைகள் இன்றும் எங்கள் பகுதியில் வழக்கில் உள்ளன... சிலவற்றைப் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. இருந்தாலும் புரிந்து கொண்டேன்.. நன்றி அண்ணே..

ஓலை said...

Arumai pazhamai.

இராஜராஜேஸ்வரி said...

“அட செல்லீ” வாஞ்சையோடு குரல் கொடுத்துக் கொண்டே சென்றான் வேலு. பாலூட்டும் தினவிலிருந்த செல்லி, ஒருக்களித்த தலையின் மேற்புறக்கண் இமையை மாத்திரம் திறந்து பார்த்தாள். வேலுவைக் கண்டதும் தலையை உயர்த்தி பெருமிதத்தோடு மென்குரலில் குழைந்தாள்./

மண் மணம் மாறாமல் எழிலாய் கதை சொன்ன பாங்கு அருமை.. பாராட்டுக்கள்..

vasu balaji said...

ரொம்ப யதார்த்தமா அருமையா வந்திருக்கு. அடிக்கடி இப்படி எழுதுங்க பழமை. இந்த வாஞ்சையெல்லாம் இப்படி எழுத்துலதான் கிடைக்கும்.:(

ஆரூரன் விசுவநாதன் said...

மனம் முழுதும் ”செல்லியே ”நிறைந்து இருக்கிறாள். வாழ்த்துக்கள் மாப்பு

கொங்கு நாடோடி said...

மனம் இளகியது முடிவு படித்து...