6/13/2026

ஓடைகளினூடே அடையாளத்தின் கதை




வட கரொலைனாவின் சார்லட் பெருநகரம், அதைச் சுற்றியுள்ள மெக்லென்பர்க் ஊரகம் முழுவதும் ஒரு பெரிய நீரோடை வலைப்பின்னல் போல அமைந்துள்ளது. இதனாலேயே இது "நீரோடைகளின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மொத்தம் 81 தனிப்பெயர்கள் கொண்ட நீரோடைகள் உள்ளன. அவற்றின் கிளை நதிகளையும் சேர்த்தால், அதிகாரப்பூர்வமாக 126 பெயரிடப்பட்ட நீரோடைகள் ஓடுகின்றன. இந்தச் சரகம் முழுவதும் சுமார் 3,000 மைல் நீளத்திற்கு நீரோடைகள் பரவியுள்ளன. இதில் சுமார் 1,000 மைல் நீளமுள்ள நீரோடைகளில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடுகிறது. சார்லட் நகரம் ஒரு மலைமுகடு பகுதியில் அமைந்துள்ளதால், இந்த நீரோடைகள் அனைத்தும் நகரின் மையப்பகுதியிலிருந்து வெளிநோக்கி பாய்கின்றன.

சார்லட்டின் மேலைநகர்ப் பகுதியில் பெரிய ஆறுகளை ஏன் பார்க்க முடிவதில்லை என்று நீங்கள் யோசித்தால், அதற்குக் காரணம் நகர்ப்புற வளர்ச்சியின் போது நகரின் மையத்தில் இருந்த பல சிறிய நீரோடைகள் நிலத்தடி குழாய்கள், மதகுகள் மூலம் மாற்றி அமைக்கப்பட்டன. அவை இன்றும் நகரின் சாலைகளுக்கு அடியில் ஓடிக்கொண்டிருக்கின்றன!

நகரின் குறுக்கிலும் நெடுகிலும் ஓடைகள் ஓடுகின்றன. இதற்குப் பின்னால் திட்டமிடப்பட்ட வேலைப்பாடுகள் உண்டு. ஒவ்வொரு வளவு கட்டமைக்கப்படும் போதும், அதனருகில் ஒரு கண்மாய், நீர்நிலையும் கட்டமைக்கப்படும். மழைநீர் வடிந்தோடும் போது பெருக்கில் வெள்ளம் ஏற்பட்டுவிடாமலிருக்க இவை உதவும். இப்படியான நீர்நிலைகள் நிறைந்து அருகில் இருக்கும் சிற்றோடை, ஓடை, பேரோடை, ஆறு எனச் சென்று சேர்ந்து கடைசியாக, கட்டாபா பேராறு உள்வாங்கிக் கொள்ளும்.

காலையில் வழக்கம் போல, சிக்ஸ் மைல் கிரீக் பசுமைவழிப் பாதையில் நடையோட்டம். 1700-களில் இப்பகுதிக்கு வந்த ஆரம்பகால ஐரோப்பிய குடியேறிகள், வர்த்தகர்கள், தயிர், மோர், காய் கனிகள் விற்கப்படும் ஒரு சந்தைப் பகுதியிலிருந்து இந்த நீரோடை அமைந்திருந்த தூரத்தைக் குறிக்க "சிக்ஸ் மைல்" என்று பெயரிட்டனர். இப்பகுதியில் உள்ள பல நீரோடைகளுக்கு தூரத்தின் அடிப்படையில் பெயரிடுவது வழக்கமாக இருந்தது; எடுத்துக்காட்டாக, ஃபோர் மைல் கிரீக், ட்வெல்வ் மைல் கிரீக்). கரோலினா பிராந்தியத்தில் நிலவும் ஒரு பிரபலமான நாட்டுப்புறக் கதையின்படி, 'இசாகுய்னா' என்ற பூர்வகுடி இளவரசி, ஆங்கிலேய வர்த்தகரான தனது காதலனைப் பழங்குடியினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற குதிரையில் வேகமாகப் பயணித்தாள். அவள் தனது பயணத்தின் போது கடந்த ஒவ்வொரு நீர்நிலையையும் மைல் கணக்கில் பெயரிட்டுக்கொண்டே சென்றாள். இந்த அளவீட்டின் அடிப்படையில் இப்பெயர் வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எப்படியோ இந்தக் காலைப்பொழுதில், சிக்ஸ்மைல் கிரீக்கின் காற்று நம்மைத் தழுவித் தடவியதில் இன்புற்றோம். இந்த பேரோடையானது, கட்டாபா ஆற்றுக்குச் சென்று சேர்கின்றது.

கட்டாபா என்பது ஒரு பழங்குடி இனத்தின் பெயர். கட்டாபா மக்கள் தங்களை தங்களின் சொந்த மொழியான சியூவன் மொழியில் "யெப் ஈ ஸ்வாஹேரே" என அழைத்துக்கொண்டனர். இதன் பொருள் "ஆற்றின் கரையில் வாழும் மக்கள்" என்பதாகும். கட்டாபா மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் கரோலினாவின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கட்டாபா ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்தனர். கட்டாபா மக்கள் களிமண்ணால் தனித்துவமான மண்பாண்டங்களைச் செய்வதில் உலகப் புகழ்பெற்றவர்கள். இந்த பாரம்பரிய கலை 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் அழியாமல் அவர்களது தலைமுறையினரால் தொடரப்படுகிறது.

ஐரோப்பியர்கள் மூலமாக பரவிய அம்மை நோய் போன்ற புதிய நோய்களால் கட்டாபா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 1700-களின் தொடக்கத்தில் பல்லாயிரமாக இருந்த இவர்களின் மக்கள் தொகை, 1759-ல் ஏற்பட்ட கொடிய அம்மை நோய்க்குப் பிறகு சில நூறுகளாகக் குறைந்தது. பல தசாப்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 1993-ஆம் ஆண்டு அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கம், கட்டாபா பழங்குடியினருக்கு "அதிகாரப்பூர்வ கூட்டாட்சி அங்கீகாரத்தை" மீண்டும் வழங்கியது. இழந்த தங்களின் நில உரிமைகளுக்காக இவர்களுக்குப் பெருமளவில் இழப்பீடும் வழங்கப்பட்டது.

தென் கரோலினாவின் ராக் ஹில் பகுதிக்கு அருகில், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்புப்பூர்வகுடி நிலம் (Catawba Indian Nation), தோராயமாக 3500 ஏக்கர் உள்ளது. சுமார் 2800 கட்டாபா மக்கள் இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். தங்களின் கலாச்சாரம், உலகப் புகழ்பெற்ற மண்பாண்டக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இந்த "ஆற்றின் மனிதர்கள்" இன்றும் பெருமையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

கட்டாபா மொழியைத் தாய்மொழியாகப் பேசிய கடைசி நபரான சாமுவேல் புளூ என்பவர் 1959-ல் மறைந்தார். இருப்பினும், இன்று "லகோட்டா, “டகோட்டா" போன்ற ஒரு சில சியோன் மொழிகள் இரண்டாயிரத்துக்கும் கூடுதலான மக்களால் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. தற்போது, தென்கரோலினாவில் உள்ள கட்டாபா பழங்குடி அரசு, தங்களின் சியோன் கிளை மொழியான கட்டாபா மொழியை மீண்டும் பேசத் துவங்கி இருக்கின்றது. ஆமாம், காலத்தின் சாம்பலிலிருந்து

மீண்டும் சிலிர்த்து மெல்ல முளைவிட்டுக் கொண்டிருக்கின்றது கட்டாபா!

வெள்ளம் வந்தாலும் வேரறுந்து போகாது ஆற்றின் கரையில் முளைத்த நாணல்; காலப் பெருவெள்ளம் கடந்தும் வாழ்கிறது 'கட்டாபா' எனும் ஆற்றுமனிதர்களின் ஆன்மா!


𝐂𝐡𝐚𝐫𝐥𝐨𝐭𝐭𝐞’𝐬 𝐫𝐡𝐲𝐭𝐡𝐦 𝐟𝐥𝐨𝐰𝐬 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐂𝐚𝐭𝐚𝐰𝐛𝐚.

-பழமைபேசி.

No comments: