7/28/2025

குள்ளாம்பூச்சி

 



குள்ளாம்பூச்சி


தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு, இரண்டே இரண்டு கலைவிருந்திநர்கள்தாம் வந்திருக்கின்றனர். முதலாமவர் எழுத்தாளர் பெருமாள் முருகன், அடுத்தவர் தூரிகைக் கலைஞர் டிராட்ஸ்கி மருது. வீட்டுக்குழந்தைகள், அக்கம்பக்கத்துப் பெண்களுக்கு, எங்கள் எல்லாருக்கும் விருப்பமானவர்களாக, நுட்ப உணர்வினை ஊட்டுபவர்களாக இருந்தனர்.

அண்ணன் மருது அவர்களின் ”கோடுகளும் வார்த்தைகளும்” நூலிலிருந்து, “தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக்கலை வரலாறு உண்டு. ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியல்க்கலைகளைக் கண்டுணரவும் பாரவைப்படிப்பினைப் பெறவும் கலைமனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்”.

எட்டு கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன் என்பதைக் காட்டிலும், அதனுள் மூழ்கிப் போய் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேனென்றுதான் சொல்ல வேண்டும். நூலெங்கும் ஓவியங்கள், ஓவியங்கள் சார்ந்த கட்டுரைகள், அடுக்கடுக்கான தகவல்கள். நானாக, வலிய வலிய நூலை எட்ட வைத்திருக்கின்றேன், தற்போதைக்கு!

கண்டறிதல் என்பது ஒரு வேள்வியைப் போன்றது. ஒரு படத்தைப் பார்த்த மட்டிலும், காட்சி, அது இருக்கின்றது, இது இருக்கின்றதெனும் தட்டையான பார்வையிலும் சென்று விட முடியும்; அதன் ஆழத்தின் ஆழத்துக்கேவும் ஒருவரால் தம்மை அதில் மூழ்கடித்துக் கொள்ள முடியும். அது அவரவர் நுண்ணறிபுலத்தைப் பொறுத்தது.

சில நாள்களுக்கு முன்புதான் நான் நண்பர்களிடம் குள்ளாம்பூச்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். முதன்முதலில் நான் காடேகியது, என் அம்மாவழிப் பாட்டனாரின் ஊரில்தான். காலையில் நாய்க்கு சாமைக்கூழ் தூக்குப் போசியில் கொண்டு போக வேண்டும். போய்ச் சேர்ந்ததும் மாடு மேய்க்க வேண்டும். மாடு மேய்க்கையில், எஞ்சோட்டுப் பையன்களுக்கெல்லாம் ஏதோவொரு துணுக்குறு செயற்பாடுகள் கிடைத்துவிடும். கிடக்கும் கற்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் போடுவது. அப்படிப் புரட்டுகையில், கல்லுக்குக்கீழே தேள், பாம்பு, அரணை, தேரை என ஏதாகிலும் இருக்கும். அவற்றைக் கொல்வது ஒரு விளையாட்டு. அதன் நீட்சியாக இடம் பெற்றதுதான் இதுவும். குறங்காட்டுப்(தரிசு நிலம்) புழுதியில் ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக மரணக்கிணறுகள் இருக்கும். புழுதிக்காட்டுக்குள், தோய்ந்த மெலிதான மணற்பரப்புடன் கூடிய சிறு சிறு குழிகள். அதனுள் எறும்பு போன்றவை விழுந்து விட்டால் மீள முடியாது. மீள்வதற்குள்ளாகவே, குழிக்குள் பதுங்கி இருக்கும் குள்ளாம்பூச்சி அவற்றைப் பிடித்துத் தின்று விடும். வில்லத்தனமான, விளையாட்டுத்தனமான மனம். ஓடியோடித் தேடிப் போய், அவ்வாறான மரணக்குழிகளைக் காலால் எத்திவிடுவது. குழி குலைந்து, அதனுள் பதுங்கி இருக்கும் குள்ளாம்பூச்சி ஓட்டமெடுக்கத் துவங்கும். அந்தக் காட்சியைக் காண்பதில் ஒரு சிரிப்பு. இலயிப்பு.

ஒரு கட்டத்தில் ஆழ்மனம் தலையெடுக்கின்றது. குழியின் அமைப்பைக் கண்டு வியப்புக் கொள்கின்றது மனம். அந்த சிறுபூச்சி எப்படி இப்படியான மரணக்கிணற்றைத் தோண்டி இருக்க முடியுமென வியப்பு மேலிடுகின்றது. தோண்டுகின்ற காட்சியைக் காண வேண்டுமென ஆவல் கொள்கின்றோம். மனிதநடமாட்டம், தப்படி அதிர்வைக் கண்ட பூச்சிகள் மண்ணுக்குள் பதுங்கி விடும்தானே? ஏதேவொரு நாள் எவனுக்கோ அக்காட்சி பிடிபடுகின்றது. அழைத்துப் போகின்றான். சலனமின்றி வரச் சொல்கின்றான். பூச்சிக்கு உணர்வுப்புலம் மட்டுப்பட்டிருக்கக் கூடும். தோண்டிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, ஓயாத நடையில், நடையாய் நடந்து கொண்டிருக்கின்றது. தன் சிறுகால்களால் நடந்து நடந்தேவும் சாய்குழியை உண்டாக்கிக் கொள்கின்றது அப்பூச்சி. பட்டதும் வழுக்கி விழுவதற்கான மேற்பரப்பை நுணுக்கரிய நுண்துகள் மண்ணால் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. எஞ்சோட்டுப் பையன்கள், திண்ணைகளில் படுத்துக் கொண்டு விடிய விடிய கருத்துப் போர் கொள்கின்றோம். மீண்டும் காடேகுதல். அலைகின்றோம் குழிகளைக் கண்டறிய.

மனம் அடுத்த கட்டத்திற்குப் பாய்கின்றது. மெய்யியல் தொடர்பான வாதவிவாதம். இப்படியான சொற்களெல்லாம் இப்போது பயன்படுத்துகின்றோம். அப்போதெல்லாம் அவை குறித்த எந்த பிரஞ்ஞையும் இருந்திருக்காதுதானே? இந்த இடத்தில் மரணக்கிணறு உண்டாக்கிக் கொண்டால், தமக்கு இரை கிடைக்குமென்பது அந்தக் குள்ளாம் பூச்சிக்கு எப்படித் தெரியும்? சூட்சுமம். காத்திருக்கும். வரும் வரையிலும் காத்திருக்கும். தன் இடத்துக்கே வந்து இரையாகும் நுட்பம் அதற்கு வாய்த்திருக்கின்றது. மாடு மேய்க்கும் இந்தப் பையன்கள் கொள்ளும் உணர்வுதானே கலையுணர்வு? பேரூர் கோவிலுக்குச் செல்வோம். கோயிலின் நாற்புறங்களிலும் ஓவியங்கள், சிற்பங்கள் உண்டு. இருந்து, பார்த்து, காண்பதைப் பற்றிய தம் நினைப்புகளைச் சொல்ல, மற்றவரும் தம் எதிர்கருத்தைச் சொல்லும் காலமொன்று இருந்ததுதானே?

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே! (சிவபுராணம் 76 - 79)

நோக்குகளில் அரிய நோக்கே, நுணுக்கங்களில் அரிய நுணுக்கத்தின் நுண்ணுணர்வேயென்றெல்லாம் மணிவாசகப் பெருமான் பாடிச் சென்றிருப்பதுதானே? Mass Media & Communication, பெருந்தொகை ஊடகங்களால் தனிமனிதச் செயற்பாடுகள் அருகிப் போய்விட்டன. ஒன்று கிடைக்கும் போது, மற்றொன்று கைவிடப்படுகின்றது. வாசிப்பு மட்டுப்படுகின்றது. ஊடகக்கட்டமைப்புகள், தனிமனித வெளிச்சம் பாய்ச்சிப் பாய்ச்சியே, வெளிச்சம் நோக்கிய விட்டில்பூச்சிகளை அறுவடை செய்து கொள்கின்றன. சொல்வதை அப்படியப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு தவிர்க்கவே இயலாதவொன்றாக ஆகிவிட்டது. எனவேதான் பேச்சாளர்களுக்கு இருக்கும் தேவை, மதிப்பு, கலைஞர்களுக்கு இல்லாமல் ஆகிவிட்டிருக்கின்றது! நுண்ணுணர்வு கொண்டிருப்பவர்கள், எளிதில் பொதுப்போக்கின்பால் கிளர்ச்சியுறுபவர்களாக இருந்து பொருளியல் வாழ்வில் தோற்றும் போய்விடுகின்றனர் அல்லது தமக்குத்தானே தளையும் இட்டுக் கொள்கின்றனர்.

𝑻𝒉𝒆 𝒆𝒚𝒆 𝒔𝒆𝒆𝒔 𝒐𝒏𝒍𝒚 𝒘𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒎𝒊𝒏𝒅 𝒊𝒔 𝒑𝒓𝒆𝒑𝒂𝒓𝒆𝒅 𝒕𝒐 𝒄𝒐𝒎𝒑𝒓𝒆𝒉𝒆𝒏𝒅! -Robertson Davies

-பழமைபேசி.

7/26/2025

அன்பே தருக

அன்பே தருக

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, மிகவும் விரும்பிப் போற்றப்படுகின்ற நூல். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, முப்பத்தி ஐந்து வெள்ளிகள் கொடுத்து வாங்கி அவ்வப்போது வாசித்துப் பயனடைந்து வருகின்றேன். சிறப்பு யாதெனில், ஏதோவொரு பக்கத்தினைத் திறந்து அங்கிருந்தேவும் வாசிக்கலாம். வரிசைத் தொடரின்றி, தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதில் ஓர் இன்பம். இஃகிஃகி.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பேவும் சுட்டியிருக்கின்றேன். ”தமிழ்மறை” என்பது ஒரு சொல். பிரித்து எழுதத்தலைப்படும் போது, பொருட்சிதைவுக்கும் மரபுச்சிதைவுக்கும் வழி வகுக்கின்றது. எடுத்துக்காட்டாக, தமிழ் மறையக் கூடிய எனும் பொருளில் ஒருவர் பொருள் கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவுப் புலங்களெல்லாம் தானியக்கத்திற்குப் பயன்படுத்தும் காலம் வந்தாகிவிட்டது. அவற்றுக்கெல்லாம் நாம் கொண்டு கூட்டி விளக்கமளித்துக் கொண்டிருக்க முடியாது.

”தமிழின எதிர்கால வழிகாட்டி”, தமிழினத்தின் எதிர்காலத்துக்கான வழிகாட்டி, தமிழினம் கொடுக்கும் எதிர்காலத்துக்கான வழிகாட்டி, தமிழினம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டி எனப் பலவாக்கில் பொருட்சிதைவுக்கு இட்டுச் செல்கின்றது. மாறாக, “தமிழினத் தொலைநோக்கு வழிகாட்டி” எனும் போது பொருட்சிதைவு மட்டுப்படுகின்றது.

ஆயிரத்து எழுநூற்று முப்பத்தி மூன்றாம் பக்கத்தில், “தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பு” எனும் தலைப்பில், அவசியமானதொரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்ப்புலமைக்கும், புத்தாக்கப் படைப்புகளுக்குமான அக்கப்போர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்ற இவ்வேளையிலே, அதற்கானதொரு மருந்தாக இடம் பெற்றிருக்கின்ற படைப்பாகத்தான் நான் இதைப் பார்க்கின்றேன். ’தமிழ்க்காவலர்கள்’ எனும் தோற்றப்பாடுக்கும் ’புதுமைப் புரட்சியாளர்கள்’ எனும் தோற்றப்பாடுக்கும் இடையில்தான் மேன்மை என்பதன் அவசியத்தை விளக்குகின்ற படைப்பு. அருமை. ’மொழியின் வளத்தைக் காக்கும் பொறுப்பு நமக்குளது’ என வலியுறுத்தும் படைப்பிலேயே சிதைவுகளும் பிழைகளும் இருக்கக் கூடாதன்றோ?!

அன்புடன் பொறுத்தருள்க. மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதாலேயே, “துரோகி, முதுகில் குத்துபவன்” போன்ற சொற்களைப் பயன்படுத்தும் அவலம் நமக்குள் நீங்க வேண்டும். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது!

(அண்மையில், நடப்புப் பதிப்பினை அன்பளிப்பாகக் கொடுத்த இளவலுக்கு நன்றி)

-பழமைபேசி.



 

7/24/2025

தூங்கற்க தூங்காது செய்யும் வினை

 தூங்கற்க தூங்காது செய்யும் வினை

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை [பொறுமையாக செய்ய வேண்டிய செயல்களை காலம் கடந்தும் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய செயல்களுக்குக் காலத்தாழ்ச்சி கூடாது]

திரைப்பட விழா, நட்சத்திர இரவு முடிந்து தாவளம் திரும்பும் போது மணி இரவு பத்தரை இருக்கும். பிள்ளைகள் எல்லாம் உறங்க வேண்டுமென விரைவுபடுத்திக் கொண்டிருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஏதோ சொன்னது போல இருந்தது. சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை.

அறைக்குச் சென்றதும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தில் கலியபெருமாள் அண்ணாச்சி அறைக்குத் தாகசாந்திக்காகச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறு கதைகள் பலவும் பேசிக் கொண்டிருந்தோம். திடுமென நினைவுக்கு வந்தது. ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியொன்று இருந்தது. அனுப்பி வைத்தேன். நன்றிங்கண்ணா என உடனே மறுமொழி வந்ததும், அழைக்கத் தலைப்பட்டேன். அப்போதுதான் சொன்னார், நினைவுக்கு வந்தது. “உதவி தேவை, தன்னார்வலர்களுடன் வாருங்கள்?” என்றார். மணி, நடுநிசி 12.30. July 4, 2025.

பற்றியம் இதுதான். மணி பத்துக்கு மேல் பணியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். விழா வளாகத்தில், 1000 இருக்கைகள் வெள்ளுறையுடன் இருக்கின்றன. மேசைகளின் மேல் விரிப்பு போர்த்தப்பட்டு இருக்கின்றது. அவை யாவற்றையும் பிரித்தெடுத்து விடவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, மாநாட்டுக்கூடத்தினர் மறுநாள் காலைக்கான அரங்க அமைப்புக்கான நாற்காலிகள் 2850 போடுவர். அதற்கான காலக்கெடு 12 மணி. தற்போது 12.30. அவ்வ்வ்...

செந்தில் அண்ணாச்சி, வெற்றிவேல் பெரியய்யா, ஷான் குத்தாலிங்கம், இன்னும் இருவர்(sorry, forgot), நான் என ஆறு பேர் மாநாட்டு வளாகம் சென்று சேர்ந்தோம். வாயிற்கதவுகள் அடைபட்டுக் கிடக்கின்றன. காத்திருந்து, அரங்கம் சென்று சேரும் போது மணி 1.

இஃகிஃகி. கார்த்திப் பெருமாள், ஒருங்கிணைப்பாளரின் இணையர் முருகேசன், பாரதி பாண்டி முதலானோர் ஏற்கனவே உள்ளுறைகளை உரித்துப் போட்டு உரித்துப் போட்டு ஓய்ந்திருந்தனர். கார்த்திக் அவர்கள் சொன்னது, “குனிஞ்சு குனிஞ்சு இடுப்பே முறிஞ்சு போச்சுப்பா”. இஃகிஃகி.

பிறகு நாங்களெல்லாம் சேர்ந்து முசுப்பாத்தியுடன் கதைத்துக் கதைத்து எஞ்சி இருந்தனவற்றையெல்லாம் உரித்துப் போட்டு, அவற்றையெல்லாம் வளாகத்தின் ஓரத்திற்குக் கடத்தியென ஒருவழியாக வேலை முடிவுக்கு வந்தது. மணி ஒன்றே முக்கால்.

காலை 8 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்குவதெப்படி?? எண்ணிப்பாருங்கள் தோழர்களே, ஒருங்கிணைப்பாளர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கக்கூடும்? 2 மணிக்கும் மேலென்றால் அவர்களும் போய்விடுவர்.

தொப்பலாக நனைந்துவிட்டோம். மீண்டும் அறைக்கு வந்து, குளித்து, காலையில் 6.45க்கு வளாகம் வந்துவிட்டேன்! யாரையும் உள்ளே விட மறுக்கின்றார்கள், ஒப்பந்தப்படி காலை 7.30 மணிக்குத்தானாம். எனக்கு மட்டும் பணியாளர் அட்டை இருந்தபடியால் உள்ளே விட்டுவிட்டனர்!!

இக்கட்டான சூழலில் களமிறங்கிய நண்பர்கள் வாழ்க வாழ்க! ! இஃகிஃகி!!


7/21/2025

தூரிகைப் போராளி டிராட்ஸ்கி மருது

தூரிகைப் போராளி டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருது, அணுக்கமானோர் இடையில் மருது அண்ணன்  என அறியப்படும் மருதப்பன் மருது அவர்களுக்கு, இயங்குபடக் கலைஞர், திரைப்பட சிறப்புத் தோற்ற இயக்குநர், கோட்டோவியக் கலைஞர், கணிப்பொறி வரைகலைஞர், காண்பியல்தள அறிஞர், முற்போக்கு சிந்தனையாளர், இப்படியான அறிமுகங்களை நாம் எங்கும் காணலாம்.

சார்லட் நகரில், எங்கள் வீட்டில் இடம் பெற்ற கலந்துரையாடலின் வழி(7/20/2025) நாங்கள் அறிந்து கொண்டது யாதெனில், பல்நோக்குச் சிந்தனையாளர் (Lateral Thinker) என்பதுதான். அடுக்கடுக்கான நுட்பங்களை விவரிக்கிறார். அவற்றை வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகும் போது, நல்லதொரு கதையாடலாக, சொற்பொழிவாக அது உருவெடுக்கும்.

அண்ணன் மருது அவர்கள் அப்படியான ஒரு பாங்கினைக் கொண்டிருக்கவில்லை. இந்தக் காலத்தில், இந்தக் கோட்டையானது இப்படி அமைந்திருக்கின்றது; அது ஒரு கல்கோட்டை. அதன் அமைப்பு இப்படியிப்படி எனச் சொல்கின்றார். மனம் இறும்பூது கொள்கின்றது. அங்குதான் திருப்பம். அந்த வேகத்திலேயே, அப்படி அமைந்திருக்காமல், இப்படி இப்படியெல்லாம் அமைந்திருக்கலாம்(what are the other options). அவற்றுக்கிடையே இது இப்படி அமைந்திருக்கின்றது. அதன் நுட்பம் இதுவாக இருக்கலாமென அவர் சொல்கின்ற பாங்கில், தனித்துவமாக மிளிர்கின்றார். நமக்குள் அந்த இடத்தில் ஒரு புது உலகம் காணக்கிடைக்கின்றது. நுட்பத்தின் அடி ஆழத்துக்கே அழைத்துச் செல்கின்றார்.

எடுத்துக்காட்டாக, குதிரை ஓடுகின்றது. அந்த ஓட்ட இயங்குதலில் பல்வேறு விதங்கள் உள்ளன. விரைவாக நேர்கோட்டில் ஓடுவது, வளைந்து வளைந்து பாதையின் அமைப்புக்கொப்ப ஓடுவது, கொண்டாட்ட மனநிலையில் சவாரி மனப்பான்மையில் ஓடுவதென நிறைய. ஒவ்வொன்றின் தன்மையும் இயற்பியலுக்கொப்ப மாறுகின்றது. அந்த இயற்பியலைப் புரிந்து கொண்டால்தான், காண்பியலும் நிறைவுகொள்ளும்; இயற்கையை வெளிக்காட்ட வல்லதாக அமையும். இந்த நுட்பத்தை விவரிக்கின்றார்.

ஏராளமான கலைஞர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழ்ந்த சுவைமிகு சம்பவங்களையும் குறிப்பிடும்போது, அந்தக் கலைஞனின் தனித்துவத்தைத் தன்பார்வையில் சொல்லும் போது, அந்தத் தனித்துவத்தின் சிறப்பு புலப்படுகின்றது.

கலைப்பார்வையிலிருந்து விலகி, அதே சம்பவத்தை சமூகப்பார்வையிலும் விவரிக்கத் தலைப்படுகின்றார். பொதுவாக ஆதிக்கசக்திகளை நாம் விமர்சிக்கின்றோம், வெறிகொண்டு திட்டித் தீர்க்கின்றோம். ஆனால், இவரோ, அது ஏன் ஆதிக்கசக்தியாக நிலைபெற்றதென்பதைச் சொல்கின்றார். காரணங்களை நாம் புரிந்து கொள்கின்றபோது நாம் நம்மைத் திருத்திக் கொள்வதற்கும் சூழலின் தன்மையில் இருக்கும் புலப்படாப் பொருளை புரிந்து கொள்வதற்குமான அகவெளி நமக்கு அமைகின்றது.

பிரிய மனமில்லைதாம். ஓவியர் மருது என்பவர் யாரென்று கேள்விப்படாதவர்கள்தாம், பிரியமனமின்றி விடைபெற்றுச் சென்றனர்.


-பழமைபேசி, pazamaipesi@gmail.com


 

7/08/2025

பேரவை விழா 2025


வணக்கம். இப்பதிவினை நான் தனிமனிதன் எனும் இடத்தில் இருந்து எழுதுகின்றேன். எவ்விதப் பொறுப்பின்சார்பாகவும் எழுதவில்லை.

2025 விழா துவக்கப்பணிகளேவும், எதிர்மறை எண்ணங்கள் நிரம்பிய சூழலில்தான் துவக்கப்பட்டன. உள்ளூரிலும் சரி, பேரவை சார்ந்தவர்களும் சரி, வதந்திகளை, அவதூறுகளை நீக்கமற எங்கும் பரப்பிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில்தான் துவக்கவிழா(kickoff meeting) இடம் பெற்றது. நானும் அதில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது, be optimistic, convention will be sold out.

மாமதுரைத் தொழில்முனைவோர் மாநாடு வந்தது. அங்கிருந்த நண்பர்கள் சொன்னார்கள். நடுத்தர, விளிம்புநிலை மக்களுக்கானதாக இருத்தலே, உங்களின் இலக்காக இருக்க வேண்டுமெனச் சொன்னார்கள். அப்படியேவும் நடந்தது. சகலதரப்பும் அடங்கிய பொதுநிகழ்வாக இருக்கவும் ஆசைப்பட்டோம். அவ்வண்ணமே விருந்திநர்களும் அழைக்கப்பட்டனர். தம் தரப்பு மட்டுமே இடம் பெற வேண்டுமென நினைப்பது, இலாபநோக்கற்ற பொது அமைப்புக்கு என்றுமே உகந்ததன்று. மாநாடு பெருவெற்றி கொண்டது. துணை அரங்கும் நிரம்பியது. அதுகண்டாவது அமைதி கொண்டிருந்திருக்கலாம்.

அவதூறுகள், வதந்திகள், கொடைதடுப்புப் பணிகள் மேலும் வீறு கொண்டன. தகவல் தொடர்புப் பணிகள் சீராகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்து வந்தன. சகல தரப்பும் உள்ளே வரும் போது, எல்லாமும் ஈடேறும் என்பதில் பெரும் நம்பிக்கை நமக்கு உண்டு. இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் குறியாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினோம். வாய்த்த பொருளாளரும் அதில் வல்லவர். இருந்தாலும், விருந்திநர் எண்ணிக்கையைக் கூட்டியதில் எனக்குப் பெரும் ஏமாற்றமே! 2009 - 2017ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை முன்வைத்துப் பேசினேன்.

வட அமெரிக்க வாகை சூடிப் போட்டிகளை வடிவமைத்தேன். பிற்பாடு, அதற்கான ஒருங்கிணைப்பாளரிடம் பொறுப்புகள் கையளிக்கப்பட்டு, பல்வேறு போட்டிகளின் தலைவர்களும் இனம் கண்டறியப்பட்டு, பன்மைத்துவம் போற்றப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள் மனவுறுதியோடு இருந்தனர். எவ்விதக் காரணத்துக்கும், நட்டமே ஆனாலும் சரி, விலையில்லா அனுமதியைத் தரக்கூடாது என்பதில். மிகச்சரியான முடிவு.

முதன்மை அரங்க நிகழ்ச்சிகள், இணையமர்வுகள், போட்டிகளில் பங்கேற்பது, விருந்திநராக வருவது போன்றவற்றுக்கு பலத்த போட்டி நிலவியது. காரணம், ஏற்படுத்தப்பட்ட நம்பகமும் தரமும்!

விழாவில் குறைகளே இல்லையா என்றால், இருக்கின்றனதான். அவையெல்லாம் பொருட்படுத்தக் கூடியன அல்ல. உள்ளூர் தன்னார்வலர்கள் குறைவு, ஆட்களை வேலைக்கமர்த்தித்தான் சாப்பாடு போட வேண்டுமென்றார் நண்பர். நான் சொன்னேன், அன்போடு அழைத்தால், ஊரே வருமென்றேன். அப்படித்தான் நடந்தது. பரிமாறுவதற்கும் போட்டா போட்டி.

அன்பை விதைத்தால் அன்பே விளையும்! 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பேரவை கண்டிருக்கின்றது Sold Out , that too twice, Madurai, Now in Raleigh!!

-பழமைபேசி.