8/29/2024

கலை இலக்கியக் கூட்டம்

பிள்ளைகளுக்கு மாலை 7 - 9, வயலின் வகுப்பு. சார்லட்டில் கடுமையான, இலையுதிர்கால மாசுப்பொழிவு, அதன் காரணம் தும்மல் என நெருக்கடியில் இருந்தேன். இருப்பினும், இந்நிகழ்வைக் கண்டே ஆகவேண்டுமென்பதில் உறுதியாக இருந்து, பங்கெடுக்கும் வாய்ப்பும் அமைந்தது.

மரபிசையில் இளங்கலை, நிகழ்த்துகலையில் முதுகலை, மக்களிசையில் ஆய்வு செய்து முனைவர், இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியவர் எனப் பன்முகம் கொண்ட கலைமாமணி ஜெயமூர்த்தி அவர்களின் உரை கேட்பதில் ஆவல். நண்பர், தோழர், எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் ‘நவீன இலக்கியம்’ குறித்து என்னதான் சொல்லப் போகின்றாரெனும் எதிர்பார்ப்பு ஆகியன வீண் போகவில்லைதான்.

இருப்பினும் சற்று ஏமாற்றம். மக்களிசைப் பாடகரின் பேச்சு சட்டென முடிந்து விட்டது. ஆழ்ந்த உரைக்குள் அவர் சென்றிருக்கவேயில்லை. ஆனாலும் அவரின் குறுகிய நேரப் பேச்சு, பாடல், தென்றல் வருடிச் சென்றது போல இருந்தது.

எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் சொன்ன சந்தோஷ் ஏச்சிக்கானம் அவர்களின் பிரியாணி எனும் கதை, தொடர்ந்து இடம் பெற்ற உரையாடல் நன்றாக இருந்தது. எல்லாரும் எல்லாருடைய கருத்துகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் உரையாடல் இடம் பெற வேண்டும். அப்போதுதான் யோசிக்கத் தலைப்படுவோம். 

‘நவீன இலக்கியம்’ என்பதே ஆற்று நீரைப் போன்றதொரு சொல்லாடல்தாம். அதற்கென, நிலையான, ஓர் உரு, வண்ணம் போன்றவை கிடையாது. வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஒப்பீடாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான். தற்கால இலக்கியம் எனப் புரிந்து கொள்ளலாம். 2010இல் இருந்த தற்காலம் வேறு, 2024இல் இருக்கும் தற்காலம் வேறு. காலத்துக்கொப்ப, அந்தந்தக்காலத்தின் மதிப்பீடுகளை, கூறுகளை, பயனீடுகளை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள, அவ்வப்போதைய, சமகாலத்தியப் படைப்புகள் தேவையாக இருக்கின்றன என்பதான புரிதலை, மீண்டுமொருமுறை ஏற்படுத்திக் கொண்டாயிற்று.

தொகுத்தளித்த முனைவர் அருள்ஜோதி அவர்களுக்கும் பேரவைச் செயற்குழுவுக்கும் நன்றி. செயற்குழுவினர் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும். நன்றி.

https://www.youtube.com/live/TbGzMsw0smk?si=tDN5d-hqjrVSKa47

பழமைபேசி.

No comments: