8/06/2022

பன்னாட்டு விமானப்பயணம்

பன்னாட்டு விமானப்பயணம் என்பது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. என்ன காரணம்?

விமானப்போக்குவரத்து என்பது கிட்டத்தட்ட 180 துறைகளை உள்ளடக்கியது. ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டிருக்கின்றது. ஒரு போக்குவரத்து நிறுவனத்துக்கும் இன்னொரு போக்குவரத்து நிறுவனத்துக்கும் தொடர்புண்டு. விமானத்தை குத்தகைக்கு விடும் நிறுவனம் வேறு; விமானப் பயணிகளின் கட்டணங்களை நிர்வகிக்கும் நிறுவனம் வேறு. விமானப் பணியாளர்களை நிர்வகிக்கும் துறை வேறு. விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் நிறுவனம் வேறு. சரக்குகளைக் கையாளும் துறை வேறு. அந்தத் துறைக்குள்ளாக ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வேறு. விமானநிலைய ஓடுதளங்களைப் பராமரிக்கும் நிறுவனம் வேறு. கட்டுப்பாட்டு அறைகளைக் கண்காணிப்பது வேறு துறை. ஒரு பயணம் நல்லபடியாக நிகழ, இந்தத்துறைகளெல்லாம் ஒன்றுக்கொன்று இயைந்து செயற்பட்டாக வேண்டும். நிற்க.

கோவிட் தொற்றுக்காலம் வருகின்றது. விமானங்கள் பறப்பதினின்று மட்டுப்படுகின்றன. வேலை இழப்புச் செய்யக் கூடாதெனச் சொல்லி, விமான நிறுவனங்களுக்கு சலுகைத் தொகை கொடுக்கப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு மாதாமாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, ’பெருந்தொகை கொடுக்கப்பட்ட முன்கூட்டிய பணி ஓய்வு’ என்பதைக் கையிலெடுக்கின்றன நிறுவனங்கள். நிறையப் பேர் பணி ஓய்வு பெற்று விடுகின்றனர்.

தொற்று சரியாகி தளர்வுகள் செயற்பாட்டுக்கு வந்தவுடனேயே ஒரே நேரத்தில் பயணிகள் பயணிக்கத் தலைப்படுகின்றனர். மளமளவென விமானங்கள், டிக்கெட்டுகள் என பயணங்கள் துவங்குகின்றன. ஆனால் களத்தில், பணிகளைத் துவக்குவதில் சிக்கல்கள். புதிய பணியாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லை. போதிய பைலட்டுகள் இல்லை. வேலையற்றுக் கிடந்த தளபாடங்களை மீளக்கட்டமைத்துச் செயற்பாட்டுக் கொண்டு வருவதில் தாமதம். துறைகளுக்கும் துறைகளுக்குமான ஒருங்கிணைப்பில் தொய்வு. விளைவு, விமானங்கள் கேன்சல் ஆகின்றன. போதாக்குறைக்கு, கடுமையான வெப்பம், புயல் முதலான காரணங்களும் சேர்ந்து கொள்கின்றன. ஒருநாளைக்கு அமெரிக்காவில் மட்டும் 1500 விமானங்கள் வரை கேன்சல் ஆகின்றன. 1800 விமானங்கள் வரை காலதாமதம் ஆகின்றன. நாம் என்ன செய்யலாம்?

1. கேளிக்கை, பொழுதுபோக்கு என்பதற்கான பயணங்களைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம்.

2. நிலைமையைப் புரிந்து கொண்டு, பொறுமையுடன் தன் பயணத்திட்டத்தை எதிர்கொள்தல் நலம்.

3. போதிய தின்பண்டங்களைக் கைவசம் கொண்டு செல்தல் நலம். மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களும்.

4. அதிகாலைப் பயணங்கள் குறைவான தடங்கலுக்கு உரித்தானது. ஆகவே அப்படியானவற்றைத் தெரிவு செய்தல் நலம்.

5. ஒருவிமானத்துக்கும் இன்னொருவிமானத்துக்குமான கனெக்சன் இருக்குமாயின் போதிய இடைவெளியுடன் பயணத்தை அமைத்துக் கொள்வது உசிதம்.

6.சரக்குப் பெட்டிகள் வந்து சேர்வதற்கு காலதாமதமாகலாம். ஆகவே அதற்கேற்றபடி தயார்படுத்திக் கொள்தல் நலம். ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானவற்றை கேரி-ஆன் லக்கேஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி கிடைக்காவிடில் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. டிக்கெட்டுகளை உரிய கிரிடிட் கார்டில் வாங்குவது நலம். அதில் இன்சூரன்சு இருக்கும். மேலும் கூடுதல் கட்டணத்துடன், இன்சூர் செய்து கொள்வதும் மன அமைதியைக் கொடுக்கும். Lost luggage insurance reimburses the value of what you lost, assuming you can document what’s inside (pro tip: take a picture of the interior contents before you leave home). 

7. செல்ஃபோன் சார்ஜ் செய்வதற்கான உபகரணங்கள் அவசியம் கைவசம் இருத்தல் நன்று.

8. செவ்வாய், புதன், டிராஃபிக் குறைவான நாட்கள்.

பணம் இரண்டாவது. பாதுகாப்பு, உடல்நலம், மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ப தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள வாழ்த்துகள்.

No comments: