6/24/2022

தாயகம்

35 ஆண்டுகளாக அந்நிய நாடுகளில் வாழ்ந்து வரும் எனக்கு ஒவ்வொரு தாயக வருகையும் மறுபிறவிதான். ஒவ்வொரு முறை வரும்போதும் சிலபல மனிதர்களைத் தொலைத்து விட்டிருப்பேன். பிறந்த மண்ணில் வாழும் மனிதர்களே எனக்குத் தாயகம். ஆகவேதான் மனிதர்களைத் தேடித்தேடிச் செல்கின்றேன். அம்மா பிறந்த ஊரிலிருக்கும் மாமாவின் தோட்டத்தில் இருந்த தாவரங்களைப் பார்த்தபடி இருந்தபோதுதான் என் சின்னம்மா என்னை அழைத்து, இது யாரென்று தெரிகின்றதாயெனக் கேட்டார். தெரியவில்லை என்றேன். சுட்டப்பட்டவர், என் சகோதரர்களின் பெயர்களைச் சொல்லி, என் பெயரையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, 'நீங்களெல்லாம் குழந்தைகளாக இருக்கும் போது, வளவுக்குள் உங்களைத் தூக்கிக் கொண்டு போய் வைத்திருப்போம். விளையாடி மகிழ்வோம்' என்று சொன்னார். எனக்கு மனம் உறைந்துபோய் விட்டது.

'இதுதா கருங்கண்ணி. நீண்ட காலமானதால் நீ மறந்து விட்டிருப்பாய்' என்றார் கவனித்துக் கொண்டிருந்த சின்னம்மா. நான் மறுமொழியாக எனக்கு நினைவிலிருக்கும், 'மாரி, முத்தி எல்லாம் நலமா?' என்றேன். 'அவர்களெல்லாம் இறந்து பல ஆண்டுகளாகின்றன' என்றார் கருங்கண்ணி. என்னை விடவும் ஐந்தாறு ஆண்டுகளே அதிக வயதுள்ள அந்தப் பெண்மணி.

காசு பணம் கொடுத்திருக்கலாம். உணர்வுப் பெருக்கில் எதுவும் தோணவில்லை. இப்படியாகப்பட்ட மனிதர்களே எம் தாயகம்.

பழமைபேசி.

No comments: