1/13/2020

பொங்குக பொக்கம்


வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு பொங்கு!!

பொக்கம் pokkam , n. < பொங்கு-. 1. Abundance; மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382). 2. Eminence, height; உயரம். Loc. 3. Bloom, splendour; பொலிவு. (பிங்.) புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திரு வுலா.).

பொலிவையும் பெருக்கத்தையும் வளர்ச்சியையும் குறிக்கும் குறியீடாக, பொங்கல். வாழ்வில், வேளாண்மையில், தொழிலில் பொங்கிவர வாழ்த்தி, விழுமுதலைக் கொண்டு ஆடுதல், பொங்கல் விழாக் கொண்டாட்டம்.

வேளாண்மை, தொழில், வாழ்வு யாவற்றுக்குமான‌ இயற்கையின் சிறப்பாகக் கதிரவன். கதிரவனுக்கு வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்வு. வழக்காறாக, மனிதன் மரத்தை வணங்கினான். ஆற்றை வணங்கினான். மலையை வணங்கினான். கடலை வணங்கினான். கதிரவனையும் வணங்குகின்றான். பொங்கும் கதிரோன் நாள்!!

கூட்டமாக வாழத்தலைப்பட்டவன். மனம் தனிமையையும் நாடும். அதேபோல இன்னபிறரின் அணுக்கத்தையும் நாடும். கூட்டுக்களிப்பும் உண்டாட்டும் எந்த உயிரினத்துக்கும் உரித்தானது. அதன்நிமித்தம் பொங்கல் விழாக் கொண்டாட்டத்திலும் கலை இசை பங்கு கொள்கின்றது. நட்புபாராட்டிக் கெழுமை கொள்கின்றான் மனிதன்.

உறைவிடத்தைத் தூய்மைப்படுத்துகிறான். தொழுவம் பேணுகின்றான்.அழகூட்டுகிறான். உடனுறை விலங்குகளைச் சிறப்பிக்கிறான். புதுவிளைச்சலை வரவேற்க, 'புதுயீட்டுப் பொங்கல்' வைக்கிறான். உடன்படு உயிரினங்களுக்கும் படைக்கிறான். சமயமில்லை. பேதமில்லை. பொங்கலோ பொங்கலெனக் கூவிக் குதூகலம் கொள்கின்றான்.

பின்னாளில் தனித்துவம் கொள்ள விழைந்தான். அரசியல் பழகினான். செப்புமொழி முன்வைத்து நடைபோட்டான். வள்ளுவரை முன்னிறுத்தினான். திருவள்ளுவரை முன்னிறுத்தினான். தற்காப்புக்கலை பழக்குவித்தான். இணக்கம் முகிழ பாரிவேட்டை நடத்தினான். உளம் மகிழ கரிநாளில் கள்ளு உண்டாட்டு சேவற்கோச்சை!!

கூட்டுக்களி(இசை, நடனம், ஆடல், பாடல், கதை, கலை, விளையாட்டு), உண்டாட்டு, இதனூடாக அரவணைப்பு. உறுதிகொள்ள ஊக்கம்கொள்ள மேம்பட இவைதாம் அடிப்படை. நிறுவனம் செய்து கொடுத்தால் உழைப்புக்கு ஊட்டம். சாமியார் செய்து கொடுத்தால் பணத்துக்கு ஊட்டம். மனிதனுக்கு மனிதனே செய்து கொண்டால் அது பொங்கல்.

உவகை ஈகை நாடல் பேணல் பொங்க நண்பர்களைச் சந்திக்கலாம்,மூத்தோரைச் சந்திக்கலாம்;ஏக்கம் தாக்கம் அளவளாவிக் கொள்ளலாம்.பிணக்குகள் தீரும்.பகைமை ஒழியும். ஒழிக்க உறுதியும் இறுகும். மொத்தத்தில் தைப்பொங்கல் நம்மனத்துக்கும் புதுயீடுதான். பொங்கல்நல்வாழ்த்தும் வணக்கமும்! Cheers!!

பழமைபேசி.

1 comment:

கீதமஞ்சரி said...

அழகான தெளிவான விளக்கம். புதுப்பொலிவுடன் தொடங்கும் வாழ்க்கையின் அடையாளம். இனிய பொங்கல் வாழ்த்துகள்.