12/02/2017

காக்காப்பொன்

நடுநிசி வரைக்கும் வேலை பார்த்துக் களைத்துப்போன காக்காப்பொன்னான் மடப்பள்ளியிலேயே தூங்கிவிட்டார். ஊரிலிருக்கும் குஞ்சுகுளுவானிலிருந்து இந்தத்தலைமுறை ஆட்கள் வரை எல்லாரும், பெரியகாக்காப் பொன்னான் என்கிற முத்துவேல்ப் பூசாரியின் மகனான வடிவேலுவை ”காக்காப்பொன்னான்” என்றே விளிக்கிறார்கள். ஊர்க்கவுண்டரின் அப்பாரய்யன் பெரியநாச்சிமுத்துக் கவுண்டர் இருந்த காலத்தில் கட்டப்பட்ட மடப்பள்ளியானது, புழக்கத்திற்கு வருமுன்னமே செத்துப் போன, பெரியகாக்காப் பொன்னானை நினைவில் வைத்திருக்கும் ஊர்ப்பெரியவர்கள் சிலர், சின்ன காக்காப்பொன்னானென்றும், சின்னமுத்தனென்றும் விளிக்கிறார்கள். ஊர்க்காரர்களுக்கு காக்காப்பொன்னானை ரொம்பவும் பிடிக்கும். சின்னஞ்சிறு பொடிசுகளைக் கூட மிகவும் அன்பாகவும் மரியாதையோடும் விளித்துப் பேசுவதும் அவரது பணிவும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பாப்பாங்காட்டு சின்னவக்கீல்க் கவுண்டருடைய மகள் பெரியம்மணி மகளுக்கும் மகனுக்கும். மாகாளியாத்தா கோவிலில் வைத்துத்தான் மொட்டையடித்துக் காதுகுத்து வைக்க வேண்டுமென்பது பெரியவக்கீல் பாட்டைய கவுண்டரின் விருப்பம். அவர் இருக்கும் போதே நடந்திருக்க வேண்டிய முறைச்சீர் இது. எதிர்பாராவிதமாகப் பெரியவர் தவறிவிட்டதினால், இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அதற்கு காலம் வாய்த்திருக்கிறது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்கு காலபூசை செய்து கும்பிட்டுவிட்டு மொட்டையடித்துச் சாமிகும்பிடுதல். பதினொரு மணிக்குப்பிறகு பாப்பாங்காட்டிலுள்ள கருப்பராயனுக்கு கெடாவெட்டிப் பூசை செய்தலென போன மாதமே முடிவு செய்யப்பட்டு ஊரெல்லாம் காக்காப்பொன்னான் அவர்களையே அழைக்கவும் சொல்லி, அழைப்பு வேலைகளும் முடிந்து விட்டது.

கோவில்த்தரையை எல்லாம் கழுவிவிட்டு, சுற்றுமுற்றும் சாணம்போட்டு மெழுகிவிட நடுநிசி ஒருமணி ஆகிவிட்டது. இனி மடப்பள்ளியில் இருக்கும் அந்த ஒற்றையடுப்பிலேயே விறகைக்கூட்டி பாலில்லாத வரக்காப்பியைப் போட்டுக் குடித்துவிட்டு, மடப்பள்ளியெல்லாம் தட்டிக்கூட்டி பூசி சாணி வளித்துவிட வேண்டும்.

காக்காப்பொன்னான் அவர்களின் மூதாதையர் காலத்திலிருந்தே, வடக்கே சுல்தான்பேட்டை, தெற்கே புக்குளம் குறுஞ்சேரி, மேற்கே சூலக்கல் கோயில்பாளையம், கிழக்கே பெரியபட்டி குண்டடம் வரையிலுமாக எங்கு கூத்து நடந்தாலும் வெள்ளிப்பட்டியிலிருக்கும் இவர்களிடமிருந்துதான் காக்காப்பொன் வாங்கிப் போவார்கள். நயம் காக்காப்பொன், இடைவெட்டு காக்காப்பொன், நசுவல் காக்காப்பொன் எனத் தரத்தின் அடிப்படையில் இரகம் இரகமாக இவர்களிடத்தில் காக்காப்பொன் கிடைக்கும்.

ஊர் மாரியம்மன் கோவிலில் பூசை செய்வது இவர்களுடைய தலைக்கட்டுமுறையென்றால், காக்காப்பொன் சேகரம் செய்து ஊர்களில் நடக்கும் கூத்துகளுக்கும், கோவில்சாமிகள், சப்பரச்சாமிகள், சக்திசாமிகள், உருவாரப்பொம்மைகள், பிள்ளைப்பொம்மைகளென எல்லாவற்றுக்கும் தேவையான காக்காப்பொன் கொடுத்து, இந்த உலகம் அதன் அச்சில் இயங்குவதற்கான அத்தனைக்கும் தாமே பொறுப்பு எனக்கருதும்படியாகத் தொண்டு புரிந்து வருகின்றனர் காக்காப்பொன்னானும் அவருடைய அங்காளிபங்காளிகளும்.

திண்ணையின் இடப்பக்க மூலையில் கூத்தாட்டக் கலைஞர்களுக்கான இடைவெட்டுக் காக்காய்ப்பொன்ப் பை, மழைச்சாரலுக்கு நனையாத வண்ணம் வீட்டு எறவாரத்தில் கொக்கிப் போடப்பட்டு அதில் தொங்கிக் கொண்டிருக்கும். யாரும், எந்நேரமும் வந்து வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு வாங்கிப் போகலாம். தேங்காய்ச் சிரட்டையில் அளந்து கொடுப்பார்கள். ஒரு சிரட்டை எட்டணா, இப்போதைய காசுக்கு ஐம்பது காசுகள். ஐம்பது காசென்றால் பெரிய பணம். ஐம்பது காசுக்கு நான்கு புட்டும் ஒரு லோட்டா பனங்கருப்பட்டிக் காப்பியும் கிடைக்கும் வள்ளியம்மா கடையில். மற்ற சோலிகளுக்கென்றால், காக்காப்பொன்னான் அவர்களிடமோ அல்லது அவருடைய தம்பி ஃபிட்டர் நடராசு அவர்களிடமிருந்தோதான் வாங்கிப் போக வேண்டும்.

சாமிகாரியத்துக்கு என்பதால், நயம் காக்காப்பொன்ப் பொதிகளை வீட்டுக்குத்தூரமாகாத ஆட்கள் புழங்கும் கோயில் மடப்பள்ளியிலும் புத்துக்கண் சாளையிலும்தான் பத்திரப்படுத்தி வைப்பது குடும்ப வழக்கம். ஊரிலிருக்கும் நாயக்கமார்கள் எல்லாம் ஊரோரத்தில் இருக்கும் புற்றுக்கு பெளர்ணமிதோறும் பூசை செய்து குலதெய்வமான எல்லம்மாவை வழிபடுவார்கள். அந்த புற்றுக்கு அருகே ஒரு ஓலைவேய்ந்த குடிசையுமுண்டு. இந்த சாளையிலும் காக்காப்பொன் பொதிகள் இருக்கும். ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் ஒரு மங்கலப்பெண்ணுக்கு பட்டு உடுத்தி, செந்தூரம், காக்காப்பொன் கொண்டு அலங்காரம் செய்து சக்தியழைத்து வாக்குக் கேட்பார்கள். அதனால் காக்காப்பொன் பொதிகள் இந்தச்சாளையிலும் இருக்கும்.

உள்ளூர்க் கோவில்களில் இடமபெறும் அலங்காரத்துக்கான காக்காப்பொன், சாமி உருவுகளுக்குப் பூசப்படும் காக்காப்பொன், கண்ணடக்கமாக வைக்கப்படும் காக்காப்பொன் போன்றவற்றுக்கு யாரிடமும் பணம் வாங்குவது கிடையாது. வருடா வருடம் குடியானவர்கள் படியளக்கும் தானியங்களும், நார்முத்து நாயக்கர் தோட்டத்திலிருந்து அவ்வப்போது கொடுக்கப்படும் தேங்காய்களும் காய்கறிகளுமே குடும்பத் தேவைக்குப் போதுமானதாக இருந்தது.

அசலூர்க் கோயில்களுக்குத் தரப்படும் காக்கப்பொன்னுக்கு பொதிகளுக்கேற்றபடி அவர்களாகவே பணம் கொடுப்பார்கள். இவ்வளவு என்று சொல்லிக் கேட்டுவாங்கும் பழக்கம் காக்காப்பொன் குடும்பத்தாரிடம் இருந்ததேயில்லை.

மாலகோயில் எனப்படுகிற ஆலாமரத்தூர் ஆலகொண்டமால் திருக்கோயில் சாமிக்குப் படைக்கப்படும் உருபொம்மைகள், சிறுவயதுக் குழந்தைகள் விளையாடக் கொடுக்கும் பிள்ளைப்பொம்மைகள் போன்றவற்றுக்குத் தேவையான இடைவெட்டு அல்லது நசுவல் இரகக் காக்காப்பொன்னை, அத்தகைய பொம்மைகள் செய்பவர்களுக்கு மொத்தமாகக் கொடுத்துவிடுவார்கள். பொம்மைகள் செய்யும் பையான், சிக்கான் முதலான கைவினைப் பொருட்கள் செய்யும் உள்ளூர்வாசிகள், பொம்மைகள் விற்றதைப் பொறுத்து அவ்வப்போது பணம் கொடுப்பார்கள். இப்படிக் கிடைக்கிற பணத்தில் குடும்பத்துக்கு வேண்டிய துணிமணிகள், நகைநட்டு போன்றவற்றை வாங்கிக் கொள்வார்கள்.

காக்காப்பொன்னான் அவர்களுடைய வீடிருக்கும் வளவுக்கு அடிக்கடி அசலூர்க்காரர்களும் வந்து போவார்கள். வந்து போகிறவர்கள், காக்காப்பொன்னுக்காக மட்டுமே வந்து போவதில்லை. காக்காப்பொன் எங்கெல்லாம் விளைகிறதோ, கிடைக்கிறதோ அந்தபூமியெல்லாம் நல்ல சுவையான தண்ணீர் ஊறுகிற பூமியென்பதால், அத்தகைய பகுதிகளில் ஏதாவது பூமி விலைக்கு வருகிறதாயெனக் கேட்டறிந்து கொள்ள வருபவர்களும் உண்டு. மேலும் காக்காப்பொன் நல்ல கருங்கற்களில் மட்டுமே கிடைக்கிற கனிமப்பொருளாகும். வீடு கட்ட, பெரிய பெரிய கட்டிடங்கள் கட்ட விழைவோர், கோயில் கட்ட விழைவோரெல்லாம் கருங்கற்கள் கிடைக்குமிடத்தை அறிந்து கொள்ளவும், கிணற்று வேலைகள் நடக்குமிடமறிந்து தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள விரும்பும் கொத்துக்காரர்கள், தச்சர்கள், வணிகர்கள் போன்றோரும் காக்காப்பொன்னான் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருப்பார்கள்.

”டே கனகூ, டே கனகூ… இதென்ன இவனை இங்க காணமாட்ட இருக்குதூ?”, கனகு எனப்படுகிற கனகராசுவைத் தேடிக் கொண்டே வீட்டைச் சுற்றி வந்தாள் காக்காப்பொன்னனின் மனைவி பழனா.

எங்கும் அவனைக் காணோம். தெருமுனையில் சைக்கிள் கடை வைத்திருக்கும் அணிக்கடவு மாரியின் கடைக்குப் போனாள் பழனா.

“ஏனுங் தம்பீ? எங்க கனகு இங்கெங்னாச்சீமு வந்தானுங்ளா? அவங்கப்பன் கோயல்லயே இருந்துட்டாரு இராத்திரி. வெடிஞ்சு எந்திரிச்சுமு வர்ல. இவங்கிட்ட புட்டும் சட்னியுமு குடுத்தனுப்போணும். எங்க போனானுன்னு தெரீலிங் தம்பீ!”

“அக்கா, நீங் ஊட்டுக்குப் போங்க. எங்க சின்னவனை உட்டுத் தொழாவச்சொல்றன்”

விசயம் வேறொன்றுமில்லை. நேற்று வாளவாடி நாயக்கர் தோட்டத்து கிணற்று மேட்டுக்கு அவனுடைய அம்மா பழனாவோடு காக்காப்பொன் அரிக்கப் போனவனுக்கு என்றுமில்லாதபடிக்கு இரண்டு செம்பொன்நிற காக்காப்பொன் சில்லுகள் கிடைத்திருந்தன. செம்பொன் கிடைப்பது அரிதினும் அரிது.. பொதுவாக வெள்ளிப்பொன்தான் கிடைக்கும். அதில் ஏககுசியாகியிருக்கிறான் கனகு.

கனகுவின் சித்தப்பா ஃபிட்டர் நடராசன் சொன்னதன்படி பார்த்தால், வெள்ளைக்காரன் காலத்தில் தோண்டப்பட்ட ஊர்க்கிணற்றின் கல்லில்தான் கடைசியாகச் செம்பொன்ச் சில்லுகள் கிடைத்ததாம். அதற்கு அடுத்ததாக, காமராசர் காலத்தில் வடக்கே அரசூர் மேட்டில் தோண்டப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்கால் மேட்டில் கருநீலப்பொன் வெகுவாகக் கிடைத்ததாம். இவற்றுக்குப் பிறகு, இப்போதுதான் இந்த இரண்டு செம்பொன் கிடைத்திருப்பதாகவும், இவற்றை குடும்பத்தின் அடுத்த காக்காப்பொன்னான் ஆகப் போகும் நீயே வைத்துக் கொள்ளலாமெனவும் அவனுடைய சித்தப்பா சொன்னதை நினைத்துப் பரவசமானவன் இராவெல்லாம் தூங்கவேயில்லை. அம்மாவுக்குத் தெரியவந்தால், அப்பாவிடம் சொல்வாள்; இவையிரண்டும் தனக்கில்லாமற் போய்விடுமென்கிற பதற்றம் வேறு.

எப்போதும் காப்பி கேட்டு நச்சரிப்பவன், இன்று, எழுந்ததும் கிளம்பிப் போய்விட்டான். போகிற வழியெங்கும், சட்டைப்பையில் இருந்து எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டான்.

துரைசாமி வாத்தியார் வீட்டுக்குப் போனான். இரகுபதி வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தான்.

“இரகு, போலாமாடா?”

“என்ன இன்னிக்கு இங்க வந்திருக்கே? ஒஞ்சோட்டாலி சுந்தரம் இல்லியா??”

“இல்ல, உங்கிட்ட ஒரு முக்கியமான விசியம் சொல்லோணும்”

“இரு வர்றன்”

இரகு உள்ளே போனான். காப்பி டம்ளரை வீசியெறிந்து கொண்டே இரைந்தான், “அம்மா, எனக்கு அவசரமா வெளிக்கு வருது. நான் போகோணும்”.

வெளியே வந்தான். “டே கனகு, வாடா போலாம்”.

காப்பி குடித்ததற்கு மெய்யாலுமே குடலெல்லாம் இளக்கம் கண்டு அவனுக்கு வயிற்றுக் குடல்களெல்லாம் வெளித்தள்ளிக் கொண்டிருந்தன.

“கனகு, நீ மொல்ல வா, நான் போறன்”, ஓடினான் இரகு.

குட்டைக்குப் போகுமுட்டும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. செட்டுக்கார நாராயணன் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் குட்டிச்சுவருக்குள் இலாகி, அங்கிருந்த கற்றாழைக்குப் பின்னால் பம்மிவிட்டான்.

வீதியிலேயே நின்று கொண்டு பேசினான் கனகு, “இரகு, நீ இங்கியாடா இருக்கே?”

“ஆமாடா, என்னால பொறுக்க முடீல. அவசரமா வந்துருச்சுறா”

“செரி, நீ ஆர்கிட்டவும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாச் சொல்றன்”

“இர்றா வர்றான், வந்து பேசிக்கலாம்”

புதர் மண்டியிருந்தது. அதற்குள் இருந்த கற்றாழைத்தண்டு நெடுநெடுவென ஓங்கியிருந்தது. கதிரவனின் இளவெயிலுக்கு புதுமலர் போல வெண்மலரொன்று கற்றாழைத் தண்டின் நுனியில் பூத்துக் கொண்டிருந்தது. இவன் அதை உயரே பார்த்தான். நீலவானம். இளம்பச்சைநிறத் தண்டு, அதன் நுனியில் பால்வண்ண மலர். இரசித்தான்.

வெடுக்கென கண்களை மலர்க்காட்சியினின்று பறித்துக் கொண்டவன், பரபரத்துக் கொண்டே சட்டைப்பையில் கையை விட்டான். இரண்டு செதில்களும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்குமிடையே ஒட்டிக்கொண்டு வந்தன. ஒன்றோடு ஒட்டி, ஒருசெதில் போலக் காட்சியளித்தது. “அப்ப, உன்னொன்னு தொலைஞ்சி போயிருச்சா?”, பதற்றம் கொண்டான். அதையப்படியே எடுத்து விரித்த உள்ளங்கையில் வைத்தான். இரண்டாகப் பிரிந்து தவழ்ந்தன இரு செதில்களும். உள்ளம் உவகையால் பொங்கி வந்தது.

“அதென்றா கனகு? அப்பிடிப் பாக்குற??” கால்சட்டைப் பட்டைகளைப் பூட்டாமல், அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டே கிட்ட வந்தான் இரகு.

கிட்ட வருவானென எதிர்பார்க்கவில்லை. காற்றிலிருந்து கையைப் பிடுங்கிக் கொண்டே இறுக மூடிக்கொண்டான்.

“ஆருகிட்டவும் சொல்லமாட்டேன்னு சத்தியம்பண்ணு. நான் சொல்றன்”

”மாரியாத்தா மேல சத்தியமாடா. நான் ஆருகிட்டயும் சொல்ல மாட்டன். சொல்றா, அதென்றா?”

“செம்பொன்றா, நேத்துதா எனக்குக் கிடைச்சது!”

“அப்பிடின்னா?”

கையை விரித்து, வெளிச்சம் படும்படியாக கிழக்குப் பார்த்து நீட்டினான். காலைக்கதிரவனின் மஞ்சளொளிக்கு இன்னும் இன்னும் அது ஒருபடி மேலே போய் பொன்னாய் ஒளிர்ந்தன இரண்டும்.

“கனகு, இதென்றா மழக்காய்தமாட்ட மின்னுது?”

“செரியான மண்ணுடா நீயி. மழக்காய்தம் அல்றா, இது செம்பொன்றா”

“டே எனக்கொன்னு குட்றா”

“ஒன்னும் கவலப்படாத. நான் இத ரெண்டயும் தமிழ்புக்குக்குள்ளார வெச்சிருவன். குட்டி போட்டதும் குடுக்குறஞ் செரியா? ஆனா, நீ ஆருகிட்டவும் மூச்சுடக் கூடாதுறா. எங்கப்பனுக்குத் தெரிஞ்சுச்சூ.. அவ்ளோதான்”

கால்களின் நடுவே ஒரு குச்சியை வைத்து நிலத்தை உழுதபடிக்கு, ‘டுர்ர்ர்ர்ர்ர்”ரென்று ஓசையெழுப்பிக் கொண்டே பைக் ஓட்டிவாறு வந்தான் சைக்கிள்க்கடை மாரியின் மகன் தங்கவேலு.

“ங்கொக்காலோலி., உன்னிய எங்கெல்லாந் தேடுறது? உங்கம்மா உன்னியத் தேடிகிட்டு இருக்குதாம். எங்கப்பன் உன்னியக் கையோட கூட்டியாறச் சொல்லுச்சு”

மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான். சட்டைப்பைக்குள்தான் அவை இருந்தன.

அம்மா கொடுத்த தூக்குப் போசியைக் கொண்டு போய் கோயில் மடப்பள்ளியில் வைத்துவிட்டு, தன் அப்பனைப் பார்க்காமலே வீட்டுக்கு வந்துவிட்டான். வந்தவன் துரிதகதியில் குளித்துவிட்டு, இட்லி ரெண்டை உள்ளேதள்ளியும் தள்ளாமலும் தின்று கைகழுவி, பைக்கட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினான்.

இறைவழிபாட்டுக் கூட்டம் முடிந்து எல்லாரும் அவரவர் வகுப்புக்கு வரிசையாகச் சென்றமர்ந்தனர். தமிழ்ப்புத்தகத்தில் கைமாற்றி வைத்தான் கனகு. இடப்பக்கம் அமர்ந்திருந்த இரகு, அவற்றைப் பற்றி அடியோடு மறந்து போயிருந்தான். இவன் மீண்டும் புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். தோராயமாகப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினான். கண்களுக்கு அவை தென்படவில்லை. வாத்தியார் பாடம் நடத்துவதைக் கவனிக்காமல், புத்தகத்தில் கண்வைத்தபடி கிடைகொள்ளாமல் தவித்தான். அவைதான் கண்களுக்குத் தென்படமாட்டேன் என்கிறதே? தரையில் வைத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டு போனான். எழுபதாம் பக்கத்திலிருந்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடலோடு பாடலாய் ஒட்டிக் கொண்டிருந்தன.

மத்தியான சப்பாட்டு பெல் அடித்தது. எல்லாரும் எழுந்து வெளியே போனார்கள். அடுத்த வகுப்புப் பையன்கள் வந்து கடனாக சில காக்காப்பொன் தரமுடியுமாவெனக் கேட்டார்கள். பொதுவான நாட்களில், சாதா காக்காப்பொன் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்வார்கள். சீனிப்புளியங்காய், இலந்தவடை, பொன்வண்டு, பனையோலைக் காற்றாடி போன்றவற்றுக்கு ஈடாகச் சிலபல காக்காப்பொன்கள் பரிமாறிக் கொள்வார்கள். இன்றைக்கு அதைப்பற்றியெல்லாம் கனகுவுக்கு நாட்டமில்லை. ஞாபகம் வரவே, தன் வகுப்பை நோக்கி ஓடினான்.

துரையான் வகுப்பிலிருந்து வந்து கொண்டிருந்தான்.

“கனகு, இரகு எங்கடா?”

“அவன் ஊட்டுக்குப் போய்ட்டு இருக்குறான்”, சொல்லிக் கொண்டே வகுப்புக்குள் ஓடினான்.

பையைத் திறந்து எழுபதாம் பக்கத்துக்குப் போனான். அங்கு அவை இல்லை. மீண்டும் பக்கம் பக்கமாகப் புரட்டினான். கிடைக்கவேயில்லை. புத்தகத்தின் அடிப்பக்கத்தைப் பிடித்தப்படி, எல்லாப்பக்கங்களும் பிரிந்தாடும்படி உதறினான். மயிலிறகின் ஒரே ஒரு பிசிறுமட்டும்தான் காற்றில் அசைந்தாடிக் கீழே விழுந்தது. பைக்கட்டை எடுத்துக் கொண்டு ஓடினான்.

“கனகு, ஏன்டா அழற? என்னாச்சி?? சாப்புடுறதுக்கு வரலையா??”, எதிர்ப்பட்ட சத்துணவு ஆயா மேரியக்கா கேட்டாள்.

பதிலேதும் சொல்லாமல், தன் சித்தப்பாவின் இருப்பிடம் நோக்கி ஓடினான். வீட்டுக்குப் பின்புறம்தான் காயில் கட்டிக் கொண்டிருப்பார் சித்தப்பா. ஆனால் அங்கு அவர் இல்லை. புற்றுச்சாளைக்கு ஓடினான்.

“ஏன்டா தங்கம்? அம்மா எதனாச்சும் அடிச்சுப் போட்டாளா?”, அழுதுகொண்டு வருபவனைப் பார்த்துக் கேட்டார் ஃபிட்டர் நடராசன்.

“சித்தப்பா, செம்பொன் ரெண்டையும் துரையான் திருடீட்டான்”, தேம்பித் தேம்பி அழுதான்.

உரக்கடையை நோக்கிப் போனார்கள் இரண்டு பேரும். மத்தியான நேரமென்பதால் கடையில் யாருமில்லை. ஆறுச்சாமி மட்டும்தான் இருந்தார்.

“ஏனுங், கனகானோட காக்காப்பொன்னுக நம்ம தம்பிகட்ட இருக்குதுங்ளாமா. பையன் சாப்டாமக் கொள்ளாம அழுதிட்டு இருக்கான். சின்னப் பசங்க. கோளாறாப் பேசிக் கொஞ்சம் வாங்கிக் குடுத்தீங்னாப் பரவாயில்ல”

“என்ன காக்காப்பொன்னு? கடையில வந்து பேசற நாயமா இதெல்லாம்? இரு, கூப்புடுறன்”

அப்பாவின் குரல் கேட்டுத் தயங்கி தயங்கி வந்தான் துரை. வந்தவன் அவனாகவே சொன்னான், “அப்பா, அவனோட காக்காப்பொன் எங்கிட்ட இல்லப்பா”.

”சித்தப்பா, இவந்தான் திருடீட்டான். வகுப்புக்குள்ள இருந்து இவந்தான் வந்துட்டு இருந்தான்”

உரக்கடை தங்கவேலுக்கு கோபம் வந்துவிட்டது. மகனை விரட்டினார், ”நீ உள்ள போடா”

“ஏனுங்? தம்பி வேணுமின்னா ஒன்னை வெச்சிகிடட்டு. ஒன்னுமுட்டுமாவது வாங்கிக் குடுங். புள்ள அழுது பாருங்”

“என்னத்தறா வாங்கித் தர்றது? எங்ககிட்டவே படியளப்பு வாங்கித் தின்னுகிட்டு கல்லுகளைப் பொறுக்குற நாயிக. திருட்டுப்பட்டமாடா கட்டுறீங்க? அதும் கடை முன்னாடி வந்து நின்னுட்டு??”

அமைதியாக இருந்த நடசாரன் சொன்னார், “ஏனுங், நீங்க பேசுறது சரியில்லீங். அதுங்கொழந்தைதா. இதுங்கொழந்தைதா. ஆளுக்கொன்னு வெச்சிகிடட்டும்னுதான நான் சொன்னன்?”

“என்ன மயிருக்கு நீ கடைமுன்னாடி வந்து நின்ன? எதுன்னாலும் வீட்டுக்குப் பின்னாடிதான வந்திருக்கோணும்? எல்லாம் அந்த துரைசாமி வாத்தியார் குடுக்குற எடம்டா. இந்த அளவுக்கு வந்து நிக்குது. அண்ணன், தம்பி ரெண்டு பேரும் வீட்ல இருந்திட்டு, வாத்தியாருக்கு உட்டுப் பொழைக்கிற உங்களுக்கு இவ்ளோதூரம் வந்துருச்சுறா”

நடராசன் உறுமினார், “யோவ், இனி ஒரு பேச்சுப் பேசுன. பல்லைத்தட்டிக் கையில குடுத்துருவன். என்னய்யா பேச்சுப் பேசுற?”

ஊர் கூடிவிட்டது. எங்கிருந்தோ காக்காப்பொன்னான் வந்து சேர்ந்தார். அண்ணன் கூட்டத்துக்குள் வந்து சேர்வதைப் பார்த்த நடராசன், அழுதுகொண்டு நிற்கும் கனகுவைத் தூக்கிக் கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

நடராசன் வெளியேறுவதைப் பார்த்த உரக்கடை தங்கவேலு மேலும் ஆக்ரோசமாய்ப் பேசினார். தன்னுடைய பங்காளியான துரைசாமி வாத்தியார் சொல்லித்தான் இவர்கள் கடையேறி வந்திருப்பதாய்க் கூச்சலிட்டார். பழனாவை துரைசாமி வாத்தியாருக்குக் கூட்டிக் கொடுத்துக் காசு பார்ப்பதாயும் முழங்கினார்.

காக்காப்பொன்னான் அழுதார். துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஊர்க்கவுண்டர் வீட்டுக்குப் போனார்.

காக்காப்பொன் விற்றுக் கிடைக்கும் சில்லறை வருமானங்கள், கோவில்த்தட்டில் போடக்கிடைக்கும் காசுகள் எல்லாவற்றையும் பழனாள்தான் கையாண்டு வருகிறாள். அவ்வப்போது துரைசாமி வாத்தியாரிடமோ, அவருடைய மனைவியிடமோ கொடுத்து விடுவாள். அவர்கள் அதைத் தொகையானபின், தபாலாபீசில் போடுவார்கள். அல்லது பழனாளிடமே கொடுத்துவிடுவார்கள். அந்தப் பணத்துக்கு எவர்சில்வர் அண்டா, குண்டா போன்றவற்றை நெகமம் சந்தைக்குப் போகும் போது வாங்கிக் கொள்வாள்:. துரைசாமி வாத்தியாரின் அம்மா கிடைமனுசி. தனக்கு சாவகாசமான நேரத்தில், அந்த அம்மாவுக்கு குளிப்பாட்டவும் அன்றாடம் சென்று வருவாள். அவர்கள் அதற்கு ஈடாக அவ்வப்போது பணம் அஞ்சு பத்து கொடுப்பார்கள்.

பாப்பாங்காட்டு சின்னவக்கீல்க் கவுண்டரும் ஊர்க்கவுண்டரும் காதுகுத்து நிகழ்வைப் பற்றியும் வரப்போகும் ஒறம்பரைகளைப் பற்றியும் அளவளாவிக் கொண்டிருந்தனர். காக்காப்பொன்னர் வாசலிலேயே சற்றுநேரம் நின்று கொண்டிருந்தார்.

பேச்சை நிறுத்திவிட்டுச் செருமினார் ஊர்க்கவுண்டர், “என்ன எல்லாம் செரி பண்ணிப் போட்டியா? கோயலைச் சுத்தீலும் செதுக்கியுட்ருக்குதான??”

“அதெல்லாம் செரி பண்ணியாச்சுங்… இந்த ஒரக்கடைக்கார்ரு எம்பொண்டாட்டியப் பத்தி தப்பும்தவறுதுலுமா பேசிக் கூட்டத்தை கூட்டுறாருங். எனக்கு மனசு பொறுக்க மாட்டீங்திங். கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்டாப் பரவால்லீங்”

”அட காக்காப்பொன்னா, எந்த நேரத்துல என்ன பழம பேசுற? போ, நாளைக்கு விசேசத்தை வெச்சிகிட்டு? உம்பொண்டாட்டிகிட்டப் பேசுனயா நீயி?”, ஆற்றுப்படுத்தினார் ஊர்க்கவுண்டர்.

“இல்லீங், நான் கோயல்ல இருந்து நேரா வர்றனுங்”

“அப்பப் போயி மொதல்ல உம் பொண்டாட்டிகிட்டப் பேசு போ”, அனுப்பி வைத்தார் ஊர்க்கவுண்டர்.

பழனாவுக்குக் கோபம். முந்தின நாள் மதியம் சென்ற காக்காப்பொன்னான் மறுநாள் பிற்பகலில்தான் வீட்டுக்கு வருகிறார்.

“ஏ பழனா? நீ, அன்னாடும் தொரசாமி வாத்தியார் ஊட்டுக்குப் போறயாமா? அவர்கோடயேதா இருக்கியாமா?? என்ன சங்கதீன்னேன்??”, இரைந்தார் காக்காப்பொன்னான்.

“இதென்ன இன்னிக்குப் புதுசா கேட்டுகிட்டு? ஆமா, இன்னிக்குக் காலையிலகோடத்தான் போயிப் பாத்துப் போட்டு வந்தன். இப்ப அதுக்கென்ன??”

“அப்ப, ஊருக்குள்ள, ஒரக்கடைக்காரரு சொல்றதெல்லாம் நெசந்தானா?”

“என்ன நெசந்தானா? ஊட்டுல அண்ணன் தம்பி ரெண்டு பேரு இருக்கீங்க? என்ன பிரயோசனம்?? அதான் நான் அவுக ஊட்டுக்குப் போறன், வர்றன்”

காக்காப்பொன் சிராய்க்கும் உளி முன்னாலேயே கிடந்தது. எடுத்தார் காக்காப்பொன்னான்.

சரிந்து விழுந்தவளின் வலதுகை தன் மகனைத் துழாவியது. கனகு, கனகு எனும் முனகல் காற்றோடு கரைந்து போனது.

சராங்கமாய்க் கோவிலுக்குப் போனார். கோயிலுக்குப் பின்னாலேயே கிடைக்கிற அரளிவிதைகளோடும், உச்சிபூசைக்குப் புழங்கியதில் மிச்சமிருந்த பாலோடும் கலந்து போனார் காக்காப்பொன்னான்.

கோயிலடிக்கோ, காக்காப்பொன்னான் வீட்டடிக்கோ யாருமே வரவில்லை. ஊர்க்கவுண்டர் மட்டும் தன் பண்ணையத்து ஆட்கள் நான்கு பேரை அனுப்பியிருந்தார். சாய்ங்காலம் நேரம் இருட்டி வந்தது. யாரும் வாசற்தெளிக்கவில்லை. கலகலப்பாய் இருக்கும் பெரியகருப்பன் டீக்கடை பேசாமலிருந்தது. அரக்கன் இட்டேரியிலிருந்த சாயமரத்திசையிலிருந்து ஆந்தையொன்று அலறும் சத்தத்தில், இந்நேரமும் மசங்கியிருந்த கம்மிய மேகமொன்று நகரத்துவங்கியது. இருந்தாலும் இருட்டுத்தான்.

கோவில், வீடு, புற்றுச்சாளை என எல்லா இடங்களிலுமிருந்த காக்காப்பொன் பொதிகளைக் கொண்டுவந்து மேலே பிரித்துக் கொட்டினார் சித்தப்பா. தீநாக்குகள் ஆளுயரத்துக்கும் மேலாக எழும்பின.

கனகுவைத் தூக்கிக் கட்டியணைத்துச் சொல்லியபடியே வெளியேறினார், “ஊரு, உலகம், சாமி, சனம் எல்லாரும் நம்ம காக்காப்பொன்னுல அலங்காரம் பண்ணிகிட்டாங்க. இப்பப் பாரு, எல்லாம் பத்தியெரியுது!!”

நன்றி: இலக்கியவேல்

No comments: