8/08/2013

பூத்துக் கிடக்கு

அந்த வீட்டுக்காரனுக்கும் இந்த வீட்டுக்காரனுக்கும் வாய்க்காவரப்பு. பஞ்சாயத்து. அக்கப்போரு. நீங்க நினைக்கிறாப் போல பொம்பளை விவகாரம் அல்ல. ஆனால் அதைப் போன்ற ஒரு அத்துமீறல்தான் தகராறுக்குக் காரணம். ஆமாம். இப்ப நீங்க நினைக்கிறது சரிதான். இவங்க வீட்டு வேம்பு மரத்தின் இரண்டு கிளைகள் அவங்க வீட்டு எறவாரத்தின் மேல் நீட்டிக் கொண்டு வளர்வதுதான் காரணம். 

அ+அவசியமாக, அதாவது அனாவசியமாகத் தன் வீட்டுப் பெண்களின் ஒழுக்கம், நடத்தையெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுவதை விரும்பாத ஜெகநாதன், தன் வீட்டு வேம்பினை அடியோடு வெட்டிவிடுவதான முடிவுக்கு வந்து விட்டான். அந்த இரயில்வேப் பாதை மருங்கில் இருக்கும் குடியிருப்புக்குச் சென்று மரம் வெட்டுவதற்கு 1200 ரூபாய் வெட்டுதொகையும் பேசி, மாறன், சுகுமார், இரண்டு வெட்டாட்களும் வந்து ஆயிற்று வீட்டுக்கு.

இந்த இருவரில் சுகுமார் என்பவன் ஒரு தண்ணிவண்டிதான் என்றாலும், அவன் ஒரு படைப்பாளி. எழுத்துகளை வாசிப்பதும், எழுதுவதுமாக இருப்பதின் நிமித்தம் சிரைக்கப்படாத தாடி மீசையுடன் தான்தோன்றித்தனமான வாழ்க்கையைத் தனதாக்கிக் கொண்டிருந்தான். வேம்பு மரத்தில் இருக்கும் எதோவொரு நான்கு வாதுகளை மட்டும் வெட்டிவிட்டு, இன்றைக்கு இது போதும் என நிறுத்திக் கொண்டான். ஜெகநாதனுக்கு இந்தத் தாடிக்காரனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் போல இருக்கிறது. ஏனென்றால் பேசுகிற பேச்சு அப்படி. தொழிலாளர் ஒற்றுமை, மேட்டிமை, அதிகாரவர்க்கம், முதலாளித்துவம் முதலானவற்றை யாரோ கக்க, அவற்றை நக்கி நக்கிப் பழக்கப்பட்டவன் மாறன். சும்மா இருப்பானா? சுகுமாரன் சொன்னது சொன்னதுதான் என்று உறுதிமொழி எடுத்தான்.

அண்டை வீட்டுக்காரனைச் சமாளிப்பது எப்படியெனும் தலைவலி இடித்தது ஜெகநாதனுக்கு. நானே சென்று பரிகாரம் வைத்து விட்டு வருகிறேனென்று சொன்னான் சுகுமாரன். அதன்படியே அண்டைவீட்டு வையாபுரியிடம் சென்று சொன்னான்.

“சார், நாந்தான் மரவெட்ட வந்தேன். உள்வாது நாலு வெட்டியுட்ருக்கேன் சார். மத்த வாதுகளை இன்னும் பத்து நாள் கழிச்சி நானே வந்து அரக்கியுட்டுர்றேன் சார். இதுல உங்களுக்கொன்னும் சங்கட்டம் இல்லீங்களே? ஏன்னாப் பாருங்க, மரம் பூராவும் பூச்சி, புழுவுக, குருவி, குஞ்சுகன்னு நாலும் பூத்துக் கிடக்கு சார். வெட்டியுட்டதைப் பார்த்ததும் அதுக வேற எடம் குடிபோகக் கொஞ்சம் அவகாசம் குடுத்துப் பார்க்கலாம் சார்!!”

”தம்பி, நான் மரத்தை வெட்டவே சொல்லலியே? நானும் புள்ளை குட்டிக்காரந்தான். அது பாட்டுக்கு அது இருந்திட்டுப் போகட்டும். நீங்க போங்க. நானே ஜெகநாதங்கிட்டப் பேசிக்கிறன்!”

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை......

நிலாமகள் said...

மனிதர்கள்... மிச்சமிருக்கும் மனிதத் தன்மை... நம்பிக்கை துளிர்ப்புக்கு சந்தோசம்.