6/21/2024

எழுதுதல்

நண்பர் கார்த்திகைப் பாண்டியனின் நேர்காணல் கண்டேன். பொதுப்புத்தியின் மறுபக்கத்தைத் துல்லியமாகச் சொல்லியிருக்கின்றார். உடனடிக் கவனயீர்ப்புக்கும் விழுமியநிலைத்தன்மைக்குமான இழுபறியாகத்தான் இவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது. https://youtu.be/yeSxM10NanA?si=ml_nabY-krfKlmVN

ஒரு கூட்டத்திற்கான விளம்பரநறுக்கினைக் கண்டேன். கூட்டத்தின் கருப்பொருள், எழுத்துப்பிழை சவால்கள் என்பதைக் கண்டதும் ஆர்வம் பற்றிக் கொண்டது. அந்த நறுக்கிலேவும் பிழைகள் பல இருக்கக் கண்டேன். சுட்டியதும் நண்பர் சொன்னார், நீங்கள் ஏன் அவருடன் சேர்ந்து பணியாற்றக் கூடாதென? அவசியம் தொடர்பு கொள்கின்றேனெனப் பதிலுரைத்தோம்.

மீண்டும் எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் சொல்லியதிலிருந்து, “குறைவாக எழுதினாலும் நன்றாக எழுத வேண்டும்”. ஏன்?

தமிழ்க்கணிமையில் சவால்கள் நிறைய உள்ளன. கணிமைத்துவத்தின் அடிப்படையே சீர்மைதாம்(standard and consistency). எழுதுகிறேன், வாசிப்பவர்கள் சரியாகவே புரிந்து கொள்கின்றனர். உனக்கு என்ன பிரச்சினை எனக் கொதிக்கின்றனர். பொறுமையாகத்தான் எதிர்கொண்டாக வேண்டும்.

ஒரு பத்தி எழுதுகின்றீர்கள். அதனைத் தானியக்கமாக, ஒலிப்புத்தகம், செயற்கைநுண்ணறிவுப்புலத்துக்கான உட்கிடை, காணொலி, பதாகை முதலான பல உருக்களாக, ஒலிப்புச்சிதைவு, பொருட்சிதைவு, பொருள்மயக்கம் ஏற்படாதவாறு இடம் பெறுகின்றதா நம் எழுத்து? பெரும்பாலான எழுத்துகள் அப்படி அமைவதில்லை. வியந்தோதலின் பொருட்டு மிகைப்படுத்தி எழுதுகின்றோம். உண்மை பல்லிளித்து விடுகின்றது. கணிமைத்துவம் தோற்றுவிடுகின்றது.


Write elaborate content
Use consistent terms
Use of pronouns
Inclusive language
Use of “It” pronoun
Article labels – New, updated, deprecated
Structured format
Crafting the perfect SEO-driven prompt
Keyword optimization beyond the basics

இவையெல்லாம் எளிய எழுத்தின் முகாந்திரங்கள். தானியக்கப் புலங்களுக்குத் தோதான வரையறைகள். இவற்றைக் கடைபிடித்தால்தான் அந்த எழுத்து முழுமை பெறும். அண்மையில் தேர்தல் ஒன்றுக்காகப் பணியாற்றி இருந்தோம்(www.united4fetna.com). நவீன நுட்பப் புலங்கள் செம்மையாகவே பயனீட்டைக் கொடுக்கின்றன, எழுத்து எழுத்தாக இருக்கும் நிலையில்.

மீண்டும் கார்த்திகைப் பாண்டியன் அவர்களது கருத்தைத்தான் இரவல் பெற வேண்டியதாக உள்ளது. வெறும் பிடிஎஃப் கலாச்சாரமாகி விட்டது நம் எழுத்துக்களம். தேடுபொறிக்குக் கூட அவை அகப்படுவதில்லை. தேடலுக்கும் நாடலுக்கும் இடமில்லாவுலகில் இலக்கியமோ ஆவணமயமாக்கமோ அவை தோற்றே போகும்.

-பழமைபேசி.

No comments: