9/15/2024
ஃபெட்னா - பொருளாளர் பொறுப்பு
பரப்புரையின் போது, பொருளாளர் பொறுப்புக்குப் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் குறித்து உண்மைக்குப் புறம்பான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கனடியவாசி ஒருவரால் அமெரிக்காவில் இருக்கும் அமைப்பின் பொருளாளராகத் தொடர்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதென. இப்படிச் சொல்வதில் இருவேறு அநியாயங்கள் உள்ளன.
முதலாவது, அமைப்பின் சட்டக்கோப்பில் போட்டியிடுவதற்கான உரிமைகள் கொடுக்கப்பட்டும், போட்டியிடும் வேட்பாளரின் இருப்பிடம் கொண்டு ஒதுக்கிப் பார்த்து பாரபட்சம் காண்பிப்பது. அடுத்தது, உண்மைக்குப் புறம்பாக இட்டுக்கட்டி ஊழலுக்குத் துணை போவது. எப்படியெனப் பார்க்கலாம்.
இலாபநோக்கற்ற, வரிவிலக்குப் பெற்ற நிறுவனத்துக்கென சில ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும் வங்கிக் கணக்குத் துவக்கப்பட. நிறுவனத்தின் ஒன்றிய அரசுக்குறியீட்டு எண், முகவரி, சட்டக்கோப்பு, இயக்குநர்களால் அலுவலருக்கு அங்கீகாரமளிக்கப்பட்ட சான்று, அலுவலரின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் பொருட்டு இருவேறு அடையாளச்சான்றுகள், அவ்வளவுதான். https://donorbox.org/nonprofit-blog/nonprofit-banking. இதன் அடிப்படையில் உசபெக்கிஸ்தான், உகாண்டா என எங்கிருந்தும் அந்நாட்டுக்குடிமகரால் ஒரு நிறுவனத்தின் வங்கிக்கணக்குப் பராமரிப்பாளராகச் செயற்பட முடியும்.
தற்போதெல்லாம் இணையவழியில் பணப்பரிவர்த்தனை நிகழ்வதால், இணையவழிக் கணக்கு, அதற்கான காப்புஎண் பெறல் என்பதும் தேவையாக இருக்கின்றது. அதன்படிக்கு அவரவர் அலைபேசிக்கு கடவுச்சொல் அனுப்பப் பெற்று, உள்புகல் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. வெளிநாட்டு எண்ணாக இருந்தால், அமெரிக்க வங்கிகளுக்கு அலைபேசிக் கட்டணம் செலுத்த நேரிடும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும்போது. ஆகவே வங்கிகள் உள்ளூர் அலைபேசி எண்ணைக் கேட்கின்றன. இது இணையகாலம், உலகமயமான உலகம். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான கால்சென்ட்டர்கள் அமெரிக்க எண்களினூடாக என்பதெல்லாம் அறதப்பழைய விசியம். ஆமாம், உகாண்டா முகவரி கொடுத்து, உகாண்டாவிலிருந்து கொண்டேவும் அமெரிக்க அலைபேசி எண் பெறமுடியும். https://justcall.io/blog/how-to-get-us-phone-number.html
தேர்தல் முடிந்து விட்டது. வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று(~60%) ஒட்டுமொத்த அணியும் வெற்றி பெற்று, பொறுப்புமாற்றுப் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன.
அதிகாரவர்க்கத்தின், ஆதிக்கசக்திகளின் தீண்டல்கள் ஓய்ந்தபாடில்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கு மேல் தகவல்களாக ஏதாவது ஒன்றினை அரைகுறையாக முன்வைத்து, பொறுப்புமாற்றுப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகின்றன சில சக்திகள்.
முன்னெப்போதும் இல்லாதபடிக்கு 40 நாட்களுக்குள், பொருளாளருக்கான வங்கிக்கணக்குகள் முறையாக, புதிதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற கனடியக்குடிமகரும் பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றவருமான அலுவலர்வசம் வந்து சேர்ந்திருக்கின்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருந்தும், மக்களால் மக்களாட்சிக் கொள்கைப்படிக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களை இயங்கவிடாமற்செய்யும் இச்சக்திகளின் அடிப்படை என்ன? அதிகாரவெறி, புகழ்வெளிச்ச அடிமைத்தனம், கடந்தகாலத்தில் செய்யப்பட்ட ஊழல்கள் ஏதேனுமிருப்பின் அவை வெளிப்பட்டுவிடுமோயென்கின்ற அச்சவுணர்வு போன்றவையாகத்தான் இருக்க முடியும். எளியமக்கள் பொதுப்பணியாற்றக் கூடாதாயென்ன? அறத்துக்கு உறுதுணையாய் இருங்கள். அல்லாவிடில், நாளையோ, நாளைமறுநாளோ, பாதிக்கப்படப்போவது நீங்களாகவும் இருக்கலாம்.
-பழமைபேசி, செப் 15, 2024.
8/29/2024
கலை இலக்கியக் கூட்டம்
பிள்ளைகளுக்கு மாலை 7 - 9, வயலின் வகுப்பு. சார்லட்டில் கடுமையான, இலையுதிர்கால மாசுப்பொழிவு, அதன் காரணம் தும்மல் என நெருக்கடியில் இருந்தேன். இருப்பினும், இந்நிகழ்வைக் கண்டே ஆகவேண்டுமென்பதில் உறுதியாக இருந்து, பங்கெடுக்கும் வாய்ப்பும் அமைந்தது.
மரபிசையில் இளங்கலை, நிகழ்த்துகலையில் முதுகலை, மக்களிசையில் ஆய்வு செய்து முனைவர், இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியவர் எனப் பன்முகம் கொண்ட கலைமாமணி ஜெயமூர்த்தி அவர்களின் உரை கேட்பதில் ஆவல். நண்பர், தோழர், எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் ‘நவீன இலக்கியம்’ குறித்து என்னதான் சொல்லப் போகின்றாரெனும் எதிர்பார்ப்பு ஆகியன வீண் போகவில்லைதான்.
இருப்பினும் சற்று ஏமாற்றம். மக்களிசைப் பாடகரின் பேச்சு சட்டென முடிந்து விட்டது. ஆழ்ந்த உரைக்குள் அவர் சென்றிருக்கவேயில்லை. ஆனாலும் அவரின் குறுகிய நேரப் பேச்சு, பாடல், தென்றல் வருடிச் சென்றது போல இருந்தது.
எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் சொன்ன சந்தோஷ் ஏச்சிக்கானம் அவர்களின் பிரியாணி எனும் கதை, தொடர்ந்து இடம் பெற்ற உரையாடல் நன்றாக இருந்தது. எல்லாரும் எல்லாருடைய கருத்துகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் உரையாடல் இடம் பெற வேண்டும். அப்போதுதான் யோசிக்கத் தலைப்படுவோம்.
‘நவீன இலக்கியம்’ என்பதே ஆற்று நீரைப் போன்றதொரு சொல்லாடல்தாம். அதற்கென, நிலையான, ஓர் உரு, வண்ணம் போன்றவை கிடையாது. வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஒப்பீடாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான். தற்கால இலக்கியம் எனப் புரிந்து கொள்ளலாம். 2010இல் இருந்த தற்காலம் வேறு, 2024இல் இருக்கும் தற்காலம் வேறு. காலத்துக்கொப்ப, அந்தந்தக்காலத்தின் மதிப்பீடுகளை, கூறுகளை, பயனீடுகளை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள, அவ்வப்போதைய, சமகாலத்தியப் படைப்புகள் தேவையாக இருக்கின்றன என்பதான புரிதலை, மீண்டுமொருமுறை ஏற்படுத்திக் கொண்டாயிற்று.
தொகுத்தளித்த முனைவர் அருள்ஜோதி அவர்களுக்கும் பேரவைச் செயற்குழுவுக்கும் நன்றி. செயற்குழுவினர் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும். நன்றி.
https://www.youtube.com/live/TbGzMsw0smk?si=tDN5d-hqjrVSKa47
பழமைபேசி.
7/14/2024
கசடுகள் கழியும் கதைகளாலே!
சேன் ஆண்ட்டேனியோ பயணச்சீட்டுப் பெற்றதுமே நண்பர்களுக்குத் தெரியப்படுத்தியதும், நாமெல்லாம் சேர்ந்து ஒரு கூட்டம் போட வேண்டுமெனக் கூறினர். உடனே ஒருவர் சொன்னார், பொழுது சாய்ந்தவுடன் விடிய விடியக் கூட்டம்தானே என்றார். இஃகிஃகி. “அதில்லப்பா, ஒரு பேரலல் செஷன் போட்ணுமப்பா” என்றார் மற்றவர்.
சற்றுநேரத்துக்கெல்லாம் செய்தியோடு வந்தார் நண்பர், “எல்லாம் புக் ஆகிருச்சுப்பா, இருந்தாலும் பார்க்கிறம்னு சொல்லி இருக்காங்க”. மறந்து விட்டிருந்தோம். மீண்டும் பேச்சு. மீண்டும் கைவிடப்பட்ட நிலை.
ஊர் போய்ச் சேர்ந்ததும், நண்பர் விட்டாரில்லை. மேரியாட் வளாகத்திலயாவது போடலாமென்றார். மற்றொரு நண்பர், அங்கிருந்து இங்குவர வெகுதொலைவு நடந்து வர வேண்டும், அங்கேயே கேட்டுப் பார்க்கின்றேனென்றார்.
நண்பர் செளந்தர் மிகவும் ஆவலாய் இருந்தார். நானோ நடந்து நடந்து களைப்புற்றிருந்தேன். தலைப்பு கேட்டார். பலதும் நினைவுக்கு வந்தன. ஆனால், அதற்காக ஆயப்படுத்துவதற்கான கால அவகாசம் இருந்திருக்கவில்லை. ஆகவே, மூன்று ஆண்டுகட்கு முன்னம், கனெக்டிக்கெட் தமிழ்ச்சங்கத்தில் பேசிய அதே தலைப்பைக் கொடுத்து விட்டேன். அதுதான், “கசடுகள் கழியும் கதைகளாலே!”. நல்ல வரவேற்புக் கிடைத்தது.
7/11/2024
பெருங்கூடம்
7/10/2024
ஆவணப்படுத்தல்
ஆவணம் என்பதை அதன் பரந்த பொருளில் கொண்டால், அது ஒரு சமூகத்தில் வாழ்கின்ற தனி மனிதர்கள், குழுக்கள், அரசு போன்றவர்கள் உருவாக்கும் கடிதங்கள், குறிப்பேடுகள், கையேட்டுக் குறிப்புகள், சான்றிதழ்கள், உரிமைப்பத்திரங்கள் போன்றவற்றை உள்ளடக்கும். இன்றைய தேவையை முன்னிட்டுப் பாதுகாக்கப்படும் ஏடுகள், நாளைய தலைமுறைக்கு ஆவணமாக மாறும். எனவே, ஒவ்வொரு தனிமனிதரும் சமூகங்களும் இணைந்து ஆவணப்படுத்தலில் ஈடுபடுவது அவசியமென வலியுறுத்தப்படுகின்றது.
இயன்றவரை, எம்மால், ஆவணப்படுத்தலுக்குத் தொடர்ந்து பங்காற்றி வருகின்றேன். தமிழ்மொழியின் சொற்கள், வட்டாரவழக்கு, சொல்லாடல்கள், சொலவடைகள், தகவல் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். எடுத்துக்காட்டாக, சேவலின் வகைகளைப் படங்களோடு ஆவணப்படுத்தி இருக்கின்றேன். அதற்காக நான் கொண்ட உழைப்பு மிகப் பெரியது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்வுகள் குறித்து என்னைக் காட்டிலும் அதிகமாக நானறிந்து எவரும் எழுதியிருக்கவில்லை. பண்பாட்டின் ஒரு கூறு. அதைப்பற்றி எவராவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.
பேரவையின் துவக்ககாலத்திலிருந்து விழாக்களுக்கு வந்திருந்த விருந்திநர்கள், சிவாஜி, எம்.எஸ்.விஷ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா உள்ளிட்டோர் பட்டியல் இணையதளத்தில் ஓடுபடமாக ஓடிக் கொண்டே இருந்தன. அதேபோல முந்தைய விழாக்களின் போதான படங்களும். இவையெல்லாம் வரலாற்று ஆவணங்கள்.
அண்மையில் சேன் ஆண்டோனியோவில் நண்பர் ஒருவர் வினவினார், “எப்படி, 2010இலேயே, பின்னாளில் விஜய் மணிவேல் தலைவராக வருவாரெனத் தெரிந்து பேட்டி எடுத்தீர்களா?”. இல்லையென மறுமொழிந்தேன். சொன்னேன், ”நான் விஜய் அவர்களை மட்டும் பேட்டி எடுக்கவில்லை. பேரவைக்காக உழைத்துக் கொண்டிருந்த பலரையும் நேர்காணல் கொண்டு பதிந்தேன். அதில் விஜயும் ஒருவர்”. ஆவணப்படுத்தல் என்பது ஒரு தொடரியக்கம். அவ்வப்போது, அவ்வப்போதையவற்றைப் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாவிடில், வரலாறு, அடையாளங்கள் முதலானவற்றுக்கு ஊறு நேரும். எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு கல்வெட்டு, பத்துவரிகள் கிடைக்கின்றதென வைத்துக் கொள்வோம். ஒட்டுமொத்த வரலாற்றையே அது மாற்றியமைக்க வல்லது.
திருக்குறள், உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றோம். எப்படி? தன்னலம் பாராத ஆயிரமாயிரம் பேர் கொடுத்துச் சென்றிருக்கும் கொடையது. எப்படி? ஓலைச்சுவடிகளில் இருக்கின்றன. அவை நாட்பட நாட்பட நைந்து போகும். ஆகவே ஆங்காங்கே தன்னார்வலர்கள், புரவலர்கள் படியெடுப்பு விழா நடத்துவார்கள். அதாவது ஓர் ஓலையைப் பார்த்து மற்றோர் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு பதிப்பிக்க வேண்டும். அப்படியானவர்களுக்கு மொழியறிவும் எழுத்தறிவும் இருந்தாக வேண்டும். இப்படித் தலைமுறை தலைமுறையாக்த் தரவுகளைக் கடத்தி வந்ததினால்தான் நமக்கு வாய்த்திருக்கின்றது அது.
பழமை, இதை ஏன் இப்போது எழுதுகின்றாய் என்கின்றார்கள். ஏன் எழுதக்கூடாதெனத் திரும்பக் கேட்டேன். ’இல்லை, தேவையற்ற சஞ்சலங்கள்’, அப்படியிப்படியென இழுத்தனர். உண்மைக்குப் புறம்பாக இருந்தால் சுட்டலாம். மாற்றியமைக்கக் கடமைப்பட்டவன். ஆனால் எழுதக்கூடாதென எதிர்பார்ப்பது சரியன்று. எடுத்துக்காட்டாக, ‘அருவி’ எனும் பெயர் சூட்டியவர், பனிமலர், கோடைமலர், இளவேனில்மலர், இலையுதிமலர் என்றெல்லாம் பெயர் கொடுத்து, அச்சுக்குக் கொண்டு போவதெப்படியென்றெல்லாம் செதுக்கியசிற்பி நண்பர் சிவானந்தம். மைக்ரோசாஃப்ட் ப்ராஜக்டில் அதற்கென ஒரு டெம்ப்ளேட் வடிவமைத்து இப்படியிப்படியெல்லாமெனச் செயலாக்கம் செய்தவர் நண்பர் ப்ரிதிவ்ராஜ் சிவராஜ். நண்பர் எழில்வேந்தனும் நானும் வடிவமைத்து அச்சுக்கு அனுப்புவோம். இலக்கியம், சமூகம் சார்ந்த படைப்புகளே அதில் இடம் பிடித்தன. இந்தத் தகவலை நான் பதியாவிட்டால், எவரும் பதியப்போவதில்லை.
”பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!” -பாரதி
”We're living in an era of unprecedented change, and I want to be a part of documenting it”. -Ron Fournier பதிவதென்பது ஒரு தொடரியக்கம்., பொதுத்தொண்டு. பிழைகள் இருந்தால் சுட்டுங்கள். முடக்க நினைப்பது பத்தாம்பசலித்தனம்.
படம்: பேரவை விழாவில், திரு செந்தில் துரைசாமி அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டது. தம் பெற்றோர் மறைந்து விட்டனர். ஆனால் இந்தப் படம் இருக்கின்றதெனச் சொன்னார். நானும் சொல்லி இருந்திருக்க வேண்டும்; நான் பதிந்ததும் இருக்கின்றதென. https://maniyinpakkam.blogspot.com/2009/09/blog-post_28.html அதிலும், ஆவணப்படுத்துதலே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
-பழமைபேசி, 07/10/2024.
7/02/2024
நூற்றாண்டு விழாக்காணும் கலைஞர் மு.கருணாநிதி
தமிழ்நாட்டின் முதலமைச்சர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிப்புக்கலைஞர், இதழியலாளர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை எனும் ஊரில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் ஆகியோருக்கு 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பிறந்தவர். மாணவப் பருவத்திலேயே செயலாற்றல் மிகுந்து திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் எனும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் விளங்கினார். அதுவே பின்னாளில் மாநில அளவிலான அமைப்பாகவும் உருப்பெற்றது. இவ்வமைப்புக்கான இதழாக மாணவநேசன் எனும் இதழையும் தோற்றுவித்து நடத்தினார் அதன் தலைவர் கருணாநிதி அவர்கள். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், 1942ஆம் ஆண்டில் முரசொலி இதழையும் தோற்றுவித்து ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
இளம் வயதிலேயே தமிழ்த் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் கதை வசனம் எழுதுவதையும் மேற்கொண்டார். இராஜகுமாரி எனும் திரைப்படம்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுதிய முதற்திரைப்படம், வெளியான ஆண்டு 1947. அவர் கதை வசனம் எழுதி வெளியான முதல்நாடகம் ’பழநியப்பன்’ என்பதாகும்; வெளியான ஆண்டு 1944. இதற்குமுன்னர் உள்ளூரளவில் பல நாடகங்களில் நடித்தும், கதை வசனம் எழுதியும் இருக்கின்றார். ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’ என 21 நாடகங்களை எழுதியுள்ளார். அவர் கதை எழுதிய திரைப்படங்களுள், ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ முதலானவை வெற்றிப் படங்களாக அமைந்ததோடு, தமிழ்ச்சமூகத்தின் சீர்திருத்தப் பாதையில் பெரும் தாக்கத்தை உண்டு செய்தபடங்களாகவும் அமைந்தன.
’தூக்குமேடை’ நாடக விளம்பரத்தில் இடம்பெற்ற கருணாநிதி அவர்களை ‘அறிஞர் கருணாநிதி’ எனக் குறிப்பிட்டிருந்தார் சகநடிகரும் நாடகத் தயாரிப்பாளருமான எம்.ஆர்.இராதா அவர்கள். அறிஞர் என்றால், அது தலைவர் அண்ணாத்துரை ஒருவரேயென கருணாநிதி அவர்கள் மறுப்புரைத்துவிடவே, ‘கலைஞர்’ எனக் குறிப்பிட்டு அழைக்கப்படலானார். அன்றுமுதல் ‘கலைஞர்’ என்பதும் ‘கருணாநிதி’ என்பதும் ஒருசொல்போலவே நிலைத்துவிட்டன.
திரைப்படப்பாடல்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அவரால் எழுதப்படாத இலக்கிய வடிவங்களே இல்லையெனும் அளவிற்குப் படைப்புகளை, 178 நூல்களைக் கொடுத்திருக்கின்றார். அவற்றுள், ‘குறளோவியம்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகியன முதன்மையானதும் படைப்புலகில் எவரும் உடனே சொல்லக்கூடிய வகையிலும் புகழ்பெற்றனவாகும்.
தமிழர்கள், தமிழ்நாடு ஆகியவற்றுக்கான அடையாளங்களைக் கட்டமைத்ததில் தனியிடத்தைப் பெற்றவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். நாட்டுப்பண்ணுக்கு இணையாக தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டின் உணவுவழங்கல் நிறுவனத்துக்கு இணையாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சமயச்சார்பற்ற அறநெறி நூலான திருக்குறளுக்கு முக்கியமளித்து வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை என நிறையப் பணிகள் இடம் பிடிக்கின்றன.
தம் பதினேழாவது வயதில் முறையாகத் தம் அரசியல் பணியைத் துவக்கியவர் இந்தியாவின் முக்கிய அரசியல்தலைவராக பரிணமித்தார். தனிப்பட்ட முறையில் தாம் போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியைக் கண்டவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, கட்சித் தலைவராகயென நெடியதொரு அரசியல் பயணத்துக்குச் சொந்தக்காரர்; சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முன்னுரிமையளித்தவரென கருதப்படுபவர்.
பொருளாதாரச் சமுத்துவம், பாலினச்சமுத்துவம் முதலானவற்றுக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயற்படுத்தியவர். தமிழ்நாட்டில், மூன்றாம்பாலின நல வாரியத்தை நிறுவியவர். சமத்துவபுரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். 'உடல் ஊனமுற்றோர்' எனும் சொல்லுக்கு மாற்றாக, 'மாற்றுத்திறனாளிகள்' எனும் சொல்லை அறிமுகப்படுத்தி, அவர்களையும் மற்றவருக்கு இணையாகவும் ஈடாகவும் உள்ளடக்கிய பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் தலைப்பட்டவர்.
உலகளாவிய அளவில் ஏற்படும் சமூகச் சீர்திருத்தங்களைக்கற்று உடனுக்குடனே அவற்றைத் தமிழர்களுக்கிடையேயும் அறிமுகப்படுத்துவதில் துடிப்புமிக்கவராகத் திகழ்ந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தம் 94ஆவது வயதில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் ஏழாம் நாள் விடை பெற்றுக் கொண்டவரானார்.
'உடன்பிறப்பே' என விளிக்கும்பாங்கினைத் தனித்துவமாய் அறிமுகப்படுத்திக் கடைபிடித்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், சொற்களினூடாகவும் நல்லபல திட்டங்களின் வழியாகவும் தமிழின் அடையாளங்களைக் கட்டமைத்துத் தமிழின் அடையாளமாகவே ஆகிவிட்டிருக்கின்றார்! உலகெங்கும் அவரது நூற்றாண்டு விழாக்கள் கடைபிடிக்கப்படுகின்றன; அமெரிக்காவிலும்!!
[நூற்றாண்டு விழா, சமத்துவம் முதலானவற்றை முன்னிறுத்திக் கடைபிடிக்கப்படும் விழாவின் மலரில், காய்தல் உவத்தல் புகழ்ந்தோதலற்ற ஆவணத்தன்மை கொண்டதொரு கட்டுரையாக, முதற்கட்டுரையாக இடம் பெற வேண்டிய அறிமுகக்கட்டுரை இஃது. இஃகிஃகி]
-பழமைபேசி.
7/01/2024
காவியம்
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
-பிரமிள்
நவீனக்கவிதையிலக்கியப் புலத்தில் இதனை வாசித்திராதவர் அரிதுயெனும் அளவுக்கு, எல்லாராலும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதை இது.
உணர்வுக்கவிதைகளைக் காட்டிலும் தத்துவார்த்தக் கவிதைகளே காலத்தால் மங்காதனவாக இருக்கின்றன. இதுவும் அந்த இரகத்தைச் சார்ந்ததுதான்.
பறவைக்கு இரு சிறகுகள். அடித்து அடித்துப் பறக்கின்றது. வால்ப்பகுதியைத் தேவைக்கு ஏற்றவாறு திருப்பியும் வளைத்தும் தாம் செல்ல வேண்டிய திசையை, வேகத்தைத் தீர்மானித்துக் கொள்கின்றது. இம்மூன்றுக்கும் அடிப்படையாக இருப்பன அவற்றுக்குள் இருக்கும் இறகுகள். இப்படியான இறகு ஒன்று, பிரிந்த இறகு ஒன்று, பறவையினின்று பிரிந்த இறகு ஒன்று, காற்றில் அல்லாடி அல்லாடி அங்கிங்கெனதாபடிக்கு அடிக்கப்பட்டுத் தாள இறங்கிக் கொண்டிருக்கையில், காற்றின் தீராத பக்கங்களில், இவ்வெளியில், தீராத இவ்வெளியில் காற்றினால் அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அந்தப் பறவை எங்கெல்லாம் பறந்து உயர்ந்து உயர்ந்து சென்றதோ, அந்த வாழ்வையெல்லாம், தரையைத் தொட்டு மக்கி மண்ணாகிப் போகும் வரையிலும், காற்றுவெளியின் பக்கங்களில், அந்தப் பறவையின் சுகதுக்கங்கள், சூதுவாதுகள், நல்லன தீயன, உயர்வு தாழ்வுகள் என எல்லாவற்றையும் சொல்லிச் செல்கிறது என்பது நேரடியாக நாம் பொருள் கொள்ளக்கூடியது.
நல்ல கவிதை என்பது நல்லதொரு ஊடகம். ஊடகத்தினூடாக நாம்தான் நமக்கான அகப்பொருளைக் கண்டடைந்தாக வேண்டும்.
’சிறகிலிருந்து உதிர்ந்த இறகு ஒன்று’ என இருக்குமேயாயின் அது இயல்பாக நடக்குமொன்றாகக் கருதியிருப்பேன். ஓர் ஆசிரியர், மருத்துவர், இப்படி எவராகினும் ஒருவர், ஒரு நிறுவனம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றதொரு பறவை உயரே உயரே செல்ல, பயணிக்கத் துணை புரிந்த இறகாக இருந்து, அந்த அனுபவத்தை, கண்டதை, அறிந்து கொண்டதை, ஓய்வுக்குப் பின்னரான காலத்தில், மக்கி மண்ணாகிப் போகும் வரையிலும் சொல்லிச் செல்லும் காவியமெனப் புரிந்து கொண்டிருப்பேன். “பிரிந்த” எனும் சொல்தான் நம்மை இன்னும் ஆழ்ந்து யோசிக்க வைக்கின்றது.
சமூகத்தில் பார்க்கின்றோம். நைச்சியமான பேச்சுகள். உணர்வூட்டுகள். சாதி, சமயம், சினிமா, குழுவாதம், கும்பலிசம், இனவாதம், நிலப்பரப்பு இப்படி ஏதாகிலும் ஓர் ஆயுதம். நிறுவனங்களில் பார்க்கின்றோம். நாமெல்லாம் ஒரு குடும்பம் என்பார்கள். ஒற்றுமையே வலு என்பார்கள். நிறுவனத்தின் சொத்தே நீங்கள்தாம் என்பார்கள். உழைப்புச் சுரண்டலை எங்கும் பார்க்கலாம்.
மூத்தபிள்ளை பிறந்திருந்த நேரம். என்றுமில்லாதபடிக்குப் பனிப்பொழிவு. அலுவலகங்களுக்கு விடுமுறை. முக்கியமான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அலுவலகத்தில். விடிய விடிய வேலை பார்த்த காலமெல்லாம் உண்டு. காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்கின்றேன். எனக்கு முன்பாகவே இயக்குநர் பொறுப்பில் இருக்கும் அம்மையார் வந்திருந்தார். அவர் கேட்ட முதல் வினா, “ஏன் வந்தாய்?”. அதற்குப் பிறகு உட்காரவைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார், சொன்னார், “family first no matter what".
பொன்னான காலத்தைக் காவு கொடுத்து விட்டு, பிரிவுக்கு ஆட்பட்ட பின்னர் புலம்பிக் கொண்டிருப்பர். ’அவசரத்தில கல்யாணம், அவகாசத்துல அழுகை’ என்பார்களே அதைப் போல. கறிவேப்பிலையைப் போலத் தூக்கி வீசி விட்டார்களேயென்பதைப் போல; காற்றின் தீராத பக்கங்களில், வாழ்வின் எஞ்சிய காலம் முழுமைக்கும்! அப்படியான ஒரு துயரத்தைத்தான் நான் இக்கவிதையினூடாகப் புரிந்து கொள்கின்றேன். புரிந்து? மனம் பண்படுகின்றது. நிதானத்தைக் கொடுக்கின்றது. அதுதான் இலக்கியம்.
-பழமைபேசி.