9/15/2024

ஃபெட்னா - பொருளாளர் பொறுப்பு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேர்தல் இடம் பெற்றது. தேர்தலில் ஓர் அணிக்கு ஆதரவாக பரப்புரைக்கான உள்ளீடுகள் எழுதுவதில் நானும் பங்கு கொண்டேன் என்பது யாவரும் அறிந்ததும் வெளிப்படையானதுமான ஒன்று. எழுதுவதற்கும், வெளிக்கொணர்வதற்குமான பற்றியங்கள் நிறைய இருந்தன. அப்போதே சொல்லியிருந்தேன், கனடியர் பொருளாளர் பொறுப்பு வகிப்பதில் எவ்விதச் சிக்கலுமில்லையென. குறுகிய நேரத்தில் எத்தனை பற்றியங்களைத்தான் வெளிக்கொணர்வது? அதுகுறித்து விரிவாக எழுதக் கால அவகாசம் வாய்த்திருக்கவில்லை.

பரப்புரையின் போது, பொருளாளர் பொறுப்புக்குப் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் குறித்து உண்மைக்குப் புறம்பான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கனடியவாசி ஒருவரால் அமெரிக்காவில் இருக்கும் அமைப்பின் பொருளாளராகத் தொடர்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதென. இப்படிச் சொல்வதில் இருவேறு அநியாயங்கள் உள்ளன.

முதலாவது, அமைப்பின் சட்டக்கோப்பில் போட்டியிடுவதற்கான உரிமைகள் கொடுக்கப்பட்டும், போட்டியிடும் வேட்பாளரின் இருப்பிடம் கொண்டு ஒதுக்கிப் பார்த்து பாரபட்சம் காண்பிப்பது. அடுத்தது, உண்மைக்குப் புறம்பாக இட்டுக்கட்டி ஊழலுக்குத் துணை போவது. எப்படியெனப் பார்க்கலாம்.

இலாபநோக்கற்ற, வரிவிலக்குப் பெற்ற நிறுவனத்துக்கென சில ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும் வங்கிக் கணக்குத் துவக்கப்பட. நிறுவனத்தின் ஒன்றிய அரசுக்குறியீட்டு எண், முகவரி, சட்டக்கோப்பு, இயக்குநர்களால் அலுவலருக்கு அங்கீகாரமளிக்கப்பட்ட சான்று, அலுவலரின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் பொருட்டு இருவேறு அடையாளச்சான்றுகள், அவ்வளவுதான். https://donorbox.org/nonprofit-blog/nonprofit-banking. இதன் அடிப்படையில் உசபெக்கிஸ்தான், உகாண்டா என எங்கிருந்தும் அந்நாட்டுக்குடிமகரால் ஒரு நிறுவனத்தின் வங்கிக்கணக்குப் பராமரிப்பாளராகச் செயற்பட முடியும்.

தற்போதெல்லாம் இணையவழியில் பணப்பரிவர்த்தனை நிகழ்வதால், இணையவழிக் கணக்கு, அதற்கான காப்புஎண் பெறல் என்பதும் தேவையாக இருக்கின்றது. அதன்படிக்கு அவரவர் அலைபேசிக்கு கடவுச்சொல் அனுப்பப் பெற்று, உள்புகல் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. வெளிநாட்டு எண்ணாக இருந்தால், அமெரிக்க வங்கிகளுக்கு அலைபேசிக் கட்டணம் செலுத்த நேரிடும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும்போது. ஆகவே வங்கிகள் உள்ளூர் அலைபேசி எண்ணைக் கேட்கின்றன. இது இணையகாலம், உலகமயமான உலகம். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான கால்சென்ட்டர்கள் அமெரிக்க எண்களினூடாக என்பதெல்லாம் அறதப்பழைய விசியம். ஆமாம், உகாண்டா முகவரி கொடுத்து, உகாண்டாவிலிருந்து கொண்டேவும் அமெரிக்க அலைபேசி எண் பெறமுடியும். https://justcall.io/blog/how-to-get-us-phone-number.html

தேர்தல் முடிந்து விட்டது. வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று(~60%) ஒட்டுமொத்த அணியும் வெற்றி பெற்று, பொறுப்புமாற்றுப் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன.

அதிகாரவர்க்கத்தின், ஆதிக்கசக்திகளின் தீண்டல்கள் ஓய்ந்தபாடில்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கு மேல் தகவல்களாக ஏதாவது ஒன்றினை அரைகுறையாக முன்வைத்து, பொறுப்புமாற்றுப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகின்றன சில சக்திகள்.

முன்னெப்போதும் இல்லாதபடிக்கு 40 நாட்களுக்குள், பொருளாளருக்கான வங்கிக்கணக்குகள் முறையாக, புதிதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற கனடியக்குடிமகரும் பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றவருமான அலுவலர்வசம் வந்து சேர்ந்திருக்கின்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருந்தும், மக்களால் மக்களாட்சிக் கொள்கைப்படிக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களை இயங்கவிடாமற்செய்யும் இச்சக்திகளின் அடிப்படை என்ன? அதிகாரவெறி, புகழ்வெளிச்ச அடிமைத்தனம், கடந்தகாலத்தில் செய்யப்பட்ட ஊழல்கள் ஏதேனுமிருப்பின் அவை வெளிப்பட்டுவிடுமோயென்கின்ற அச்சவுணர்வு போன்றவையாகத்தான் இருக்க முடியும். எளியமக்கள் பொதுப்பணியாற்றக் கூடாதாயென்ன? அறத்துக்கு உறுதுணையாய் இருங்கள். அல்லாவிடில், நாளையோ, நாளைமறுநாளோ, பாதிக்கப்படப்போவது நீங்களாகவும் இருக்கலாம்.

-பழமைபேசி, செப் 15, 2024.

No comments:

Post a Comment