4/20/2011

தாயகப் பயணம் - 3

சென்றேன்; களித்தேன்; வந்தேன் என மூன்று சொற்களில் எனது தாயகப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். எனது நண்பனது முகம் அட்டமக் கோணலாகிப் போனது. எதையும் விலேவாரியாக, அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்துப் போட்டுப் பின் கட்டமைப்பதில்தானே சுவாரசியம்?

ஆசான் நாஞ்சில் பீற்றர் அண்ணன் அவர்களோடு அன்றாடம் அளவளாவுவது வழக்கம். ஆனால், கடந்த ஐம்பது நாட்களாகப் பேசிக் கொள்ளவில்லை. இன்று பேசினேன். ஒரு நாலு வரிகளாவது எழுதலாமே என அங்கலாய்த்தார். நான்கு வரிகள்தானா? நாலாயிரம் வரிகள் கூட எழுதலாம்தான், அயர்ச்சி என்பது இல்லாதிருந்தால்!!

ஆம். தனிமனிதனாக தாயகப் பயணம் வெகு சிறப்பாக இருந்தது. ஆனால் எம் சமுதாயம் சிதறுண்டு கிடப்பதைத்தான் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

சென்ற ஒரு சில தினங்களுக்குள்ளாகவே, ஒரு திருமண வைபவத்திற்குச் சென்றிருந்தேன். வெகு விமரிசையாக நடந்த மங்கல் நாண் பூட்டு நிகழ்ச்சி அது. சைவத் தமிழ் ஓதுவார்கள், தமிழ்மறைகள் ஓத, பெரியவர்கள் புடை சூழ மனம் கொண்டோரால் மணமக்கள் வாழ்த்தப்பட்டார்கள்.

கல்யாணப் பந்தலிலே குதூகலமாய்க் குதித்தோடும் இளஞ்சிறார்களைக் காணவில்லை. அரக்கப் பறக்க தெறித்தோடும் உறவுக்காரர்களின் பரபரப்புத் துளியேனும் காணப்படவில்லை. குறித்த நேரத்திற்கு வந்தார்கள். அமர்ந்தார்கள். சென்றார்கள். இப்படி ஒரு ஈடுபாடின்றி, முகதாட்சண்யத்திற்காய் வரத்தான் வேண்டுமா?!

எனது ஊர்க்காரர் அடுத்த தெருவில் குடும்ப சகிதமாய்க் குடியிருப்பதாய்ச் சொன்னார்கள். கோவை கண்பதியில் இருக்கும் நண்பரைச் சந்திக்க, கண்பதி கடந்து, காந்திபுரம் கடந்து, சிதம்பரம் பூங்கா வரை சென்று தேடியலைந்து நுங்காங்குலை வாங்கி வந்தேன். நானே அவற்றை வெட்டித் தர, எனது தாயின் கைவண்ணத்தினாலான நுங்காம்பச்சடி, நுங்காநீர், இளம்பனங் கற்கண்டுடன் கூடிய நுங்காங்குல்குந்து மற்றும் இராகி வடைச் சிலாம்புகளுடன் அம்மாவைக் கூட கூட்டிச் சென்றேன்.

நண்பன் முகமலர வரவேற்றான். அவனுக்கு வாய்த்த பட்டணத்து மங்கை, முன் வந்து பையை வாங்கிச் செல்வார் என எதிர்பார்த்தேன். அவனுடைய பிள்ளைகள் வந்து பையில் இருப்பதைப் பதம் பார்க்கும் என நினைத்திருந்தேன்.

வைத்தது வைத்தபடியே இருந்தது பைக்கட்டு. ”அம்மா, எடுத்து எல்லாருக்கும் குடுங்க” என்றேன். “இப்பதான் டிபன் சாப்ட்டோம்” என்றான் நம்மாள். கடித்துக் குதறினேன். “என்றா, மாகாளியாத்தா கோயில் பொங்கச் சோத்துக்கு நீ அலைஞ்ச கதையெல்லாம் உன்ற பொண்டாட்டிகுட்ட சொன்னியா நீயி?” என்றேன் பெருங்குரலில். ஒழுங்கு மரியாதையாக தட்டுகளில் இட்டு அவனும் தின்றான். மனைவியையும் ருசி பார்க்க வைத்தான்.

“அட, உனக்கு எத்தனை கொழந்தைக?”

“ஒன்னுதான்!”

“எனக்கு மூணு! இஃகி, இஃகி!!”

“...”

“எங்க காணோம்?”

“உள்ள படிச்சிட்டு இருக்கான்!”

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தோம். கடைசி வரையிலும் முகதரிசனம் கிடைக்கவே இல்லை. அவனும் அமெரிக்கா, அது, இது என்றெல்லாம் கூவிப்பார்த்தான். மனையாளின் கடைக்கண் அனுமதிக்கவில்லை போலிருக்கிறது. ஊர்த்தலைவாசலில் தலை தெரிந்தாலே ஆர்ப்பரிக்கும் காலம் எங்களுடையது. வீட்டிற்குப் பண்டங்களோடு வந்திருந்தும், பாராமுகமாய் இருப்பது இக்காலத்தவர் காலம் போலும்?! நல்லா இருங்கடா சாமி!!
(எங்க ஊர்லதான் முதல் கூட்டம்; நாங்களும் கலந்துகிட்டம்ல?)
(அன்பு வலைஞர் விஜய் திருமணத்துல கலந்துகிட்டதும் நான் பெற்ற பேறு)
(எங்கப்புச்சி கவி காளமேகம் சொல்வாரு; மனுசனுக்குள்ள இருக்குற அகந்தை போய்டிச்சின்னா, அல்லாரும் பரவசம்னு... நாங்களும் அப்படித்தான இருந்தோம்?!)

11 comments:

சின்னப் பையன் said...

ஆஹா வந்துட்டாருய்யா வந்துட்டாரு. அடுத்த ஆட்சி அமைச்சிட்டுத்தான் வருவீங்கன்னு நினைச்சேன். :-))

Chitra said...

தேடியலைந்து நுங்காங்குலை வாங்கி வந்தேன். நானே அவற்றை வெட்டித் தர, எனது தாயின் கைவண்ணத்தினாலான நுங்காம்பச்சடி, நுங்காநீர், இளம்பனங் கற்கண்டுடன் கூடிய நுங்காங்குல்குந்து மற்றும் இராகி வடைச் சிலாம்புகளுடன் அம்மாவைக் கூட கூட்டிச் சென்றேன்.


.....ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்....... நாவில் அப்படியே நீர் ஊறுது.... ம்ம்ம்ம்......

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

naanjil said...

நான்றி
தம்பி ம‌ணி
தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்

Unknown said...

//தாயின் கைவண்ணத்தினாலான நுங்காம்பச்சடி, நுங்காநீர், இளம்பனங் கற்கண்டுடன் கூடிய நுங்காங்குல்குந்து மற்றும் இராகி வடைச் சிலாம்புகளுடன் // வயித்துக் கடுப்பு கிளம்புதுங்க்ண்ணே! கொஞ்சம் அமெரிக்காவுக்கு பேக் பண்ணிட்டு வந்திருக்கலாமில்லே? இப்ப நான் எங்கே போறது நுங்குக்கு?

வடைச் சிலாம்பு???? எங்க ஊர்ல, சிலாம்பு / சிராம்பு என்றால், சின்னஞ்சிறு மரத்துண்டு...

ஓலை said...

Romba soodaa silu silukkuthu.

Paavam nanbar. Paasamaa! pazhasaa! Nongu thattira maattaga appuram.

Kumky said...

அய்யய்யோ....

மாப்பு.,

:))))

vasu balaji said...

/மங்கல் நாண்/
/கண்பதியில்/

ஏனுங் மாப்பு? ஊருக்கு திரும்பயில பக்கத்து சீட்டுல மார்வாடி ஜிகிடியா?

/மனுசனுக்குள்ள இருக்குற அகந்தை போய்டிச்சின்னா, அல்லாரும் பரவசம்னு... நாங்களும் அப்படித்தான இருந்தோம்?!)/

அய் அய்! அது அ ‘கந்தை’ போனதால இல்ல. ‘மொந்தை’ போனதால.

அடுத்ததா ஜீப் ஏறப்போற கும்க்கிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அரசூரான் said...

வருக! வருக!!

ஈரோடு கதிர் said...

அந்த நாய் படாதபாடு பட்டுடுச்சு!!!

☼ வெயிலான் said...

// அந்த நாய் படாதபாடு பட்டுடுச்சு!! //

சிலேடையில் அசத்துறீங்களேண்ணே! :)